பஞ்ச தந்திரக் கதைகள்/குரங்குக்கு அறிவு சொன்ன கொக்கு

விக்கிமூலம் இலிருந்து

13. குரங்குக்கு அறிவு சொன்ன கொக்கு
ஒரு காட்டில் பல குரங்குகள் வசித்து வந்தன. ஒரு நாள் இரவு குளிர் தாங்காமல் அவை குளிர் காய்வதற்கு எங்கே போகலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தன. அப்போது தூரத்தில் மின்மினிப்



பூச்சிகள் பறந்து கொண்டிருப்பதைக் கண்டு தீ என்று நினைத்துக் கொண்டு, அந்த இடத்தை நோக்கிச் சென்றன. குரங்குகள் பேசிக் கொண்டதைக் கேட்டு, மரத்தின் மேல் உட்கார்ந்திருந்த ஒரு கொக்கு 'குரங்குகளே அது தீயல்ல; மின்மினிப் பூச்சி’ என்று கூறியது. இதைக் கேட்டதும் அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு குரங்குக்கு மிகவும் கோபம் வந்து விட்டது. உடனே அது மரத்தின்மேல் பாய்ந்து சென்று அந்தக் கொக்கைப் பிடித்து, 'நீயா எனக்கு அறிவு புகட்டுகிறவன்?' என்று கேட்டு அப்படியே ஒரு பாறையில் அடித்துக் கொன்று விட்டது.

தீயவர்களுக்கு நல்லது சொல்லக் கூடாது.