பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய விரோதி

225



இப்படிப்பட்டவனுங்களை நாமே பிடிச்சுப் போலீசு ஜவானுங்ககிட்ட ஒப்படைச்சாக்கூடக் குற்றமில்லை தான்! நீ என்ன சொல்றே, அண்ணே?”

"நல்ல ஆளப்பா நீ நம்ம பெண்டாட்டிமாருங்க கழுத்திலே தாலி இருக்கக் கூடாதுங்கிறது உன் எண்ணமா?”

"அட, நீ கூட இப்படிப் பயந்து சாவறியே ஆறிலுஞ் சாவு, நூறிலுஞ் சாவு! - அப்படியா நம்ம தலையை அவனுங்க நறுக்குன்னு கிள்ளி எறிஞ்சிடுவானுங்க?”

"ஒண்ணுந் தெரியாம நீ பாட்டுக்குச் சும்மாப் பேசாதே. யாரு காதிலாச்சும் விழுந்து வைக்கப் போவுது"

"நான் எல்லாம் தெரிஞ்சிதான் பேசறேன் எனக்கு இன்னும் என்ன தெரியணுங்கிறே நீ?”

“நிசமாச் சொல்றேன் அண்ணே இந்தக் கிராமத்திலே திருட்டுச் சாராயம் காய்ச்சறதுக்கு யார் பணம் கொடுக்கிறாங்க என்கிற விசயம் உனக்குத் தெரிஞ்சா நீ இப்படியெல்லாம் பேசவே மாட்டே - ஆமாம்!" என்று முன்னும் பின்னும் பீதியுடன் பார்த்துக் கொண்டே சொன்னான் இசக்கிமுத்து.

"அடடே! அந்த ஆளை உனக்கு மட்டுந்தான் தெரியும்னு நீ நெனைச்சுட்டிருக்கியா - போ அண்ணே, போ அந்தக் குடிகெடுக்கும் மனுசனை எனக்குந்தான் தெரியும்" என்றான் நல்லமுத்து அலட்சியமாக.

அதற்குமேல் அவனுடைய வாயைக் கிண்டிவிட விரும்பாத இசக்கிமுத்து "ஐயையோ நம்ம தலைக்கு ஆபத்து இல்லே வந்துடும் போலிருக்குது அந்த மனுசன் பேரை நீ வெளியே கிளியே சொல்லிப்பிடாதேப்பா!" என்று கத்திக் கொண்டே அவனுடைய வாயை இறுகப் பொத்தினான்.

புஷ்பராஜ் உள்ளம் உடைந்தவனாய்த் தன்னுடைய வீட்டை நோக்கி மெல்ல நடந்தான். அவனுடைய உடைந்த உள்ளத்திலிருந்து ஏனோ ஒரு கேள்வி எழுந்து, எங்கெல்லாமோ சுற்றியலைந்து, பதிலைத் தேடித் தேடித் திரிந்தது. அந்தக் கேள்வி வேறெதுவுமில்லை; இதுதான்:-

"சட்டத்தை மீறிச் சாராயம் காய்ச்சும் அந்தக் குடிகெடுக்கும் மனுசன் யாராயிருக்கும்?”

* * *

வி.க. -15