பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய விரோதி

235

கேளு! உனக்கும் எனக்கும் இனிமே சரிப்பட்டு வராது. பட்டணத்துப் படிப்புப் படிச்சி உன் புத்தி கோணலாப் போயிடுச்சு! 'காத்துள்ள போதே தூத்திக்கணும்' என்கிறாப்போல, கள்ளுக் கடையை எடுத்திருக்கிற இந்த நாளிலேதான் நான் நாலுகாசு சம்பாதிக்கணும்னு இருக்கேன். அதுக்கு இடைஞ்சலா நீ இருந்தியோ, எனக்கு ரொம்பக் கோவம் வரும் - ஆமாம், கபர்தார்! - அந்தக் கோவத்திலே நான் உன்னை என்ன வேணுமானாலும் செய்துபிடுவேன்! அதனாலே இன்னிக்கு ராத்திரியே நீ திரும்பிப் பட்டணத்துக்குப் போயிடறதுதான் நல்லது. இந்தா, ஒரு அம்பது ரூவா வச்சுக்கோ அப்புறம் மாசா மாசம் உன் செலவுக்கு நான் வழக்கம் போல் பணம் அனுப்பறேன் - என்ன?" என்று நயத்துடன் பயமும் காட்டிப் பார்த்தார் கனகராஜ்.

"இருக்கிற காசே ஏழு தலைமுறைக்குப் போதுமே அப்பா" என்று மீண்டும் ஏதோ சபலத்துடன் ஆரம்பித்தான் புஷ்பராஜ்.

"இந்த உபதேசந்தானே நான் வேணாங்கிறேன்!" என்று கர்ஜித்தார் கனகராஜ்.

புஷ்பராஜ் அதற்குமேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவன் வாயடைத்துப் போனான். கபர்தார் கனகராஜ் அவனுடைய கையில் ஐம்பது ரூபாயைப் பலவந்தமாகத் திணித்தார்.

புஷ்பராஜ் அந்தப் பணத்தையும் அப்பாவின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான். அதற்குப் பிறகு எதிர்ச் சுவரில் மாட்டியிருந்த தன் தாயாரின் போட்டோவைப் பார்த்தான். ஒரு நீண்ட பெருமூச்சுக்குப் பிறகு, 'அம்மா இன்று உயிருடன் இருந்திருந்தால்....?' என்று எண்ணி அவன் மனம் ஒரு கணம் ஏங்கிற்று. மறுகணம் அம்மா இன்று இல்லாமற் போனதே மேல் என்று எண்ணி அவன் மனம் ஆறுதலடைந்தது.

சிற்றன்னையோ அந்தப் பக்கம் தலைகாட்டவேயில்லை; கபர்தார் கனகராஜைக் கண்டால் அவளுக்கு அவ்வளவு தைரியம்!

புஷ்பராஜ் நின்றது நின்றபடி நின்று மேலே என்ன செய்வதென்று யோசித்தான். கபர்தார் கனகராஜ் பொறுமையிழந்து, "என்ன சொல்கிறாய்?'" என்று அதட்டினார்.

"அப்படியே ஆகட்டும், அப்பா" என்று சொல்லிவிட்டான் புஷ்பராஜ்.