142 வாழையடி வாழை
தமிழ்ச் சொற்களின் தண்டாத சிறப்பினை,
பூவைப்போல் பெண்ணென்றே
'பூவைஇவள்' என்றுரைத்தார்
பாவை வளர்த்ததனால்
'பாவைஇவள்' எனப் பகர்ந்தார்!
'மையலுக்கும் மானிடர்க்கும்
மைவிழியாம் ஊசியினால்
தையல்போட் டாள்தன்னைப்
'தையல்’ எனக்குறித்தார்
என்னும் பாடலில் கவிஞர் புலப்படுத்தியுள்ளார். கவிஞர் ஏற்கும் சபதம்,
ஏற்பதொரு சபதம்:
'என்தமிழை அழிப்பாரை
துண்டாக வெட்டித்
துகளாக்கி உரமாக்கி
வண்டாடும் பூ மலர
வைப்போம் நாம்’
என்பதுதான். திரையுலகில் பெரும்புகழ் பெற்றவை கவிஞர் கண்ணதாசரின் பாடல்களேயாம். திரைப்பாடல்கள் என்னும் கவிதை வானில் தன்னிகரற்று ஒளி வீசித் திகழும் விண்மதி இவரே.
'திங்கள்முடி சூடுமலை தென்றல்விளை யாடும்மலை
பொங்கருவி வீழுமலை எங்கள் மலையே'
என்ற பகுதி காட்டின் மேன்மையை விளக்கும்.
காதல் நினைவினிலே பேதமில்லை; பிரிவென்றால் வாழ்வுமில்லை என்கிறார் கவிஞர்.
‘செந்தமிழ்த் தேன்மொழியாள்-நிலாவெனச்
சிரிக்கும் மலர்க்கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலைகு னிவாள்'