பக்கம்:வாழும் வழி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

107



இதனுடைய விரிவான கருத்தாவது:- “ஏ சுந்தரா! நீ என்னோடு வன்மை பேசி வன்றொண்டன் என்னும் பெயர் பெற்றாய்; அது நிற்க. நீ என்னை வணங்க வேண்டும். எனக்கு அன்பு நிறைந்ததும் சிறப்பு மிக்கதுமாகிய அர்ச்சனை என்று சொல்லப்படுவது வேறொன்றுமில்லை. அப்பாட்டும் தமிழ்ப்பாட்டே ஆதலின் இம்மண்ணின் மேலே நீ என்னைப் பாட வேண்டுமாயின் தமிழ்ச்சொல்லினாலே பாடுவாயாக” - என்பதாம். ஈண்டு தூமறை பாடும் வாயாராகிய சிவ பெருமானே இங்ஙனம் கூறினார் எனச் சேக்கிழார் அமைத்துள்ள செந்தமிழ்த் திறம் நுணுகி நோக்கி மகிழ்தற்குரியதாகும். மற்றும் அப்பர், சம்பந்தர், மணிவாசகர் முதலிய அடியார்களையெல்லாம் நோக்கி இங்ஙனம் கூறாது, அர்ச்சனை செய்யுந் தொழிலுடைய குருக்கள் என்று சொல்லப்படுகின்ற ஆதிசைவ மரபிலே தோன்றிய சுந்தரரையே நோக்கி இங்ஙனம் கூறியதாகக் கூறியிருக்கும் நயம் இன்னும் உய்த்துணர்ந்து களித்தற்கு உரியதாகும். “இப்போது செய்கின்ற அர்ச்சனை அன்புடையதாகவும் சிறப்புடையதாகவும் கடவுளால் கருதப்படமாட்டாது. அவர்க்கு அன்பில் பெருகிய சிறப்பில் மிக்க அர்ச்சனை தமிழ்ப்பாட்டுதான். அதைத் தான் அவர் விரும்பி ஏற்பார். ஆதலின் தமிழில்தான் பாட வேண்டும்” என்ற குறிப்புப் பொருளை இச் செய்யுள் நமக்குத் தருகின்றது. மேலும் சேக்கிழார், “ஞாலம் அளந்த மேன்மைத் தெய்வத் தமிழ்”, “அசைவிலே செழுந்தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்ல” என்னும் பாடல் பகுதிகளால், தமிழின் தெய்வத் தன்மையை வலியுறுத்தி, மற்ற மொழிகளின் ஆட்சியினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/109&oldid=1110472" இலிருந்து மீள்விக்கப்பட்டது