154
________________
334. பதவியிடங்களை ஒதுக்கீடு செய்தலும் தனியுறு சார்பாற்றம் அளித்தலும் [1][அறுபது] ஆண்டுகளுக்குப் பின்பு அற்றுப்போதல் :
இந்தப் பகுதியின் மேலே கண்ட வகையங்களில் எது எவ்வாறிருப்பினும்—
(அ) மக்களவையிலும் மாநிலங்களின் சட்டமன்றப் பேரவைகளிலும் பட்டியலில் கண்ட சாதியினருக்கும் பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கும் பதவியிடங்களை ஒதுக்கீடு செய்தல்,
(ஆ) மக்களவையிலும் மாநிலங்களின் சட்டமன்றப் பேரவைகளிலும் நியமனம் வாயிலாக ஆங்கிலோ-இந்தியர் சமூகத்தினருக்குச் சார்பாற்றம் அளித்தல்,
ஆகியவை தொடர்பான இந்த அரசமைப்பின் வகையங்கள், இந்த அரசமைப்பின் தொடக்க நிலையிலிருந்து [1][அறுபது] ஆண்டுக் காலஅளவு கழிவுற்றதும் செல்திறம் அற்றுப் போகும்:
வரம்புரையாக: அப்போது நிலவுறும் மக்களவை அல்லது, நேர்வுக்கேற்ப, ஒரு மாநிலச் சட்டமன்றப் பேரவை கலைக்கப்படும் வரையில், இந்த உறுப்பிலுள்ள எதுவும், மக்களவையில் அல்லது அந்த மாநிலச் சட்டமன்றப் பேரவையிலுள்ள சார்பாற்றம் எதனையும் பாதித்தல் ஆகாது.
335. பணியங்களுக்கும் பணியடைகளுக்கும் பட்டியலில் கண்ட சாதியினர், பட்டியலில் கண்ட பழங்குடியினர் ஆகியோரின் கோருரிமைகள் :
ஒன்றியத்தின் அல்லது ஒரு மாநிலத்தின் அலுவற்பாடுகள் தொடர்பான பணியங்களுக்கும் பணியடைகளுக்கும் அமர்த்தங்கள் செய்யுங்கால், நிருவாகத் திறப்பாட்டினைப் பேணுவதற்கு ஒவ்வும் வகையில், பட்டியலில் கண்ட சாதியினர் பட்டியலில் கண்ட பழங்குடியினர் ஆகியோரின் கோருரிமைகளைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்:
[2][வரம்புரையாக: ஒன்றியத்தின் அல்லது மாநிலம் ஒன்றின் அலுவற்பாடுகளுடன் தொடர்புடைய பணியங்களின் அல்லது பணியடைகளின் வகை எதிலும் அல்லது வகைகள் எவற்றிலும் பதவி உயர்வு குறித்த பொருட்பாடுகளில் ஒதுக்கீடு செய்வதற்காக தேர்வு எதிலும் தகுதிப்பாடுடைய மதிப்பெண்களைத் தளர்த்துவதன் வாயிலாக அல்லது மதிப்பீட்டுத்தரமுறைகளை தாழ்த்துவதன் வாயிலாக பட்டியலில் கண்ட சாதிகளின் மற்றும் பட்டியலில் கண்ட பழங்குடிகளின் உறுப்பினர்கள் சார்பாக வகையம் எதனையும் செய்வதற்கு இந்த உறுப்பில் உள்ள எதுவும் தடையூறு ஆவதில்லை]
336. குறித்தசில பணியங்களில் ஆங்கிலோ-இந்தியர் சமூகத்தினருக்கான தனியுறு வகையம் :
(1) இந்த அரசமைப்பின் தொடக்க நிலைக்குப் பின்பு முதல் ஈராண்டுகளின்போது, இருப்பூர்தியம், சுங்கம், அஞ்சல், தந்தி ஆகிய ஒன்றியத்துப் பணியங்களிலுள்ள பணியடைகளுக்கு ஆங்கிலோ-இந்தியர் சமூகத்தினரின் அமர்த்துகை, 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு பதினைந்தாம் நாளை ஒட்டி முன்பு இருந்த அதே அடிப்படையில் செய்யப்படுதல் வேண்டும்.
அதற்கு அடுத்துப் பின்வரும் ஒவ்வோர் ஈராண்டுக் காலஅளவின்போதும் மேற்சொன்ன பணியங்களில் அச்சமூகத்தினருக்கு ஒதுக்கீடு செய்யப்படும் பணியடைகளின் எண்ணிக்கை, அதற்கு ஒட்டி முந்தைய ஈராண்டுக் காலஅளவின் போது அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட எண்ணிக்கையைவிட ஏறத்தாழப் பத்து விழுக்காடு குறைவாயிருக்கும்: