பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23


59. குடியரசுத்தலைவரின் பதவிக்கான வரைமுறைகள் :

(1) குடியரசுத்தலைவர் நாடாளுமன்ற ஈரவைகளில் எதிலுமோ மாநிலம் ஒன்றன் சட்டமன்ற அவை ஒன்றிலோ உறுப்பினராக இருத்தல் ஆகாது; மேலும், நாடாளுமன்ற ஈரவைகளில் ஒன்றன் அல்லது மாநிலச் சட்டமன்ற அவை ஒன்றன் உறுப்பினராகவுள்ள ஒருவர் குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெறுவாராயின், அவர் குடியரசுத்தலைவராகப் பதவி ஏற்கும் தேதியன்று அந்த அவையிலுள்ள தம் பதவியிடத்தை விட்டகன்றவராகக் கொள்ளப்பெறுவார்.

(2) குடியரசுத்தலைவர் பிற ஊதியப்பதவி எதனையும் வகித்தல் ஆகாது.

(3) குடியரசுத்தலைவர், தம் பதவிக்குரிய உறைவிடங்களில் வாடகை ஏதுமின்றி உறைவதற்கு உரிமைகொண்டவர் ஆவார்; நாடாளுமன்றம் சட்டத்தினால் தீர்மானிக்கும் பதவியூதியங்கள், படித்தொகைகள், மதிப்புரிமைகள் ஆகியவற்றிற்கும் அவர் உரிமைகொண்டவர் ஆவார்; அவ்வாறு அதன் பொருட்டு வகைசெய்யப்படும் வரையிலும், இரண்டாம் இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ள பதவியூதியங்கள், படித்தொகைகள், மதிப்புரிமைகள் ஆகியவற்றிற்கு அவர் உரிமைகொண்டவர் ஆவார்.

4) குடியரசுத்தலைவருக்குற்ற பதவியூதியங்களையும் படித்தொகைகளையும், அவருடைய பதவிக்காலத்தின்போது குறைத்துவிடுதல் ஆகாது.

60. குடியரசுத்தலைவருக்குற்ற ஆணைமொழி அல்லது உறுதிமொழி :

குடியரசுத்தலைவர் ஒவ்வொருவரும், குடியரசுத்தலைவராகச் செயலுறும் அல்லது குடியரசுத்தலைவருக்குற்ற பதவிப்பணிகளை ஆற்றிவரும் ஒவ்வொருவரும், தாம் பதவி ஏற்பதற்கு முன்பு, இந்தியத் தலைமை நீதிபதியின் முன்னிலையில் அல்லது அவர் இல்லாதபோது, அங்கிருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் மிக்க முதுநிலையரான ஒருவரின் முன்னிலையில், ஓர் ஆணை மொழியை அல்லது உறுதிமொழியைப் பின்வரும் சொன்முறையில் உள்ளபடி ஏற்றுக் கையொப்பமிடுதல் வேண்டும்; அதாவது

"அ,ஆ, ஆகிய நான், உண்மையான பற்றுடன் இந்தியக் குடியரசுத்தலைவரின் பதவிப்பொறுப்பை நிறைவேற்றி வருவதோடு (அல்லது இந்தியக் குடியரசுத்தலைவருக்குற்ற பதவிப்பணிகளை ஆற்றிவருவதோடு) அரசமைப்பு முறையினையும் சட்ட நெறியினையும் என் முழுத்திறன்கொண்டு புரந்தும் பேணியும் புறங்காத்தும் நிற்பேன் என்றும், இந்திய மக்களின் நற்பணிக்கும் நல்வாழ்வுக்கும் முற்றுமாக என்னை நான் ஆட்படுத்திக்கொள்வேன் என்றும் கடவுளை முன்னிறுத்தி ஆணை மொழிகின்றேன்,” உள்ளார்ந்து உறுதி மொழிகின்றேன்."

61. குடியரசுத் தலைவர் மீது அவையில் பழி சாட்டுவதற்கான நெறிமுறை :

(1) இந்த அரசமைப்பை மீறிய நடத்தைக்காக குடியரசுத்தலைவர் மீது அவையில் பழிசாட்டப்படுவதாயின், அதற்கான குற்றச்சார்த்து, நாடாளுமன்றத்தின் ஈரவைகளில் ஒன்றினால் கொணரப்படுதல் வேண்டும்.

(2) அத்தகைய குற்றச்சார்த்து கொணரப்படவேண்டுமெனில்

(அ) அக்குற்றச்சார்த்தினைக் கொணரவிருக்கும் செயற்குறிப்பு, ஒரு தீர்மானத்தின் வடிவில் இருத்தல் வேண்டும்; அந்த அவையின் மொத்த உறுப்பினர்களில் நான்கிலொரு பங்கிற்குக் குறையாதோர் அத்தீர்மானத்தை முன்மொழியவிருப்பதாகவுள்ள தங்கள் கருத்தினைத் தெரிவித்து, கையொப்பமிட்டு எழுத்துவழிப் பதினான்கு நாட்களுக்குக் குறையாமல் முன்னறிவிப்பு கொடுத்ததற்குப் பின்னர், அத்தீர்மானம் முன்மொழியப்பட்டிருத்தல் வேண்டும்; அத்துடன்,
(ஆ) அத்தீர்மானம் அந்த அவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றிலிரண்டு பங்கிற்குக் குறையாத பெரும்பான்மையினாரல் நிறைவேற்றப்பட்டிருத்தலும் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/48&oldid=1469186" இலிருந்து மீள்விக்கப்பட்டது