68
எதிலுமே மனம் ஓடவில்லை. வாசலுக்கும் உள்ளுக்குமாக அலைந்து கொண்டிருந்தார் அவர்.
"அதோ வந்து விட்டாரே சர்மா!"என்றது ஒரு குரல். அதைக் கேட்டபோதுதான் கங்காதரய்யரின் முகம் மலர்ந்தது "எங்கே?" என்று கேட்டுக்கொண்டே வாசலுக்கு விரைந்தார். இதற்குள் சர்மாவின் குதிரை வண்டி வாசலில் வந்து நின்றது"
"வாங்கோ, வாங்கோ! என்ன இப்படிச் செய்து விட்டீர்கள்?' என்றார் கங்காதரய்யர்.
"வழியில் குதிரை 'மக்கர்' செய்துவிட்டது!" என்றார் சர்மா. சகுந்தலாவும் குதிரை வண்டியிலிருந்து இறங்கி வருவதைக் கண்ட சுந்தரின் தாயார் பார்வதி அம்மாள், "வாடி அம்மா, வா! எங்கே வராமல் இருந்துவிடுவாயோன்னு நினைத்தேன்; நல்ல வேளை!' என்று அன்புடன் அவள் கைகளைப் பிடித்துப் பந்தலுக்குள் அழைத்துச் சென்றாள்.
"ஆசீர்வாதமெல்லாம் ஆகிவிட்டதா?" என்றார் சர்மா.
"நடந்துகொண்டே இருக்கிறது; நல்ல சமயத்தில் வந்தீர்கள்!” என்று சர்மாவை அழைத்துச் சென்றார் கங்காதரய்யர்.
திடுமென சகுந்தலாவைக் கண்டதும் சுந்தருக்கு ஒரு கணம் ஒன்றுமே தோன்றவில்லை.
அல்லி மலர் ஒன்று ஆடி வருவதுபோல் அழகாக நடந்து வந்தாள் சகுந்தலா.
‘சகுந்தலாவா இவள்! எவ்வளவு அதிசயமாக, அழகாக மாறிப் போயிருக்கிறாள்!' சுந்தர் வியந்தான்.
சகுந்தலா கன்னங் குழியச் சிரித்தாள். அந்த மோகனச் சிரிப்பு அவன் உள்ளத்தை அசைத்துவிட்டது. ஆனாலும், 'இவளுடன் இனி எனக்கென்ன பேச்சு?' என்பதைப்போல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான் சுந்தரம். சகுந்தலா வந்ததும் ஆயிரம் கேள்விகள் கேட்கவேண்டும்