பல்லவர் வரலாறு/3. பல்லவர் யாவர்?

விக்கிமூலம் இலிருந்து

3. பல்லவர் யாவர்?

பல்லவர் ஏறத்தாழ 700 ஆண்டுகள் தென் இந்தியாவில் நிலைத்து ஆட்சி புரிந்திருந்தும் - அவர்களைப் பற்றிய பல பட்டயங்களும் கல்வெட்டுகளும் கிடைத்திருந்து - ‘அவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்?’ என்பன போன்ற கேள்விகட்கு ஏற்ற விடையளித்தல் எளிதன்று. அவர்களைப் பற்றிக்கிடைத்துள்ள மூலங்களைக்கொண்டு, பட்ட முறைமையை முற்றும் முறைப்படுத்தவும் முடியவில்லை.

பலதிறப்பட்ட கூற்றுகள்:- இந்திய வரலாறு நூலாசிரியரான வின்ஸென்ட் ஸ்மித் என்பார், தமது ‘பழைய இந்திய வரலாறு’ என்னும் நூலின் முதற்பதிப்பில், ‘பல்லவர் என்பவர் பஹ்லவர் என்னும் பாரசீக மரபினர் என்றும், இரண்டாம் பதிப்பில், ‘பல்லவர் என்பவர் தென் இந்தியாவிற்கே உரியவர். அவர் கோதவரிக்கும் கிருஷ்ணைக்கும் இடைப்பட்ட வேங்கி நாட்டவராகலாம் என்றும், மூன்றாம் பதிப்பில், பஹ்லவர் என்னும் சொல்லைப் பல்லவர் என்னும் சொல்லோடு ஒப்பிட்டுப் பார்த்து, அவ் வொப்புமை மட்டுமே கொண்டு பல்லவர் பாரசீகர் எனக் கூறல் தவறு. ‘பல்லவர் என்பவர் தென் இந்தியரே ஆவர் என்றும் முடிபு கூறியுள்ளார்.”[1]

சாதவாஹனப் பேரரசும் தமிழகமும்

(கி.மு. 200-முதல் கி.பி.250)


ஆயின், ரைஸ் என்னும் ஆராய்ச்சியாளர், ‘பஹ்லவர், மரபினரே பல்லவர்’ என்று முடிபு செய்தனர்.[2] பேராசிரியர் துப்ராய் என்பவர், ‘கி.பி. 150 இல் ருத்ர தாமன் என்னும் ஆந்திரப் பேரரசன் அமைச்சனான சுவிராகன் என்பவன் பஹ்லவன். அவன் மரபினரே ஆந்திரப் பேரரசு அழிவுறுங்காலத்தில் அதன் தென்பகுதியைத் தமதாக்கி ஆண்டவராவர். பட்டயங்களில் காணப்படும் முதற் பல்லவர் அரசர் அல்லர், ஆந்திரப் பேரரசின் தென் மேற்கு மாகாணங்களை ஆண்டு வந்த சூட்டுநாகர் பெண்ணை மணந்து பட்டம்பெற்றவனே முதற்பல்லவன். அவனே வீரகூர்ச்சவர்மன் என்று பல்லவர் பட்டயங்களில் கூறப்படுமவன்’ என்று வரைந்துள்ளார்.[3]

இங்ஙனம் பல்லவர் என்பார் பஹ்லவர் மரபினரே என்று முடிபு கொண்டவர் பலர் உளர். இலங்கையிற் சிறந்த ஆராய்ச்சியாளராக இருந்த இராசநாயகம் என்பவர், ‘இலங்கையை அடுத்துள்ள மணிபல்லவம் (காரைத்தீவு) பல்லவர் பிறப்பிடமாகும். மணிமேகலையில் கூறப்பட்டள்ள சோழனை மணந்த பீலிவனை என்பவர் நாகர் மகள் ஆவாள். அவன் பெற்ற மைந்தனே திரையால் கடத்தப்பட்டுக்கரை சேர்ந்த முதல் பல்லவன். அவன் தொண்டைக் கொடியால் சுற்றப்பட்டு இருந்தமையின் தொண்டைமான் என்றும், திரைகளால் உந்தப்பட்டு வந்தமையின் திரையன் என்றும் வழங்கப்பெற்றான். அவன் மரபினரே தம் தாயகப் பெயரைத்தாங்கிப் (மணி பல்லவம்) பல்லவர் எனப்பட்டனர். பல்லவர் முதல் அரசன் பெரும்பாணாற்றுப் படையில் புகழப்பெற்ற தொண்டைமான் இளந்திரையன் ஆவன்’ என விளக்கியுள்ளார்.[4]

