பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

வேங்கடம் முதல் குமரி வரை

அவனுக்கு அவளே உரியவள் என்று கோடி காட்டுகிறார். சரி, இது இருக்கட்டும். மங்கைப் பருவத்தின் அழகெல்லாம் திரண்டிருக்கும் வள்ளியை, தெரிவை என்று கிழவியாக்கி விடுகிறாரே அருணகிரியார் என்பது தான் என் கோபத்திற்குக் காரணம். குறிஞ்சிக் கிழவனுக்கு ஏற்ற கிழவியாக இருக்கட்டும் வள்ளி, என்று நினைத்தாரோ என்னவோ! இன்னும் திருமலை முருகன் பிள்ளைத் தமிழுக்கு உரியவனாகவும் இருந்திருக்கிறான். குறவஞ்சி, நொண்டி நாடகம், பள்ளு, காதல், பிரபந்தங்களும், இந்த முருகனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்தே பாடப்பட்டிருக்கின்றன.

ஐவர் சகாயன், மருகன்
திருமலை ஆறுமுகத்
தெய்வ சுகாயமுண்டே,
வருமோ கொடுந்தீவினையே

என்று பெரியவன் கவிராயர் பள்ளில் பாடி இருக்கிறார். அத்தகைய உறுதியான உள்ளத்தை அந்த முருகன் அளிக்கக் கூடியவன் என்பதற்காகவே ஒரு நடை அவன் சந்நிதிக்குச் செல்லலாம்.

ஒன்றே ஒன்று, சொல்ல மறந்து விட்டேனே எனது குடும்பத்தின் குலகுருவாய் விளங்கியவர் திருப்புகழ் சாமி என்னும் வண்ணச்சரபம் முருகதாச சுவாமிகள். அவர் திருமலை முருகனிடத்து ஆராத காதல் உடையவர். கிட்டத்தட்ட நூறு வருஷங்களுக்கு முன் திருமலையில் ஏறி இருக்கிறார். திருமலை முருகனை வணங்கி இருக்கிறார்.

மலை மீதிருந்து கீழே தன் உடலை உருட்டியிருக்கிறார். குமரனும். அந்த உடலுக்கு யாதொரு தீங்கும் நேரிடா வண்ணம் காத்திருக்கிறார்.. இதை அவரே பாடுகிறார்.