பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

வேங்கடம் முதல் குமரி வரை

அதற்கு எதிர்ப் பக்கத்தில் உயரமான இடத்திலே சிவகாமி ஆத்தாளின் சிலையும் வைத்திருக்கிறார்கள். அவளுக்கு அருள் புரியவே குழந்தை முருகன் அவசரமாக அன்னை மடியிலிருந்து இறங்க முயல்கிறானோ என்னவோ. இருவரையும் வணங்கிவிட்டே உள்ளே சென்றால் உள் பிராகாரத்திற்கு வருவோம். அதையும் கடந்து உள்ளே சென்றால் ஒரே சமயத்தில் திருமலை முருகனையும், வள்ளி தெய்வயானை சகிதம் மஞ்சத்தில் எழுந்தருளியிருக்கும் சண்முகனையும் தரிசிக்கலாம்.

திருமலை முருகன் கம்பீரமான வடிவினன். சுமார் நான்கு அடி உயரத்தில் நல்ல சிலா விக்கிரகமாக நிற்கிறான். அவன் தனது வலது தோளில் ஒரு செப்பு வேலையும் ஏந்தியிருக்கிறான். கருணை ததும்பும் திருமுகம்.

அதனால்தான் அவன் சிறந்த வரப்பிரசாதியுமாக இருக்கிறான். சண்முகன் மிகச் சிறிய வடிவினனே. அவனுக்கும் அவன் துணைவி யாருக்கும் ஆடைகள் உடுத்து, அவர்கள் உருவம் முழுவதையுமே மறைத்து வைத்திருப்பார்கள் அர்ச்சகர்கள். அவன் மஞ்சம் மிகச் சோபையோடு விளங்கும். முருகன் சந்நிதியில் விழுந்து . வணங்கி எழுந்தால் அர்ச்சகர் விபூதிப் பிரசாதத்தை இலையில் வைத்தே கொடுப்பார்.

இப்படி இலை விபூதி கொடுப்பதற்கென்றே சொக்கம்பட்டி ஜமீன்தாராயிருந்த ஒருவர் 12 கோட்டை நன்செய் நிலங்களை மானியமாக விட்டிருந்தாராம். முருகனுக்குத் தினசரி எட்டுக்கால பூஜை நடக்கிறது. ஒவ்வொரு பூஜைக்கும் தனித்தனி நைவேத்தியங்கள். உண்டு. பணம் கொடுத்து நைவேத்தியங்களை அருந்தி நம் வயிற்றுப் பசியையும் தீர்த்துக் கொள்ளலாம். ஆத்மப் பசிதான் முருகனை வணங்கி எழுந்ததுமே தீர்ந்திருக்குமே!