பக்கம் பேச்சு:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/273

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
⁠உயிர்நீப்பர் மானம் வரின்.

என்னும் இக்குறளில் வரும் "கவரிமா" என்னும் விலங்கை, கவரி மான் ஆக்கி விட்டனர் பிற்கால உரையாசிரியர்கள். உண்மையில், கவரிமா என்பது குளிர்ப் பிரதேசத்தில் வாழும் ஒரு வகை விலங்கு. அதன் உடல் முழுவதும் மயிர் நிறைந்திருக்கும். தன் மயிர்த்திரளிலிருந்து மயிர் நீக்கப்பட்டால், அது உயிர் வாழ இயலாது என்பது அதன் இயற்கை.

See: குறள் எண் 0969

கவரிமா என்பதற்கு கழகத் தமிழ் அகராதி, ஒரு விலங்கு என்றே பொருள் கொள்கிறது. மான் என வெளிப்படையாகச் சுட்டவில்லை. சுமார் 7000 அடி உயரமுள்ள பனிப்பிரதேசமான இமாலயப் பகுதிகளில் காணப்படும் எனச் சங்கப் பாடல்கள் அறிவிக்கின்றன. உயரமான மøப் பிரதேசங்களில் வாழும் இவ்விலங்குக்கு கடுங்குளிரைத் தாங்கிக் கொள்ள மயிர்க்கற்றை எனும் மேனிப் போர்வை அவசியம் தேவைப்படுகிறது.

தொல்காப்பிய மரபியலில் (17, 36, 39, 58) கவரி எனும் விலங்கு 4 இடங்களில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. அவற்றில் கவரியின் ஆண்பாற்பெயர் ஒருத்தல் ஏறு என்பதாக சுட்டப்படுகிறதே தவிர ஒரு இடத்திலும் கூட கவரிமான் எனக் குறிக்கவில்லை. “யாக்’ எனும் விலங்கானது ஆடுமாடு இனத்தைச் சேர்ந்ததாகும். இவ்விலங்கு மனிதர்களோடு நெருங்கிப் பழகும் தன்மை கொண்டது. இவை வாழும் பனிப் பிரதேசங்களில் வளரும் நரந்தம் எனும் புற்களையே உணவாக உட்கொள்ளும். அதனுடைய மயிர்க்கற்றை ஏதாவது ஒரு அவசியத்தையோ, பரிசோதிக்கவோ எண்ணி, அதன் மயிர்க்கற்றை மழிக்க நேரிட்டால், அவ்விலங்கு தரம் தாழ்த்திக் கொள்ளாது. அங்கேயே குளிரால் விரைத்து இறந்து விடுவது போன்றே, சான்றோர்கள் இழிவான காரியங்களால் தங்களுக்கு அவமானம் நேரிடின், உயிரை விடச் சிறிதும் தயங்கமாட்டார்கள். மானமே பெரிது உயிரைத் துச்சமாகவே கருதுவர். சான்றோர்கள் பாடலில் நீப்பின் எனும் சொல்லுக்கு ஒரு மயிரை மட்டும் பிடுங்குவது அல்லது மயிர்க்கற்றைகளை மழிப்பதே என்பது பொருளாகும்.

மேற்கண்ட கருத்துகளால் யாக் எனும் விலங்கே கவரிமா என்றும் கவரிமா என்பது கவரிமான் அல்ல என்றும் தெளிவாகிறது. இவ்வரிய கருத்தை சுருங்கச் சொல்லி விளங்க வைத்த வள்ளுவப் பெருந்தகையாரின், நுண்மான் நுழைப்புலனை எவ்வாறு புகழ்வதென்றே வார்த்தைகள் தோன்றவில்லை.

Refer: கவரிமா என்றால்...?

மணக்குடவர் உரை: ஒரு மயிர் நீங்கின் உயிர்வாழாத கவரிமாவைப் போன்ற மானமுடையார், மானம் அழியவரின் உயிர்விடுவர்.

பரிமேலழகர் உரை: மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் - தன் மயிர்த்திரளின் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமாவை ஒப்பார்; மானம் வரின் உயிர் நீப்பர் - உயிர் நீக்கத்தான் மானம் எய்தும் எல்லை வரின், அதனைத் தாங்காது இறப்பர்.

ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமாவை ஒப்பார்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் அனைவரும் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தன்னுடைய உடலின் மீதுள்ள மயிரை பிறர் நீக்கின உடனே தன் உயிரை விட்டு விடுகிற கவரிமானைப் போன்றவர்கள் மானிகள்', 'தனது மயிர்த்தொகுதியில் ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வைத்துக்கொண்டிராத கவரிமான் போன்ற இயல்புடையவர்கள்', 'மயிர் ஒன்று நீங்கினால் வாழாத கவரிமானை ஒப்பார்' என்ற படி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மேலும் விபரங்கள் அறிய: வள்ளுவன் சொன்ன கவரிமா கவரிமான் ஆனது எப்படி?

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி