புலவர் என்.வி.கலைமணி
⃞ 101
வழக்கமாக அவரிடம் வருகிற நோயாளிகளும் வேறு டாக்டரைத் தேடிப் போய் விட்டார்கள்.
டாக்டர் பால் எர்லிக்கின் பூச்சி பிடிக்கும் வேலையைக் கண்டு, பைத்தியக்காரன், சோம்பேறி, வேலையற்ற வீணன், திறமையைச் சரிவரப் பயன்படுத்தத் தெரியாத உன்மத்தன் என்று ஊர் மக்கள் வசைமாரி பொழிந்தபடியே இருந்தார்கள்.
இவ்வளவு சோதனைகளையும்,வேதனைகளையும் சிறிதுகூடக் கவனியாமல், பூச்சிக்கு உரமேற்றும், சாயம் போடும் வேலையைச் செய்தபடியே இருந்தார்.
இலட்சியவாதிகள், தமது இறுதி இலக்கை அடையும் வரை, எந்தப் பிரச்சினைகள் மீதும் அக்கறை கொள்ள மாட்டார்கள்.
அதற்கேற்ப பசியையும் பாராமல், கண்ணும் சோராமல் ஆராய்ச்சியிலேயே ஆழ்ந்து விட்டார் டாக்டர்.
நாளுக்கு நாள், டாக்டர் ஒரு பூச்சிக் கண்காட்சி சாலையினையே தனது தோட்டத்தில் அமைத்து விட்டார்.
கிருமிகளின் உடலமைப்புக் கேற்ப, வளர்ச்சியின் வகைக்கேற்ப, அவற்றைத் தனித் தனியாகப் பிரித்துப் பாத்திரங்களிலே தண்ணீரை ஊற்றி, வரிசையாக வைத்திருக்கும் காட்சியானது, பார்ப்பவர் பரிகாசம் செய்யும் பள்ளிக்கூடமாக மாறி விட்டது.
துணிகளுக்கு நெசவாளர்கள் சாயம் போடுவதைப் போல, அவர் ஒவ்வொரு இனக் கிருமிகளுக்கும் சாயமேற்றியபடியே இருந்தார்.