பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒரே உரிமை

117

அவனைக் கண்ட மாத்திரத்தில் இப்படியெல்லாம் அன்ல மோதிய என் உள்ளத்தை ஒருவாறு அடக்கிக்கொண்டு, “மனிதனாகப் பிறந்த உனக்குக் கேவலம் இந்த எச்சில் இலைக்காக நாயுடன் போட்டியிடுவதற்கு வெட்கமாயில்லையா?” என்று கேட்டேன்.

இந்தக் கேள்விக்கு நியாயமாகப் பதில் சொல்லியிருக்க வேண்டுமானால், “எனக்கு என்ன சாமி வெட்கம்? இதுக்காக வெட்கப்பட வேண்டியவங்க. ராசாங்கத்தாருதானே?” என்று அவன் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவன் அவ்வாறு சொல்லவில்லை; “வெட்கப்பட்டா முடியுமா, சாமி! வயிறுன்னு ஒண்ணு இருக்குதே!” என்றான்.

“அதற்கு எங்கேயாவது போய் ஏதாவது வேலை செய்வது........!”

“கெடைச்சாத்தானே?”

“ஏன் கிடைக்காது?”

“அறுவடை காலமாயிருந்தா எங்கேயாச்சும் வேலை கிடைக்கும், சாமி! இப்பத்தான் வெய்யில் பட்டையை உரிக்குதுங்களே!”

“உனக்காக வருஷம் முந்நூற்று அறுபது நாளும் அறுவடை காலமாயிருக்குமா, என்ன? அறுவடை வேலை கிடைக்கும்போது அறுவடை வேலை செய்ய வேண்டும்; மற்ற சமயங்களில் கூலி வேலை, கீலி வேலை......”

“கூலி வேலை தினம் தினமா கெடைக்குதுங்க? எப்பவோ ஒரு சமயம் கெடைக்கும். அப்போ செய்யறது தானுங்க! எந்த வேலையும் கெடைக்காத போதுதான் இப்படி நாய்க்குப் போட்டியா வந்து நிக்கிறது!” என்றான் அவன்.

அத்துடன் என் வாய் அன்று அடைத்துப் போயிற்று. பேசாமல் அவன் ஏந்திய கையில் எட்டனாவை எடுத்துப் போட்டு ஏதாவது வாங்கித் தின்று பசியாறும்படி சொன்னேன். அதைப் பெற்றுக் கொண்டு அவன் போய்விட்டான். நான் கையிலிருந்த இலையை அந்த நாயின் முன்னால் எறிந்து விட்டு உள்ளே வந்தேன்.

***