பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அன்பும் அதிகாரமும்

565


அவனுடைய கதறல் அந்த மானின் காதில் விழுவதற்கு அதனுடைய உடம்பில் உயிர் இருந்தால் தானே!

'அல்லா' தன் உயிரை அன்புக்கு அர்ப்பணம் செய்து விட்டதை அறியாத இஸா மேலும் மேலும் "அரே அல்லா, அரே அல்லா!" என்று கதறிக் கொண்டே யிருந்தான்.

அதே சமயத்தில் தன் தோழிகளின் மூலம் செய்தி கேட்ட ராணி ஜிஜியா அங்கே ஒடோடியும் வந்தாள். 'அல்லா'வை இப்படியும் அப்படியுமாக புரட்டிப் பார்த்துவிட்டு அவள் அழுது கொண்டே சிறையின் ஜன்னலை நோக்கினாள்.

இஸாவுக்கு விஷயம் புரிந்து விட்டது.

அவன் வானத்தை நோக்கித் தன் இரு கைகளையும் ஏந்தி "அரே அல்லாஹுத ஆலா! 'அல்லா'வை உன் திருவடிக்கு அழைத்துக் கொண்டு விட்டாயா?" என்று கேட்டு விட்டுக் கண்ணிர் மல்கிய கண்களுடன் சிறையின் வாயிலை நோக்கித் திரும்பினான்.

என்ன விந்தை இது! 'கடக்'கென்று பூட்டுத் திறக்கும் சத்தமும் 'லொடக்'கென்று நாதங்கி கழன்று விழும் சத்தமும் அவன் காதில் விழுந்தன.

அடுத்த கணம் 'படார், படார்' என்று சிறைக் கதவுகளைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த பாதுஷா இஸாவின் முன்னால் மண்டியிட்டு அவன் இரு கைகளையும் பற்றி, "என்னை மன்னித்துவிடு, இஸா!" என்று வேண்டிக் கொண்டான்.

"மாட்டார், அல்லாஹுத ஆலா உம்மை ஒரு போதும் மன்னிக்க மாட்டார்!" என்று சொல்லி அவன் பிடியிலிருந்து விலகிக் கொண்ட இஸா, "அரே, அல்லா இதோ நானும் உன்னுடன் வந்து விட்டேன்! அரே, அல்லா இதோ, நானும் உன்னுடன் வந்து விட்டேன்!" என்று ஆவேசத்துடன் இரைந்து கொண்டே, சிறை வாயிலை விட்டுச்சிட்டுக் குருவி போல் பறந்து சென்றான்!

அரண்மனை நெடுகிலும் நின்று காவல் புரிந்த ஆயுத பாணிகளான வீரர்கள் யாரும் அவனை ஏனோ தடுக்கவில்லை!