உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்தத் தைரியம்

39


உண்டு; இகம்பரம் என்று ஆரியன்மொழி கேட்டு ஏமாந்ததால் இகத்தை அவன் இகழ்ந்து வாதைப்படுகிறான். எனவே, பெரியார் "தமிழா ! நீ தனி இனம் ! தமிழா ! நீ தரணி ஆண்டவன் ! தமிழா ! உன்னை நீ உணராமல் உலுத்தருக்கு அடிமையானாய் ! பகுத்தறிவுப் படைதொடு, விடுபடு !!" என்று கூறினால், தமிழரின் உள்ளத்திலே அந்த உணர்ச்சி வேகம் பாய்ந்தால் "கிளம்பிற்று காண் தமிழர் சிங்கக் கூட்டம்" என்று கவிபாடும் காட்சியாகும் அது. எனவேதான், பெரியார் 'தைரியம்' பெற்றிருக்கிறார் ! அந்தத் தைரியத்துக்குப் பக்கபலமாக இருப்பது தளரா உழைப்பு !!

அந்தத் தைரியம், பெரியாருக்கு இருக்கிறது, அதை ஆச்சாரியார் உணர்கிறார். உணர்வதுடன், நமது மாகாணத்தைவிட மிகச்சிறிய அயர்லாந்து தன்னாட்சியுடன் இருக்கிறதே, தமிழர் ஒரு நாட்டை ஆள்முடியாதா என்று மேற்கோளுடன் கூடிய உற்சாகமூட்டுகிறார். ஆனால், உலகம் சுற்றியவர்கள், பட்ட தாரிகள், பாராளும் மன்றங்களைக் கண்டவர்கள், என்நாடு, என் இனம், என்று கூறிக்கொள்ளக் கூசுகின்றனர்; நம்நாட்டு ஆட்சி நமது என்று உரிமை பேச நடுங்குகின்றனர்; எனது இன விடுதலையே என் வாழ்க்கையின் இலட்சியம் என்று பேசப் பயப்படுகின்றனர்; தமிழர் மட்டுமே ஒரு தேசத்தை (தங்கள் தந்தையார் நாட்டை) ஆளமுடியும் என்று தைரியம் கொள்ளத் தயங்குகின்றனர்; திராவிடத் திரு நாட்டினிலே ஆரிய அரசா? என்று தட்டிக் கேட்கப் பயப்படுகின்றனர்;