வழுக்கு நிலம் 123 அன்று சொன்ன இறுதி மொழிகளுக்குமேல் எந்தமொழியும் அவள் வாயில் வரவில்லை. "ஐந்தாயிரம் வேண்டாம்" என்று மறுத்த அந்தச் சொற்கள் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன. "விருப்பமிருந்தால் வந்து அழைத்துப் போகட்டும்" என்று சொல்லியதன் ஆழ்ந்த பொருள் ஒன்றும் அவள் தாய்க்கு விளங்கவில்லை. "அது எப்படி அவன் வந்து அழைத்துப் போவான்?” "ஏன்? தானாக ஒருநாளைக்கு வந்து அழைக்காமலா போய் விடுவான்?" “நிச்சயமாக அழைக்கமாட்டான். அவனைத்தான் யாரோ ஒருத்தி வலையில் போட்டிருக்கிறாளே." "இப்படிக் கூடவா இந்த மனுஷன் மகளின் வாழ்வைப் பாழ்படுத்துவான்.” "பெற்ற மகளிடம் பாசம் இல்லாமல் மகனிடம் மட்டும் பற்று வைப்பது ஏன்? எதிர் காலத்தில் அவன் மட்டும் இவரைத் தாங்குவான் என்பது என்ன உறுதி வந்துள்ள மருமகள் பார்வதியை ஆதரிப்பாள் என்று சொல்வதற்குக் கூட இடமில்லையே." அவள் மனத்தில் பார்வதியைச் சுற்றி எழுந்த கவலையின் காரணமாக இந்த எண்ணங்கள் தோன்றிக் கொண்டிருந்தன. சிறிது நேரத்திற்கெல்லாம் கட்டை வண்டியின் கலகலத்த ஒலி சலசலத்துக் கொண்டிருந்தது. அண்ணியும் அண்ணனும் வருகிறார்கள் என்பதைப் பார்வதி உணர்ந்தாள். அவர்கள் இறங்கி வீட்டிற்குள் வருவதற்குள் அவர்கள் கொண்டுவந்த சிறு கூடையும் அதற்குள் இருந்த பலகாரங்களும் வீட்டின் தாழ்வாரத்தில் ஏறின. மாணிக்கம் பின்னும் மீனாட்சி முன்னும் வீட்டிற்குள் நுழைந்தனர். 'காஞ்சிபுரத்துப் பட்டுப் புடைவை அவள் அண்ணியை அலங்கரித்தது. அந்தப் பச்சை நிறப்புடைவை அவள் தோற்றத்திற்கு எடுப்பாக இருந்தது. அவள் தாயார் வீட்டில் எடுத்துக் கொடுத்த புடைவை என்பதை அவள் தெரிந்து கொண்டாள். இதற்கு முன்னால் அண்ணி தன்னிடம் புடைவைகளின் தொகை, நிறம், வயது, விலை, சரித்திரம் இவையெல்லாம் கூறக் கேட்டிருந்ததால் இது புதுப் புடைவை என்பதைத் தெரிந்து கொண்டாள். அமைதியாக 'ஐஸ் போல சில்லென்றிருந்த வீடு காப்பி போலச் சூடாக ஆயிற்று. மறுபடியும் வீட்டில் கல கலப்பும்