பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மறுபடியும்.....


ன்னும் ஒரு குழந்தைக்குக்கூடத் தாயாகவில்லை அவள்; அதற்குள் அவன் போய்விட்டான்!

'போய்விட்டான்' என்றால் அவனா போய்விட்டான்? 'தர்மராஜன்' என்ற பெயருக்கு முன்னால், நகைச்சுவைக்காகத்தானோ என்னவோ, 'எம' என்ற இரண்டு எழுத்தையும் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறானோ, அந்தப் புண்ணியவான் அவளுடைய கணவனைக் கொண்டு போய் விட்டான்!

அவன் போனாலும் அவளுக்காக அவன் வைத்து விட்டுப் போன சொத்து சுதந்திரங்களெல்லாம் இருக்கத்தான் இருந்தன. அது தெரிந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்; 'அவளுக்கென்ன குறை?' என்று தங்களைத் தாங்களே கேட்டு, 'ஒரு குறையும் கிடையாது' என்று தங்களுக்குத் தாங்களே பதிலும் சொல்லிக்கொண்டு இருக்கத்தான் இருந்தார்கள். ஆனாலும் ஒரு குறை, ஒரே ஒரு குறை அவளுக்கு இருக்கத்தான் இருந்தது. அதுதான் தனிமை; அந்தத் தனிமைதான் அவளைப் பிடித்து 'வாட்டு வாட்டு' என்று வாட்டிக்கொண்டிருந்தது.

அதற்கேற்றாற்போல் இந்த உலகத்தில் எந்த ஜீவன் தான் தனிமையில் வாடுகிறது?

அதோ போகிறதே பெட்டைக் கோழி, அதுகூட ஒரு சேவல் இல்லாவிட்டால் இன்னொரு சேவலுடன் கூடிக் குலாவுகிறது; இதோ வந்து ஜன்னல் கம்பியின்மேல் உட்காருகிறதே சிட்டுக்குருவி, இதுகூட ஓர் இணை இல்லா விட்டால் இன்னோர் இணையுடன் சேர்ந்து கொள்கிறது!

அப்படியிருக்கும்போது நான் மட்டும் ஏன் தனியாக இருக்கவேண்டுமாம்? நான் மட்டும் ஏன் தனியாக வாழ வேண்டுமாம்?

இப்படி எண்ணிக்கொண்டே கூடத்தில் மாட்டியிருந்த தன் கணவனின் நிழற் படத்தைப் பார்த்தாள் அவள்; அந்த நிலையில் அது தன்னைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது அவளுக்கு!

இவருக்கென்ன சிரிக்காமல்? இவர் மட்டும் என்னை விட்டுப் பிரிந்திருந்தால் எனக்காகத் தனியாக இருந்திருப்பாரா? ஊஹும், இன்னொருத்தியைக் கல்யாணம் செய்து

கொண்டு..........