உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

விடுதலைப் போர்


கொடியவனாலும் நிற்க முடியவில்லை. இங்கே, நடக்கும் கொடுமைகளைக் கண்டிக்க, எடுத்துக்கூற, எதிர்க்க, பெரியார் ஒருவர்தானே இருக்கிறார் !

பாடுபடுபவன் பசித்திருக்கப், பாடுபடாதவன் பரிமள வாழ்வுடன் இருப்பது, முதலாளித்துவமுறை, சுரண்டல் முறை அல்லவா ? சுரண்டல் முறையை ஒழிக்க வேண்டுவது அவசியமல்லவா? பாடுபடாத பார்ப்பன இனம், பாடுபடும் திராவிட இனத்தின் உழைப்பிலே வாழ்கிறதே, இதை ஏன் திருத்த வில்லை?

கோடிக் கணக்கிலே பொருள் முடங்கிக் கிடப்பது, ஆரிய மத அமைப்பு முறைப்படி அல்லவா? ஆண்டுதோறும், அதே முறையினால் கோடிக்கணக்கிலே பணம் விரயமாகிறதல்லவா? இந்த 'விரயம்' நீக்கப்பட்டு, ஏழைகள் வயிறு நிரம்ப உணவுகிடைக்கச் செய்வதற்கு என்ன முயற்சி எடுத்துக் கொள்ளப்பட்டது?

விளைபொருள்களை வெளியே அனுப்பிவிட்டு, செய்பொருளை வாங்கியே ஒரு நாடு இருக்குமானால், அந்நாட்டுச் செல்வநிலை சீரழியாதா? வடநாட்டு நிலை அப்படி இருக்கிறதா? சகல பொருள்களும் அங்கே செய்யப்பட்டு இங்கே விற்கப்படுகிறதே, இதன் பலனாகத் திராவிடம் பட்டிக்காடாகவும், வடநாடு "குபேர பட்டினமாகவும்" மாறி வருகிறதே ! இது, முறையான பொருளாதார வளர்ச்சியா ? இரும்பு, பருத்தி, முதற்கொண்டு சகல தொழில் வளமும் வடநாட்டிலிருக்கிறதே. தொழிற் சாலைகள் அங்கே வளர்ந்து, ஆலை அரசர்கள் ஆட்சி செய்கின்றனரே!