என் நாடு
"சூழும் தென்கடல் ஆடுங்குமரி
தொடரும் வடபால்
அடல் சேர் வங்கம்
ஆழுங்கடல்கள் கிழக்கு மேற்காம்
அறிவுத்திறனும் செறிந்த நாடு."
"இது எனது நாடு, பொன்நாடு, நான் பிறந்த நாடு நானிலத்திலே இதற்கில்லை ஈடு" என்று உள்ளத்திலே உவகையும் எழுச்சியும் பொங்கிடச் செய்யும் விதத்திலே, எல்லைக்கோடும் எழிலும் விளக்கி, இயல்பும் வளமும் இயம்பி, கவி கனகச் சுப்புரத்தினம் (பாரதிதாசன்) திராவிட நாட்டுப் பண் அமைத்தார். திராவிடநாடு திராவிடருக்கே, என்ற பேரிகையைப் பெரியார் கொட்டினார். அந்த முழக்கம் வீரர்களின் கண்களிலே ஒளியையும், எதிரிகளின் நெஞ்சிலே சளியையும் கவிகளின் உள்ளத்திலே உணர்ச்சியையும் ஊட்டிற்று. பற்று எனும் பூந்தோட்டத்திலே மலர்ந்தது புரட்சிப் பண் ! அதன் மணம் எங்கும் பரவி எவருக்கும் மகிழ் வூட்டி வருகிறது.
திராவிடத் திருநாட்டினிலே ஆரிய அரசா? அதற்குப் பார்ப்பன முரசா? என்ற கேள்வி பிறந்து