சாந்தி எங்கே?
499
"ஐயோ பாவம், கல்யாணமாகிவிட்டதா அவனுக்கு?' என்றார் அவர், அப்பொழுதும் விடாமல்.
"இல்லை!" என்றாள் அவள், அவரை நோக்கித் திரும்பாமல் அப்படியே நின்று.
“ஒருவேளை கல்யாணமானால் பைத்தியம் தெளிந்துவிடுமோ, என்னமோ?" என்றார்.அவர்.
"பைத்தியம் தெளிந்தால்தானே கல்யாணமாகும்?" என்றாள் அவள், அத்துடனாவது அவர்தன்னை விட்டால் போதுமென்று.
அவர் சிரித்தார்; அவளும் சிரிக்க முயன்றாள், அவருக்காக. ஆனால் வந்தது?-அழுகை, அதை மறைப்பதற்காக அடுக்களையைத் தஞ்சமடைந்து விட்டாள், அவள்!
★★★
இந்த நிலையிலேதான் ஒரு நாள் வீட்டைக் கூட்டிக் கொண்டிருந்தபோது, அந்தக் கடிதத்தைக் கண்டெடுத்தாள் அவள்.
யாரோ சந்திரனாம்- அவன் எழுதியிருந்தான், அவள் மகள் தாராவுக்கு.
அன்புள்ள தாரா,
சென்ற வருடம் இதே நாளில் நான் உன்னிடம் 'நாளை உனக்குப் பிறந்த நாள்' என்று தெரிவித்தபோது, 'நீங்கள் சொன்னபிறகுதான் என் பிறந்த நாள் என்னுடைய நினைவுக்கு வருகிறது!’ என்று நீ சொன்னது, உன்னுடைய நினைவில் இருக்குமென்று நினைக்கிறேன். அதே மாதிரி இந்த வருடமும் நினைவுபடுத்திக் கொள்-நாளை உனக்குப் பிறந்த நாள்!
வழக்கம்போல் நாளைமாலை வடபழனி ஆண்டவர் சந்நிதியில் உனக்காக அர்ச்சனை நடக்கும். முடியுமானால் நீயும் வரலாம், எனக்காக உன் அம்மாவிடம் ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு!
என்றும் உன்னுடைய, சந்திரன்