பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

விந்தன் கதைகள்

நடுங்கிக் கொண்டே ஒரு புறமாக ஒதுங்கி நின்ற அவனை நோக்கி, "என்னா பிள்ளை ஏன் அங்கிட்டு நிக்கறே? -சும்மா இங்கிட்டு வா!" என்றார் அல்லாப்பிச்சை ராவுத்தர்.

கண்ணுச்சாமி தலையைச் சொறிந்து கொண்டே மெள்ள அவரை நெருங்கி, “ராத்திரி.....ராத்திரி....ராத்திரி....." என்று மேலே ஒன்றும் சொல்ல முடியாமல் மென்று விழுங்கினான்.

"எல்லாம் தெரியும், பிள்ளை அதுக்கா இப்படி நடுங்கிக் கிட்டு நிக்கிறே? - சே! விட்டுத் தள்ளுங்கிறேன்! உன்னைக் கொண்டு இத்தனை வருஷமா நான் எவ்வளவு பணம் சம்பாதிச்சிருப்பேன்? இப்போ நீ தவறி ஒரு விளக்கை உடைச்சி விட்டதுக்காகவா அந்த நஷ்டத்தை உன் தலையிலே கட்டறது அநியாயமில்லே! நானே உடைச்சி விட்டிருந்தேன்-அப்போ என்ன பண்ணியிருப்பேன், பிள்ளை?-அதே நியாயந்தான் உனக்கும்!" என்றார் அல்லாப்பிச்சை ராவுத்தர்.

கண்ணுச்சாமிக்குத் தூக்கி வாரிப் போட்டது. "எசமா!....நிசமாகவா எசமான்.....?" என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தான்.

“ஆமாம் பிள்ளை, ஆமாம்! இந்தா, உன்னுடைய பத்து நாள் கூலி இருபது ரூபாய்!-எடுத்துக்கிட்டுச்சந்தோஷமாய்ப் போய் வா!" என்று மலர்ந்த முகத்துடன் இருபது ரூபாயை எடுத்து ராவுத்தர் அவனிடம் கொடுத்தார்.

அதைக் கைகூப்பிப் பெற்றுக் கொண்டு கண்ணுச்சாமி வீடு திரும்பினான். அவன் சொன்ன சேதியைக் கேட்ட காத்தாயி, ஏனோ மூர்ச்சை போட்டுக் கீழே விழுந்து விட்டாள். சிறிது நேரத்திற்குப் பிறகு மூர்ச்சை தெளிந்து எழுந்த அவளையும், குழந்தையையும் கூட்டிக் கொண்டு கடை வீதிக்குச் சென்றான் கண்ணுச்சாமி. தீபாவளிக்கு வேண்டியவற்றையெல்லாம் ஒன்று விடாமல் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினான்.

மறுநாள் அவர்களுடைய வீட்டில் தீபாவளி ஏக அமர்க்களமாகக் கொண்டாடப்பட்டது. ஆனால் அன்று கிருஷ்ண பரமாத்மா அவர்களுடைய உள்ளத்தில் குடி கொண்டிருக்கவில்லை; அல்லாப்பிச்சை ராவுத்தர்தான் குடி கொண்டிருந்தார்!