பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. வானமாமலை

11

வந்தே மாதர மென்றுயிர் போம்வரை
வாழ்த்துவோம்—முடி—தாழ்த்துவோம்
எந்த மாருயி ரன்னையைப் போற்றுதல்
ஈனமோ ?—அவ—மானமோ ?

பொழுதெல்லா மெங்கள் செல்வங்கொள்ளை கொண்டு
போகவோ?—நாங்கள்–—சாகவோ?
அழுதுகொண் டிருப்போமோ? ஆண்பிள்ளைகள்
அல்லமோ?—உயிர்—வெல்லமோ?

நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்
நாய்களோ?—பன்றிச்—சேய்களோ?
நீங்கள் மட்டு மனிதர்க ளோவிது
நீதமோ?—பிடி—வாதமோ?

பார தத்திடை யன்பு செலுத்துதல்
பாபமோ?—மனம்—தாபமோ?
கூறு மெங்கள் மிடிமையைத் தீர்ப்பது
குற்றமோ—இதிற்—செற்றமோ?

ஒற்றுமை வழியொன்றே வழியென்ப
தோர்ந்திட்டோம்—நன்கு—தேர்ந்திட்டோம்
மற்று நீங்கள் செய்யுங்கொடு மைக்கெலாம்
மலைவுறோம்—சித்தம்—கலைவுறோம்

சதையைத் துண்டுதுண் டாக்சினு மன்னெண்ணம்
சாயுமோ?—ஜீவன்—ஓயுமோ?
இதயத் துள்ளே விலங்கு மஹாபக்தி
யேகுமோ?—நெஞ்சம்—வேகுமோ?

பிரிட்டிஷ் அரசின் அதிகார வர்க்கம் சிதம்பரம் பிள்ளை மீது கொண்டிருந்த கண்ணோட்டத்தைப் பின்ஹே என்ற நீதிபதியும், விஞ்சும் கூறிய கருத்துக்கள் காட்டுகின்றன. அவர்கள் சிதம்பரம் பிள்ளையை வெறுத்தார்கள். ராஜத்துரோகி என்று கருதினார்கள். அவரையும், அவரது கருத்துக்களையும் அழித்துவிட முயன்றார்கள்.

இந்திய விடுதலையில் ஆர்வமுடையவர்கள் அவரை வீரர் என்று போற்றினார்கள், அவர் விஞ்சுதுரை போன்ற ஆதிக்க வெறியர்களைத் தைரியமாக எதிர்த்ததை இந்தியரனைலருக்கும் முன் மாதிரியாகக் காட்டினார்கள். இந்நிகழ்ச்சியிலிருந்து பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தின் மனப்பாங்கையும், அதை எதிர்ப்பதற்குத் தேவையான துணிவையும் வ. உ. சி. யின் எடுத்துக்காட்டின் மூலம் சுட்டிக் காட்டினார்கள்: