392
விந்தன் கதைகள்
கொள்கிறார்கள். எந்தப் பெண்ணாவது அப்படிச் சொல்கிறாளா?-பைத்தியந்தான்.
இதைக் கேட்ட மாத்திரத்தில் என் மனக்கோட்டை இடிந்து விழுந்தது. எண்ணங்கள் மூலைக்கு ஒன்றாகச் சிதறின.
ஆனாலும் ஆசை அத்துடன் என்னை விட்டுவிடவில்லை. எதற்கும் ஒரு கடிதம் எழுதிக் கேட்டு விடுவதென்று தீர்மானித்தேன். அந்தக் கடிதத்தின் முதலில் விதவா விவாகத்தின் அவசியத்தை வற்புறுத்தி, நடுவே என் ஆவலை, வெளியிட்டு கடைசியில் கடிதம் பிடித்தாலும், பிடிக்கா விட்டாலும் தயவு செய்து பரம ரகசியமாகப் பதில் எழுதுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன்.
மேற்படி கடிதத்திற்கு வந்த பதில் இதுதான்:
வணக்கம்.
மறுமணம் செய்து கொண்டால் விதவையின் துயரம் தீர்ந்துவிடும் என்று சிலர் சொல்வதை நீங்கள் நம்புகிறீர்களா? - என்னால் அதை நம்ப முடியவில்லை. அதற்காக வழிவழியாக வாழ்ந்து வரும் காதலைக் கொன்றுவிடவும் நான் விரும்பவில்லை.
எனவே என்னைப் பொறுத்தவரை, நான் பூசிக் கொண்ட மஞ்சளும், வைத்துக்கொண்ட குங்குமத்திலகமும், சூடிய மலரும், அணிந்த வளையலும் 'அவ'ருக்காகத்தான்.
வேறொருவருக்காக அவற்றை மீண்டும் அணிந்து கொள்வ தென்பது இந்த ஜென்மத்தில் முடியாத காரியம்.
மன்னிக்கவும்,
-சீதா
மேற்படி கடிதத்தை படித்து முடித்ததும் "பெண்கள் சபலச் சித்தம் உள்ளவர்கள்" என்று சொன்ன மேதா'விகளின் 'மேதை'யை எண்ணி நான் சிரித்தேன். வைர நெஞ்சுடன் அவள் வாழும் முறைமையைப் பற்றி எண்ணியெண்ணி வியந்தேன். அப்போது காற்றிலே மிதந்து வந்த கீதமொன்று,
'கற்பு நிலையென்று சொல்ல வந்தார்-இரு
கட்சிக்கும் அஃதைப் பொதுவில் வைப்போம்!'
என்று இசைத்து, மறுமணம் அல்ல திருமணம், ஒரு மனமே திருமணம்! என்ற முடிவுக்கு என்னை இழுத்துச் சென்றது.