பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குப்பையிலே குருக்கத்தி

577

"வைரக் கற்களை வாரி இறைப்பது போலிருக்கிறதே! எங்கே, இன்னொரு முறை சிரி - பார்க்கலாம்?" என்று இளித்துக் கொண்டே வந்தார் வான மூனா.

"வாருங்கள், வாருங்கள்; இன்றுதான் உங்கள் படத்தைப் பற்றிய விமரிசனத்தைப் பத்திரிகையில் பார்த்தேன்!" என்று சொல்லிக் கொண்டே அவரை வரவேற்றாள் தீபா.

"அதென்ன, உங்கள் படம்? ‘நம்படம்' என்று தான் சொல்லேன் - என் மனசு கொஞ்சமாவது குளிராதா?" என்று குழைந்து கொண்டே சோபாவில் உட்கார்ந்த வானா, மூனா தேள் கொட்டிய திருடன் போல் திடுக்கிட்டு எழுந்தான்.

"என்ன, என்ன? என்றாள் தீபா பதட்டத்துடன்.

"இந்த அமர்நாத் யார், உனக்குப் புடவை எடுத்துக் கொடுக்க? இவன் எடுத்துக் கொடுத்த புடவையை நீ எப்படி வாங்கலாம்? தூக்கி எறி!" என்று அவள் தூக்கி எறிவதற்கு முன்னால் தானே அதைத் தூக்கி எறிந்துவிட்டு உட்கார்ந்தார் வான மூனா,

சிரிப்பைக் கூட.... கொஞ்சம் சிக்கனமாகவே அவருக்காகச் செலவழித்து விட்டு 'அவரும் ' நம்முடைய படத்தில் நடித்தவர்தானே? என்றாள் தீபா.

அட்சர லட்சம் பெறும் அந்த ‘நம்முடைய' என்ற வார்த்தையைக் கேட்டதும் உச்சி குளிர்ந்த வான மூனா, "என்னமோ தெரியவில்லை, என்னுடைய படத்தில் நீ இது வரை நடிக்காவிட்டாலும் உன்னை என்னால் மறக்கவே முடியவில்லை!" என்று சொல்லிக் கொண்டே, "வாடா சுப்பையா, வாடா" என்று தன்னை நோக்கித் தட்டும் கையுமாக வந்து கொண்டிருந்த டிரைவரை உற்சாகத்துடன் வரவேற்று அவன் கையிலிருந்த தட்டைத் தானே வாங்கி 'டீபா'யின் மேல் வைத்துவிட்டு "இதோபார், தீபா! இந்தத் தங்கக்கிண்ணத்திலிருக்கும் எண்ணையைத் தலையில் தேய்த்துக் கொண்டுதான் நாளைக்கு நீ தீபாவளி ஸ்நானம் செய்ய வேண்டும்; ஆமாம்!" என்றார் பெருமிதத்துடன்.

"ஏற்கனவே ஒன்பது பேர் இப்படி என்னை வேண்டிக் கொண்டிருக்கிறார்களே, நான் என்னத்தைச் செய்ய?" என்றாள் தீபா.

"என்ன, என்ன! தங்கக் கிண்ணத்தில் எண்ணையை வைத்தா?" என்றார் வான மூனா ஏமாற்றத்துடன்.


வி.க.-37