பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

விந்தன் கதைகள்

ங்கம்மாவுக்குக் கபாலி என்றொரு பிள்ளை. பிள்ளை என்றாலும் பிள்ளை, மணியான பிள்ளை. வாய் ஒரு நிமிஷங் கூட அசையாமல் இராது.

அன்று வஞ்சி கூழுக்காகக் கம்பு மா அரைத்துக் கொண்டிருந்தாள். யந்திரத்திலிருந்த மா கொஞ்சங் கொஞ்சமாக விழுந்து கொண்டிருக்கும் போதே கபாலி அவற்றை யெல்லாம் கபளீகரம் செய்து கொண்டிருந்தான். தன் வேதனையை எவ்வளவோ தூரம் சகித்துக் கொண்டு, அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தாள் வஞ்சி. மனித இதயம் மண்ணாங்கட்டியா, மாறுதல் இல்லாமலிருப்பதற்கு? அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

“பச்சை மாவை இப்படித் தின்னா வயித்துக்கு என்ன ஆகும்?” என்று கேட்டபடி, அந்தப் பிள்ளையின் கையைப் பிடித்துத் தள்ளினாள்.

உடனே அது அழுதுகொண்டே அம்மாவிடம் சென்று முறையிட்டது. இந்த மாதிரி ஒரு நல்ல சந்தர்ப்பத்தைக் கங்கம்மா நழுவ விடுவாளா? திடுதிடுவென்று ஓடிவந்து, ஏண்டி உங்க அப்பன் வீட்டுச் சொத்து என்னடி கெட்டுப் போச்சு? அந்தக் குழந்தை தன் மாமன் வீட்டிலே அத்தனை மா எடுத்துத் தின்னச் சொந்தமில்லையா?” என்று அவள் வஞ்சியின் தாடையில் ஓர் இடி இடித்தாள். அந்த இடியில் வஞ்சி கீழே சாய்ந்து விட்டாள்.

அடுத்த கணத்தில் அங்கே வந்த கந்தசாமி, “அக்கா! அந்தப் பெண்ணு என்னத்துக்கு அப்படிப் படுத்துக் கிடக்குது!” என்று கங்கம்மாவை விசாரித்தான்.

“அது என்னத்துக்கோ?” என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டுச் சென்றாள் அவள்.

இந்தச் சமயத்தில் தன் கணவனின் குரலைக் கேட்டு முக்கி முனகிக் கொண்டே எழுந்தாள் வஞ்சி.

“என்னா உடம்புக்கு? என்று வஞ்சியை விசாரித்தான் கந்தசாமி.

“உடம்புக்கு ஒண்ணுமில்லே; கூழுக்கு இந்த மாவை அரைச்சிக்கிட்டு இருந்தேன். என்னமோ தலையைச் சுத்தறாப்போல இருந்தது; கொஞ்ச நேரம் படுத்துக்கிட்டேன்!” என்றாள் வஞ்சி.