பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

167


வரம்புரையாக: இந்தக் கூறிலுள்ள எதுவும், ஓர் உயர் நீதிமன்றத்திடம் உற்றமைந்துள்ள அல்லது அதனால் செலுத்தப்படுவதாகும் அதிகாரங்களில் எதனையும் தாமே மேற்கொள்ளவோ, உயர் நீதிமன்றங்கள் தொடர்பான இந்த அரசமைப்பின் வகையம் எதனின் செயற்பாட்டையும் முழுவதுமாக அல்லது பகுதியாக, தற்காலிகமாக நிறுத்திவைக்கவோ குடியரசுத்தலைவருக்கு அதிகாரமளிப்பதில்லை.

(2) அத்தகைய சாற்றாணை எதுவும், பிந்திய சாற்றாணை ஒன்றினால் முறித்தறவோ மாறுதலோ செய்யப்படலாம்.

(3) இந்த உறுப்பின்படி பிறப்பிக்கப்படும் சாற்றாணை ஒவ்வொன்றும், நாடாளுமன்ற அவை ஒவ்வொன்றிலும் முன்னிடப்படுதல் வேண்டும்; மேலும், முந்திய சாற்றாணை ஒன்றை முறித்தறவு செய்வதல்லாத சாற்றாணை எதுவும், இரண்டு மாதம் கழுவுறுவதற்கு முன்பே நாடாளுமன்ற ஈரவைகளும் தீர்மானங்கள் வாயிலாக அதற்கு ஒப்பேற்பு அளித்திருந்தாலன்றி, அக்காலஅளவு கழிவுற்றதும் செயற்பாடு அற்றுப்போகும்:

வரம்புரையாக: (முந்திய சாற்றாணையை முறித்தறவு செய்வதல்லாத) சாற்றாணை எதுவும் மக்களவை கலைக்கப்பட்டிருக்கும் காலத்தின்போது பிறப்பிக்கப்படுகிறது என்றாலும் அல்லது இந்தக் கூறில் சுட்டப்பட்ட இரண்டு மாதக் காலஅளவின்போது மக்களவையின் கலைப்பு நிகழ்கிறது என்றாலும், அந்தச் சாற்றாணைக்கு ஒப்பேற்பளிக்கும் தீர்மானம் ஒன்று மாநிலங்களவையால் நிறைவேற்றப்பட்டிருந்து, 'ஆனால்' அக்காலஅளவு கழிவுறுவதன் முன்பு, அச்சாற்றாணை பொறுத்த தீர்மானம் எதுவும் மக்களவையால் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், மக்களவை, அதன் மறுஅமைப்புக்குப் பின்பு, முதன்முறையாக அமரும் தேதியிலிருந்து முப்பது நாள் கழிவுறுவதற்கு முன்பு, அச்சாற்றாணைக்கு ஒப்பேற்பளிக்கும் தீர்மானம் ஒன்று மக்களவையால் நிறைவேற்றப்பட்டிருந்தாலன்றி, அச்சாற்றாணை அத்தேதியிலிருந்து முப்பது நாள் காலஅளவு கழிவுற்றதும் செயற்பாடு அற்றுப்போகும்.

(4) மேற்கண்டவாறு ஒப்பேற்பளிக்கப்பட்ட சாற்றாணை ஒன்று முறித்தறவு செய்யப்பட்டிருந்தாலன்றி, அச்சாற்றாணை பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாதக் காலஅளவு கழிவுற்றதும், அது செயற்பாடு அற்றுப்போகும்:

வரம்புரையாக: அத்தகைய சாற்றாணை ஒன்று தொடர்ந்து செல்லாற்றலில் இருந்து வருவதற்கு ஒப்பேற்பளிக்கும் ஒரு தீர்மானம் நாடாளுமன்ற ஈரவைகளாலும் நிறைவேற்றப்படுமாயின், அவ்வாறு நிறைவேற்றப்படுந்தொறும் அந்தச் சாற்றாணை முறித்தறவு செய்யப்பட்டாலன்றி, இந்தக் கூறின்படி பிறவாறு அது செயற்பாடு அற்றுப்போயிருக்கும் தேதியிலிருந்து மேற்கொண்டும் ஓர் ஆறு மாதக் காலஅளவுக்குத் தொடர்ந்து செல்லாற்றலில் இருந்துவரும்; ஆனால், அத்தகைய சாற்றாணை எதுவும், எந்நேர்விலும், மூன்றாண்டுகளுக்கு மேல் செல்லாற்றலில் இருந்துவருதல் ஆகாது:

மேலும் வரம்புரையாக: அத்தகைய ஆறு மாதக் காலஅளவின்போது மக்களவை கலைக்கப்பட்டு அத்தகைய சாற்றாணை தொடர்ந்து செல்லாற்றலில் இருந்துவருவதற்கு ஒப்பேற்பளிக்கும் தீர்மானம் ஒன்று மாநிலங்களவையால் நிறைவேற்றப்பட்டு ஆனால், அச்சாற்றாணை தொடர்ந்து செல்லாற்றலில் இருந்து வருவதற்கான தீர்மானம் எதுவும் மேற்சொன்ன காலஅளவின்போது மக்களவையால் நிறைவேற்றப்படாமலிருப்பின், மக்களவை, அதன் மறுஅமைப்புக்குப் பின்பு முதன்முறையாக அமரும் தேதியிலிருந்து முப்பதுநாள் கழிவுறுவதற்கு முன்பு அச்சாற்றாணை தொடர்ந்து செல்லாற்றலில் இருந்து வருவதற்கு ஒப்பேற்பளிக்கும் தீர்மானம் ஒன்று மக்களவையால் நிறைவேற்றப்பட்டிருந்தாலன்றி, அச்சாற்றாணை, அத்தேதியிலிருந்து முப்பதுநாள் காலஅளவு கழிவுற்றதும் செயற்பாடு அற்றுப்போகும்:

பின்னும் வரம்புரையாக: பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்து, 1987 மே 11ஆம் நாளன்று (1)ஆம் கூறின்படி பிறப்பிக்கப்பட்ட சாற்றாணையைப் பொறுத்தவரை, இந்தக் கூறின் முதலாம் வரம்புரையில் "மூன்று ஆண்டுகள்" என்று சுட்டப்படுவது, "[ஐந்து ஆண்டுகள்]" என்று சுட்டப்படுவதாகப் பொருள்கொள்ளப்படுதல் வேண்டும்.

[1]


  1. 1991 ஆம் ஆண்டு அரசமைப்பு (அறுபத்து எட்டாம் திருத்தம்) சட்டத்தால் மாற்றாக அமைக்கப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/193&oldid=1469043" இலிருந்து மீள்விக்கப்பட்டது