பக்கம்:வழுக்கு நிலம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 171 "என்னிடம் நீங்கள் இன்னும் மறைக்கப்பார்க்கிறீர்கள். நீங்கள் தொடர்பு கொண்ட அந்த மோகினித் தெய்வம்.” "அவள் பெண் தெய்வம். நீ கேட்பது மோகினித் தெய்வம். அந்தப் பெண் தெய்வத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதோ மேஜைமேல் இருக்கிறதே, அந்தக் கடிதத்தைப் படி அவளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். "இந்தக் குப்பைப் புத்தகங்களை அடுப்புப் பற்றவை" என்று குதிரைப் பந்தயப் புத்தகங்களை எடுத்துக் கொடுத்து உடன் எரித்தான். அந்தப் பழைய வாழ்வு கருகிச் சாம்பலாகியது. காய்ச்சிய காப்பியைக் கொண்டுவந்து வைத்தாள். கீழே இருக்கும் வீட்டுக்காரர் மேல் மாடிக்கு ஒரு வேலைக்காரப் பையன் மூலம் கொடுத்தனுப்பிய பாலை ஊற்றிக் கொடுத்தாள். அவன் அதைக் குடித்துக்கொண்டு ஆறுவதற்காக அந்தக் குவளையை மேஜைமேல் வைத்தான். அதில் அந்தக் குளிரில் புகை மென்மையாக வந்து கொண்டிருந்தது. மேஜை மேல் இருந்த கடிதத்தை எடுத்துக் கொடுத்தான். "படித்துக்கொள். நான் தடை சொல்லவில்லை.” அன்புமிக்க நண்பர் அவர்களுக்கு, அன்றையதினம் நான் திடீரென்று உங்கள் வீட்டிலிருந்து சொல்லாமல் வந்து விட்டது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். நான் அங்கு அடைந்த விழிப்பின் காரணமாகத் தான் அந்த இடத்தை விட்டு வந்துவிட்டது. நான் உங்களை மனமாரக் காதலித்தேன். உங்கள் அழகில் ஈடுபட்டேன். உங்கள் அழகு என்னைக் கவர்ந்தது, அதை நான் மறுக்கவில்லை. அதைப் போலவே நீங்களும் என்னைக் கண்டு கவர்ச்சி கொண்டீர்கள் என்பதை நீங்கள் மறுக்க முடியாது. . நான் உங்களிடத்தில் முதலில் கொண்ட பரிவு பிறகு காதலாக மாறியது. ஆனால் நீங்கள் ஒரு நோக்கும் இல்லாமல் பழகிப் பிறகு ஒரு நோக்கத்தோடு என்னைப் பயன்படுத்த நினைத்தீர்கள். அது தவறு என்பதை எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/173&oldid=898144" இலிருந்து மீள்விக்கப்பட்டது