பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13. அத்திகிரி அருளாளன்

திருமழிசை ஆழ்வார் திருமழிசையை விட்டுக் காஞ்சீபுரத்துக்கு வருகிறார். அங்கே கணிகண்ணன் என்ற புலவன் அவருக்குச் சிஷ்யனாகவும் நண்பனாகவும் அமைகிறான். இவரது புகழையும் பெருமையையும் கேட்ட பல்லவ அரசன் கணிகண்ணனை அழைத்து, அவரது ஆச்சாரியாரை அரண் மனைக்கு அழைத்து வந்து, தன் மேல் ஒரு பாட்டுப் பாடச் செய்ய வேண்டும் என்கிறான். -

நாக்கொண்டு மானிடம் பாடேன் என்ற வைராக்கியம் உடையவர் ஆயிற்றே, அவரை எப்படிக் கூப்பிட்டு வருவது என்று கணிகண்ணன் சொல்கிறான். அப்போது நீராவது என் மீது ஒரு பாட்டுப் பாடுமே என்கிறான் அரசன். 'குருவிற்கு மிஞ்சிய சிஷ்யன் இல்லையே நான், என்னாலும் அது இயலாதே!' என்று கையை விரித்து விடுகிறான், கணிகண்ணன்.

உடனே கோபமுற்று அரசன் உம்மை நாடு கடத்துவேன் என்கிறான். கணிகண்ணனும் சளைக்கவில்லை. நீயென்ன என்னை நாடு கடத்துவது? நானே போகிறேன் என்று சொல்லித்தன் ஆச்சாரியரானதிருமழிசை ஆழ்வாரிடம் தகவல் கொடுத்துப் புறப்பட்டு விடுகிறான், காஞ்சியை விட்டு.

சிஷ்யனுக்குப் பின்னேயே ஆழ்வாரும் புறப்படுகிறார். புறப் படுவதற்கு முன்கச்சி மணிவண்ணப் பெருமாளுக்கு ஒரு கட்டளை பிறப்பித்து விட்டே புறப்படுகிறார். கட்டளை இது தான.

கணிகண்ணன் போகின்றான்காமருபூங் கச்சி மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா - துணிவுடைய செந்நாப் புலவனும் செல்கின்றேன் நீயும்உன்றன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்.