பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85


223. செயலமர் தலைமை நீதிபதியை அமர்த்துதல் :

ஓர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிப் பதவி காலியாக இருக்கும் போது, அல்லது அத்தகைய தலைமை நீதிபதி எவரும் தம் இருத்தலின்மை அல்லது பிறவாறான காரணத்தால் தமது பதவிக்குரிய கடமைகளை புரிய இயலாதிருக்கும்போது, குடியரசுத்தலைவர் அதன்பொருட்டு அமர்த்தும் அந்நீதிமன்றத்துப் பிற நீதிபதிகளில் ஒருவர் அப்பதவிக்குரிய கடமைகளை புரிந்து வருவார்.

224. கூடுதல் மற்றும் செயலமர் நீதிபதிகளை அமர்த்துதல் :

(1) ஓர் உயர் நீதிமன்றத்தின் அலுவல் அப்போதைக்கு அதிகரித்துள்ளதன் காரணமாக அல்லது அங்குள்ள வேலை நிலுவைகள் காரணமாக, அந்த நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதுபோது உயர்த்த வேண்டுமெனக் குடியரசுத்தலைவருக்குத் தோன்றுமாயின், குடியரசுத்தலைவர், உரிய தகுதிப்பாடுள்ளவர்களை ஈராண்டுக்கு மேற்படாமல், தாம் குறித்துரைக்கும் கால அளவுக்கு அந்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக அமர்த்தலாம்.

(2) ஓர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியல்லாத பிற நீதிபதி எவரும் தம் இருத்தலின்மை காரணமாக அல்லது பிற காரணம் எதனாலும் தமது பதவிக்குரிய கடமைகளைப் புரிய இயலாதிருக்கும்போது அல்லது தலைமை நீதிபதியாக அப்போதைக்குச் செயலுறுவதற்கு அமர்த்தப்பெறுகிறபோது, குடியரசுத்தலைவர், உரிய தகுதிப்பாடுள்ள ஒருவரை, அந்த நீதிமன்றத்தின் நிலையமர் நீதிபதி தமது கடமைகளை மீண்டும் தொடங்குகிற வரையிலும், அந்நீதிமன்றத்தின் ஒரு நீதிபதியாகச் செயலுறுவதற்கு அமர்த்தலாம்.

(3) ஓர் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் அல்லது செயலமர் நீதிபதியாக அமர்த்தப்பெறும் எவரும், அறுபத்திரண்டு வயது நிறைவெய்திய பின்பு பதவி வகித்தல் ஆகாது.

224அ. உயர் நீதிமன்றங்களின் அமர்வுகளில், ஓய்வு பெற்ற நீதிபதிகளை அமர்த்துதல் :

இந்த அத்தியாயத்தில் எது எவ்வாறிருப்பினும், ஒரு மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, எச்சமயத்திலும், குடியரசுத்தலைவரின் முன்னிசைவுடன், அந்த நீதிமன்றத்தில் அல்லது பிற உயர் நீதிமன்றம் எதிலும் நீதிபதி பதவி வகித்த ஒருவரை அந்த மாநிலத்து உயர் நீதிமன்றத்தின் ஒரு நீதிபதியாக அமர்ந்து செயலுறும்படி கேட்டுக்கொள்ளலாம்; அவ்வாறு கேட்டுக்கொள்ளப்பெற்ற ஒவ்வொருவரும், அதன்படி அமர்ந்து செயலுறுங்கால், குடியரசுத்தலைவர் ஆணையின்வழி தீர்மானிக்கும் படித்தொகைகளுக்கு உரிமை கொண்டிருப்பதோடு, அந்த உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவருக்குற்ற அதிகாரவரம்பு, அதிகாரங்கள், மதிப்புரிமைகள் ஆகிய அனைத்தையும் உடையவர் ஆவார்; ஆனால், மற்றபடி அவர் அந்நீதிமன்றத்தின் ஒரு நீதிபதியாகக் கொள்ளப்பெறுவதில்லை:

வரம்புரையாக: மேலே கூறப்பட்ட எவரும், அந்நீதிமன்றத்தின் ஒரு நீதிபதியாக அமர்ந்து செயலுறுவதற்கு இசைவளித்திருந்தாலன்றி, அவரை அவ்வாறு செயலுறும்படி இந்த உறுப்பிலுள்ள எதுவும் வேண்டுறுத்துவதாகக் கொள்ளப்படுதல் ஆகாது.

225. நிலவுறும் உயர் நீதிமன்றங்களின் அதிகாரவரம்பு :

இந்த அரசமைப்பின் வகையங்களுக்கும் இந்த அரசமைப்பினால் வழங்கப்பட்ட அதிகாரங்களின் பயன்திறன்வழி உரிய சட்டமன்றம் இயற்றிய சட்டம் ஒன்றன் வகையங்களுக்கும் உட்பட்டு, நிலவுறும் உயர் நீதிமன்றம் ஒன்றனுக்குற்ற அதிகாரவரம்பும், அதில் முறையாற்றப்படும் சட்டநெறியும், அந்நீதிமன்றத்தின் விதிகளை வகுப்பதற்கும், அந்நீதிமன்றத்தின் அமர்வுகள், அதன் உறுப்பினர்கள் தனியாக அல்லது ஆயமாக அமர்தல் ஆகியவற்றை ஒழுங்குறுத்துவதற்குமான அதிகாரம் எதுவும் உள்ளடங்கலாக, அந்நீதிமன்றத்தில் நீதி நிருவாகம் தொடர்பாக அதன் நீதிபதிகளுக்கு உள்ளதான அதிகாரங்களும், இந்த அரசமைப்பின் தொடக்கநிலைக்கு ஒட்டிமுன்பு இருந்தவாறே இருந்துவரும்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/110&oldid=1468758" இலிருந்து மீள்விக்கப்பட்டது