10
வ.உ.சி.
கலெக்டர் வின்ச் ஸ்ரீ சிதம்பரம் பிள்ளைக்குச் சொல்லுதல்
நாட்டி லெங்கும் சுதந்திர வாஞ்சையை
நாட்டினாய்—கனல்—மூட்டினாய்,
வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே
மாட்டுவேன்—வலி—காட்டுவேன். (நாட்டி)
கூட்டங் கூடி வந்தே மாதரமென்று
கோஷித்தாய்,—எமை—தூஷித்தாய்,
ஓட்ட நாங்க ளெடுக்க வென்றே கப்பல்
ஓட்டினாய்,—பொருள்—ஈட்டினாய் (நாட்டி)
கோழைப்பட்ட ஜனங்களுக் குண்மைகள்
கூறினாய்,—சட்டம்—மீறினாய்,
ஏழைப் பட்டிங் கிறத்த லீழிவென்றே
ஏசினாய்,—வீரம்—பேசினாய் (நாட்டி)
அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள்
ஆக்கினாய்,—புன்மை—போக்கினாய்,
மிடிமை போதும் நமக்கென் றிருந்தோரை
மீட்டினாய்,—ஆசை—யூட்டினாய் (நாட்டி)
தொண்டொன் றேதொழி லாக்கொண் டிருந்தோரைத்
தூண்டினாய்,—புகழ்—வேண்டினாய்,
கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள்
காட்டினாய்.—சோர்வை—யோட்டினாய் (நாட்டி)
எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை
ஏவினாய்,—விதை—தூவினாய்,
சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல்
செய்யவோ?—நீங்கள்—உய்யவோ? (நாட்டி)
சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திச்
சொல்லுவேன்,—குத்திக்—கொல்லுவேன்
தடிப் பேசுவோ ருண்டோ ? சிறைக்குள்ளே
தள்ளுவேன்,—பழி—கொள்ளுவேன். (நாட்டி)
ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை சொல்லிய மறுமொழி
சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே
துஞ்சிடோம்—இனி—அஞ்சிடோம்
எந்த நாட்டினு மிந்த அநீதிகள்
ஏற்குமோ—தெய்வம்—பார்க்குமோ?