பக்கம்:வைணமும் தமிழும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ உரைவளம்

141


மற்றொரு பாசுரத்திற்கும் உள்ள பொருள் தொடர்பைக் கூறிச் செல்லும் பாங்கு வேறு எவ்வுரையிலும் காண்டல் அரிது. இவ் வியாக்கியானங்கள் இன்றேல் திவ்வியப் பிரபந்தத்தின் பொருள் சிறப்பினையெல்லாம் அறிந்து கூறவல்லார் ஒருவரும் இலர்.

முந்துறவே பிள்ளான் முதலானோர் செய்தருளும்
அந்த வியாக்கியைகள் அன்றாகில் - அந்தோ
திருவாய் மொழிப்பொருளைத் தேர்ந்துரைக்க வல்ல
குருவார்.இக் காலம்நெஞ்சே கூறு.[1]

என்று மணவாளமாமுனிகளும் கூறியுள்ளதைக் காணலாம்.

ஒரு முக்கிய நிகழ்ச்சி: மணவாளமாமுனிகள் காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்று ஈட்டின் பெருமைக்குச் சான்றாக அமைகின்றது. மணவாளமாமுனிகளின் ஆசாரியர் திருவாய்மொழிப்பிள்ளை மாமுனிகள் பிள்ளையவர்களிடம் திருவாய்மொழி முதலான திவ்வியப் பிரபந்தங்களின் பொருட்சிறப்பினையெல்லாம் ஐயம் திரிபறக் கேட்டுத் தெளிந்தவர். தாம் அறிந்தவற்றை அனைவரும் கேட்டு அறிந்து உய்யும்படி கூற வேண்டும் என்பது மாமுனிகளின் திருவுள்ளம். இத் திருவுள்ளம் கொண்டவராய் திருவரங்கத்தில் வாழ்ந்திருந்த காலத்தில் திருவரங்கப்பெருமான் அர்ச்சகர் மூலம் மாமுனிகளை அழைத்தருளித் தாமும், தம் அடியார்களும் திருவாய்மொழியின் பொருட்சிறப்பினைக் கேட்டு மகிழ்ந்து வாழும்படி பெரிய திருமண்டபத்தில் நடத்துமாறு அருளப் பாடிட்டு நியமித்தருளினார். இதனை,


  1. உ.ர.மா 40