118
"இருக்கட்டும்; எனக்குச் சில்லறை வேண்டும். சாப்பாட்டுக்குப் பணம் கொடுத்துவிட்டு அப்படியே சில்லறை வாங்கிக் கொண்டு வாருங்கள்” என்றாள் சகுந்தலா.
"சகுந்தலா எத்தனை, நாசூக்காகப் பேசிப் பணத்தை என்னிடம் கொடுத்துவிட்டாள்!" என்று தனக்குள்ளாகவே அவள் திறமையை மெச்சிக் கொண்டான் சுந்தரம்.
அவன் சாப்பாடு எடுத்துக்கொண்டு திரும்பி வருவதற்குள் அவனுக்காக பெஞ்சு மீது தயாராக படுக்கையைப் போட்டு வைத்தாள் அவள். சற்று நேரத்துக்கெல்லாம் சுந்தரம் திரும்பிவந்தான். அவன் பசியுடன் இருப்பதை உணர்ந்து கொண்ட சகுந்தலா, அவசரம் அவசரமாக இலையைப் பிரித்துப்போட்டு காரியரைத் திறந்து ஒவ்வொன்றாகப் பரிமாறினாள்.
"உருளைக் கிழங்கு பொடிமாஸ்!" என்றான் சுந்தரம்.
"அப்பளம் கூட இருக்கிறது!" என்றாள் சகுந்தலா. அவர்களிருவருக்கும், மாரியம்மன் திருவிழாவன்று மாங்குடியில் நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்துவிட்டன!
"மாங்குடியில் அன்று என் அம்மாவுக்குத் தேள் கொட்டிவிட்டபோது நீ எனக்குப் பரிமாறினாயே, அது ஞாபகம் இருகிறதா!' என்று கேட்டான் சுந்தரம்.
"ஆமாம், ஆமாம்: அன்று இரவு வாசலில் போய் . படுத்துக் கொண்டீர்களே, அது கூட நினைவு இருக்கிறது!" என்று பதிலுக்குக் கேலி செய்தாள் சகுந்தலா!
"நீ வாசல் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாயே, அது நினைவிருக்கிறதா?..." என்றான் சுந்தரம்.
"அப்புறம் கதவைத் தட்டி உள்ளே வந்து படுத்துக் கொண்டீர்களே, அது நினைவிருக்கிறதா?..." என்றாள் சகுந்தலா.
"காற்றிலே விளக்கு அணைந்ததே அது நினைவிருக்கிறதா?”