பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33


85. நாடாளுமன்றக் கூட்டத்தொடர்கள், அக்கூட்டத்தொடர்களை இறுதி செய்தல் மற்றும் கலைத்தல் :

(1) குடியரசுத்தலைவர், தாம் தக்கதெனக் கருதும் காலத்திலும் இடத்திலும் கூடுமாறு அவ்வப்போது நாடாளுமன்ற அவை ஒவ்வொன்றுக்கும் அழைப்பாணை விடுப்பார்; ஆனால், ஒரு கூட்டத் தொடரின் கடைசி அமர்வுக்கும், அடுத்த கூட்டத்தொடரின் முதல் அமர்வுக்கெனக் குறிப்பிடப்படும் தேதிக்கும் இடையேயுள்ள காலஅளவு ஆறு மாதங்களுக்குக் குறைவாகவே இருத்தல் வேண்டும்.

(2) குடியரசுத்தலைவர், அவ்வப்போது—

(அ) ஈரவைகளின் அல்லது ஈரவைகளில் ஒன்றின் கூட்டத்தொடரினை இறுதிசெய்யலாம்;
(ஆ) மக்களவையைக் கலைத்துவிடலாம்.

86. நாடாளுமன்ற அவைகளில் உரையாற்றவும் அவற்றிற்குச் செய்தியுரை அனுப்பவும் குடியரசுத்தலைவருக்குள்ள உரிமை :

(1) குடியரசுத்தலைவர் நாடாளுமன்ற ஈரவைகளில் ஒன்றில் அல்லது ஈரவைகளின் ஒருங்கமர் கூட்டத்தில் உரையாற்றலாம்; மேலும், அதற்காக உறுப்பினர்களின் வருகையை வேண்டுறுத்தலாம்.

(2) குடியரசுத்தலைவர், நாடாளுமன்றத்தில் அப்போது ஓர்விலுள்ள ஒரு சட்டமுன்வடிவைப் பொறுத்தோ பிற எதனையும் பொறுத்தோ நாடாளுமன்றத்தின் ஈரவைகளில் எதற்கும் செய்தியுரை அனுப்பலாம்; அவ்வாறான செய்தியுரையினைப் பெற்றுள்ள அவை, அச்செய்தியுரையில் ஓர்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென வேண்டுறுத்தப்பட்ட பொருட்பாட்டை ஒல்லும் விரைவுடன் ஓர்வுசெய்தல் வேண்டும்.

87. குடியரசுத்தலைவரின் சிறப்புரை :

(1) மக்களவைக்கான பொதுத்தேர்தல் ஒவ்வொன்றுக்கும் பின்பு நடைபெறும் முதல் கூட்டத்தொடரின் தொடக்கத்திலும், ஒவ்வோர் ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் தொடக்கத்திலும், நாடாளுமன்ற ஈரவைகளின் ஒருங்கமர் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் உரையாற்றி, அதனைக் கூட்டியதற்கான காரணங்களையும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவிப்பார்.

(2) அவ்வுரையில் சுட்டப்பட்ட பொருட்பாடுகளைப் பற்றி விவாதம் செய்வதற்கு நேரம் ஒதுக்குவதற்காக, ஈரவைகளின் நெறிமுறையை ஒழுங்குறுத்தும்விதிகளின் வழி வகைசெய்யப்படுதல் வேண்டும்.

88. நாடாளுமன்ற அவைகள் தொடர்பாக அமைச்சர்களுக்கும் தலைமை வழக்கறிஞருக்கும் உள்ள உரிமைகள் :

அமைச்சர் ஒவ்வொருவரும், இந்தியத் தலைமை வழக்கறிஞரும், ஈரவைகளில் எதிலும் அல்லது அவைகளின் கூட்டு அமர்வு எதிலும் அல்லது தாம் உறுப்பினராகக் குறிக்கப்பெறும் நாடாளுமன்றக் குழு எதிலும் உரையாற்றவும் பிறவகையில் அதன் நடவடிக்கைகளில் பங்குகொள்ளவும் உரிமை உடையவர் ஆவார்; ஆனால், இந்த உறுப்பின் பயன்திறனை வைத்து அவர் வாக்களிக்கும் உரிமை கொண்டவர் ஆகார்.

நாடாளுமன்றப் பதவியாளர்கள்

89. மாநிலங்களவைத் தலைவரும், துணைத் தலைவரும் :

(1) இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர் தம் பதவிவழியில் மாநிலங்களவைத் தலைவராக இருப்பார்.

(2) மாநிலங்களவை, அந்த அவையின் உறுப்பினர் ஒருவரை அதன் துணைத்தலைவராகக் கூடிய விரைவில் தெரிந்தெடுத்தல் வேண்டும்; மேலும், துணைத்தலைவர் பதவி காலியாகுந்தொறும் மற்றோர் உறுப்பினரை அதன் துணைத்தலைவராக அந்த அவை தெரிந்தெடுத்தல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/58&oldid=1469120" இலிருந்து மீள்விக்கப்பட்டது