2. நிரை மீட்கும் போர்
அயல் நாட்டார் தம் நாட்டின் எல்லைக்கு வந்து தம்முடைய ஆநிரையை அடித்துக் கொண்டு சென்று விட்டார்கள் என்பதை ஆயர்கள் வந்து சொன்னார்கள். எதிர்பாராத இந்தச் செய்தியைக் கேட்டு ஆநிரைக்குரிய நாட்டினர் தோள்கள் துடித்தன. அரசன் வீறுகொண்டு எழுந்தான். உடனே அந்தப் பசுக் கூட்டத்தை மீட்டு வாருங்கள் என்ற ஆணை பிறந்தது. “வீரம் சிறந்த காளையர் கைப்பட்ட பசுக் கூட்டத்தை மீட்க முடியுமோ? காலன் வாயிலே புகுந்த உயிரை மீட்டாலும் மீட்கலாம்; போன பசுக்களை மீட்க இயலாது” என்று யாரோ சொன்னார்கள். பகைவர்களின் வலிமை மிக அதிகம் என்பது அவர்கள் நினைவு. கேட்ட வீரர்களுக்குச் சினம் பொங்கியது. “யமனிடம் சென்ற உயிரையும் மீட்டு வரும் விறலுடையோம் யாம்” என்று நிமிர்ந்து நின்று பேசினார்கள்.
ஆநிரையை மீட்டுவர வேண்டும் என்று மன்னன் கட்டளை பிறப்பித்தவுடனே கிணைப் பறையை முழக்கினார்கள். வீரர்கள் திரண்டனர். பசுக்களை மீட்பதற்குப் புறப்பட்ட அவர்கள் தமிழ் மரபுப்படி கரந்தை மாலையை அணிந்து கொண்டார்கள். போரின் ஒவ்வொரு நிலையிலும் வெவ்வேறு பூக்களை அணிவது வீரர்களின் வழக்கம். தம் அரசருக்கே உரிய அடையாள மலரோடு இந்தப் போர்ப் பூவையும் அணிந்து கொள்வார்கள். பகைவர் போன வழியைப் பின்பற்றிச் சென்றார்கள் வீரர்கள். ஆவினங்கள் காட்டின் செல்வம் அல்லவா?
சங்குகள் முழங்கின; கொம்புகள் ஒலித்தன; பல வகை முரசங்கள் ஒலி எழுப்பின. பசுமாடுகள் சென்ற