90 விந்தன் இலக்கியத் தடம் சொந்தப் பதிப்பகம் தொடங்கிச் சில நூல்களை வெளியிட்டார், விந்தன். ஜெயகாந்தன் சிறுகதைத் தொகுப்பை முதன் முதலில் வெளியிட்ட பெருமை அவரைச் சாரும். சிறிது காலத்தில் பதிப்பகத்தையும் மூட வேண்டியதாயிற்று. வேலையில்லாத் திண்டாட்டம் அவரை வாட்டிற்று. எனவே, ‘சாவி ஆசிரியராக இருந்த தினமணி கதிரில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். அங்குச் சில ஆண்டுகள் கழிந்தன. 58 வயதில் ஓய்வு பெற நேர்ந்தது; 1974இல் ஓய்வு பெற்றார். அதன் பின்னர் சில மாதங்களில், 1975 ஜூனில் விந்தன் காலமானார். இந்த விவரங்களை இங்குக் குறிப்பிடுவதற்குக் காரணம், விந்தனின் வாழ்க்கை நமக்கெல்லாம் ஒரு படிப்பினையாகவும் எச்சரிக்கையாகவும் விளங்குகிறது. விந்தன் - புதுமைப் பித்தன் இலக்கியத் துறையைப் பொறுத்தமட்டில், புதுமைப் பித்தன் (1906-1948) வாழ்க்கைக்கும் விந்தன் வாழ்க்கைக்கும் (1916-1975) இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. புதுமைப்பித்தன் கோயங்காவின் தினமணி, டி.எஸ் சொக்கலிங்கத்தின் தினசரி ஆகியவற்றில் (1934-1944இல்) வேலை பார்த்தார். விந்தன், கல்கி, தினமணி கதிர் ஆகியவற்றில் பணியாற்றினார். புதுமைப்பித்தன் சினிமாத் துறையில் சில காலம் (19441948) ஊடாடினார். பாகவதர் - பானுமதி நடித்த ராஜமுக்தி போன்ற ஒன்றிரண்டு படங்களுக்கு வசனம் எழுதினார். பார்த்திபன் கனவு’ போன்ற சில படங்களுக்கு வசனத்துடன் பாடல்களும் விந்தன் எழுதினார். பாரதியை மிகவும் நேசித்த இவ்விரு படைப்பாளிகளும், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் பாரதியின் ஜீவாதார லட்சியங்களில் பற்றுக் கொண்டவர்கள், விளம்பரம் விரும்பாதவர்கள். புதுமை, பரிசோதனை, தனித்தன்மை ஆகியவற்றை விரும்பியவர்கள். சமுதாயத்தில் காணப்படும் அநீதிகள், அக்கிரமங்கள், ஏற்றத் தாழ்வுகள், இழி தகைமைகள், புன்மைகள், போலித்தனங்கள்