பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதவி

453

அந்த 'ஸார்' தன் தலையைச் சற்றே கனக்க வைப்பதைக் கதிர்வேலு உணர்ந்தான்; ஆனால் தன் மார்பு அதனால் விம்மிப் புடைத்ததை அவன் அறியவில்லை.

"அவர் சொன்னவையெல்லாம் உங்களுக்குப் பிடித்தது போல் எனக்கும் பிடிக்கத்தான் பிடித்தன; ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் பிடிக்கவில்லை!" என்று மேலும் கொஞ்சம் 'பொடி' வைத்து ஊதினான் அருணாசலம்.

அவன் எதிர்பார்த்தது வீண் போகவில்லை; "என்ன அது?" என்று உடனே கேட்டுவிட்டான் கதிர்வேலு.

அது போதாதா, அவனுக்கு? "ஆளுக்கு மாதம் ஐம்பது ரூபாய் சம்பளம் என்று பேசி, ஆறு பேரை வைத்துக்கொண்டு இப்போதுள்ள வேலையைச் செய்து முடித்தால் உங்களுக்கு மாதம் ரூபாய் இரு நூறு சம்பளம் கொடுக்கிறேன் என்று சொன்னாரே, அதைத்தான் சொல்கிறேன்!" என்று தன் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துவிட்டான்!

"ஏன், எனக்கு மாதம் இருநூறு ரூபாய் சம்பளம் தருகிறேன் என்று அவர் சொன்னது உனக்கும் பிடிக்கவில்லையா?" என்று கேட்டான் கதிர்வேலு பகவான் பக்தனைச் சோதிப்பது போல.

அந்தப் பக்தனா அதற்கெல்லாம் அயர்ந்து விடுபவன்? "நன்றாய்ச் சொன்னீர்கள்! உங்களுடைய அந்தஸ்துக்கு மாதம் ரூபாய் முந்நூறாவது சம்பளம் தருகிறேன் என்றல்லவா அவர் சொல்லியிருக்க வேண்டும்? தவறிவிட்டார்; அந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவர் தவறித்தான் விட்டார்!" என்று சொல்லி, பகவானின் அருளுக்கு உடனே தன்னைப் பாத்திரமாக்கிக் கொண்டு விட்டான்!

உச்சி குளிர்ந்த பகவான், "ஓ, அதற்குச் சொன்னாயா?" என்று தன் தலையைச் சற்றே ஆட்டினார்.

"ஆமாம், அதற்குத்தான் சொன்னேன்! இப்போதுகூட ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை; ஆறு பேரை வைத்துக்கொண்டு அவர் முடிக்கச் சொன்ன வேலையை ஐந்தே பேரை வைத்துக் கொண்டு முடித்து விடுகிறேன் என்று சொல்லிப் பாருங்கள் - இன்னும் ஓர் ஐம்பது ரூபாயாவது உங்களுக்குக் கூடக் கிடைக்கும்"

இதைக் கேட்டதும், 'சொல்லிப் பார்க்கலாம் போலிருக்கிறதே?' என்று உள்ளுற நினைத்தான் கதிர்வேலு; ஆனால் அதை அவன் வெளியே சொல்லவில்லை.