திராவிடர் கழகம்
திராவிடர் கழகமும், பட்டம் பதவிகளை விட்டொழித்துவிட்டு, நாடு மீளவும் கேடு தீரவும் பணிபுரியும் அணிவகுப்பினை அமைக்கும் திட்டமும், உணர்ச்சியும் வேகமும் கொண்ட பல்லாயிரக்கணக்கான திராவிடத்
தீரர்கள் ஆதரவைப் பெற்றுவிட்டன. ஒரு குழுவின்வெற்றியென்று நாம் கருதவில்லை; ஒரு இயக்க வளர்ச்சியிலே முக்கியமான, குறிப்பிடத்தக்க ஒரு கட்டம் என்றே கருதுகிறோம். தீவிரமான திட்டங்களை நிறைவேற்றி விட்டது, மனத்திருப்திக்காக அல்ல! திட்டங்களைத் தீட்டி விட்டு, எட்டிநிற்போராக இருப்பவர்களைப்பற்றிக் கவலையில்லை. அத்தகையவர்களுக்குத் திட்டங்களைப் பற்றியும் கவலையில்லை. ஆனால், கஷ்டநஷ்டம் ஏற்கும் துணிவுடன் அன்று அங்குக்கூடிய வீரர்கள். கூட்டம் விரும்புவது, விடுதலைப் போரினையேயாகும்! விவேக சிந்தாமணிக்கு விளக்கஉரை ஆற்றும் காரியத்திலோ, அரசியல் தந்திரங்களுக்கு அட்டவணை தயாரிக்கும் வேலையிலோ, அந்த அஞ்சா நெஞ்சுபடைத்த ஆயிரமாயிரம் தோழர்களுக்கு
அக்கரை கிடையாது. அவர்கள், பட்டம் பதவி
கிட்டுமா என்று பக்குவம் பார்த்துப் பொதுவாழ்வு
நடத்தும் பண்பினரல்ல! ஒரு பெரிய, பண்டைப் பெருமை வாய்ந்த இனம் பாழாகிவிடுவதா, உலக வரலாற்று ஏடுகளிலே இடம்பெற்ற ஒருநாடு உதவாக்கரைகளுக்கு உலவுமிடமாவதா, இந்நிலையை மாற்றப் போரிடாது ஆண்மையாளர் என்ற பெய-