பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

27


நடத்திக் கொண்டிருந்த போது, அந்த நாட்டு அரசரின் மகள் மீடிய MEEDEA என்பவளைக் கடத்திச் சென்று விட்டார்கள்!

கோல்ஷிஸ் மன்னன் இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து, தனது மகளைத் திருப்பித் தருமாறு கிரேக்கத்துக்குத் தூது அனுப்பினான். ஆர்கோஸ் நாட்டில் ‘அயோ’ என்பவளைக் கடத்திய போது நாங்கள் நட்ட ஈடு ஏதும் தரவில்லை, என்று கடுமையாகப் பதில் கூறி அனுப்பி விட்டார்கள்.

இந்தக் கடத்தல் சம்பவத்திற்குப் பிறகு ஐம்பதாண்டுகள் உருண்டோடின. ‘பிரியம்’ என்பவரின் மகனான ‘பாரிஸ்’, மேலே கூறிய கதைகளைக் கேட்டதும், அது போலவே கிரேக்க நாட்டிலே இருந்து ஹெலன் HELEN என்ற பேரழகியைக் கடத்திச் சென்றிடத் திட்டமிட்டுக் கிரேக்கத் துறைமுகம் ஒன்றை வந்தடைந்தான்.

இரு நாட்டின் இந்த இருவேறு வரலாற்றுச் சம்பவங்களை இங்கே ஹிராடெடஸ் சுட்டிக் காட்டியது ஏன்? அப்போது தான், உண்மையை முதன் முதலாக ஒருவனால் புரிந்து கொள்ள முடியும். வரலாறு என்றால் என்ன? அதற்கு ஹிராடெடஸ் என்ற சரித்திர ஞானி, இயேசு பெருமான் பிறப்பதற்குச் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பேயே தகுந்த விளக்கத்தை வழங்கியுள்ளார்.

நாம் பிறந்த மண்ணின் ஊர், நாடு ஆகியவற்றின் வரலாற்றுச் செய்திகளையும், அங்குள்ள மக்களது வாழ்க்கை நிலைகளையும், காதல், போர் ஆகியவற்றினால் ஏற்பட்ட அனுபவங்களையும், அவர்களது சாதனைகளையும் என்றும் அழியாதவாறு எழுதி வைக்க வேண்டும்.

இவ்வாறு எழுதி வைக்கப்படும் குறிப்புகளே வரலாறு எனப்படும். ஹிராடெடஸ் வரலாறு என்றால் என்ன என்பதற்கு இவ்வளவு அழகாக விளக்கம் தந்துள்ளது மட்டுமன்று, அதற்குரிய சான்றாக தனது ‘வரலாறுகள்’ என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.