யாழ்ப்பாணம் யாழ்ப்பாண மக்களால் ‘மணிபுரம்’ எனப்படுகிறது; அங்கு நாகரும் இருந்தமையால் ‘மணி நாகபுரம்’ என்னும் பெயர் பெற்றது. இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வருபவர்க்கு யாழ்ப்பாணம் ஒரு போது (போத்து-Sprout) போலக் காணப்படுதலின், அது போது (போத்து) எனப்பட்டது. போது, போத்து, பல்லவம் என்பன ஒரே பொருளைக் குறிப்பன. யாழ்ப்பாணத்திலிருந்து போந்தவர் ஆதலின், தம்மைப் ‘போத்தர்’ என்றும் ‘பல்லவர்’ என்றும் பல்லவ அரசர் கூறிக் கொண்டனர். ‘மணிபல்லவம்’ என்னும் தீவு மணிமேகலையில் குறிக்கப்பட்டிருத்தல் காண்க. மணிமேகலை காலத்து மக்கட்கு விளங்கி இருத்தல் புலனாகும். பல்லவத்திலிருந்து வந்தவர் பல்லவர் என்று தம்மைமக் கூறிக் கொண்டமை. இயல்பே அன்றோ?’[5] ‘வீரகூர்ச்சன் நாகர் மகளை மணந்து அரசு பெற்றான்’ என்று பல்லவர் பட்டயம் கூறுதலும், கரிகாலன் நாகர் மகளை மணந்து பெற்ற இளந்திரையன் தொண்டைமண்டலம் ஆண்டான் என்பதும் ஆராய்ச்சிக்கு உரியன. மேலும், பல்லவர், இன்ன இடத்திலிருந்து தாம் வந்ததாக ஒரு பட்டயத்திலும் கூறிற்றிலர் என்பது கவனிக்கத்தக்கது.

ஆராய்ச்சியாளராகிய எலியட் செவேல் முதலியோர் தொண்டைமண்டலத்துப் பழங்குடியினரான குறும்பர் மரபினரே பிற்காலப் பல்லவர் என்றும் முடிவு செய்தனர். குறும்பர் ஆடுமாடுகளை மேய்ப்பவர். இதனைக் கருத்திற் கொண்டு. பால் - அவர் (பால் கறப்பவர் - குறும்பர்) என்பதே பல்லவர் எனத் திரிந்திருக்கலாம் என முடிவு செய்தவரும் சிலராவர்.[6]

‘மணிமேகலையில் கூறப்படும் ஆதொண்டச்சக்கரவர்த்தி குறும்பரை வென்று அவர் தம் குறும்பர் பூமியைத் தனதாக்கித் தன் பெயர் இட்டுத் தொண்ட மண்டலம் என வழங்கினான்’ என்பது செவிவழி வரும் செய்தியாகும். இது முன்னரே கூறப்பட்டது.

பல்லவர் தமிழர் அல்லர்

வின்ஸென்ட்ஸ்மித் தமது மூன்றாம் பதிப்பில் கூறியதே பெரிதும் பொருத்த முடையதாகத் தெரிகின்றது. ஏனையோர் கருத்துகட்குக் கடுகளவும் சான்றில்லை. என்னை? பிராத்ருத மொழியில் வெளியிடப்பட்ட பல்லவ பட்டயங்களோ, அல்லது வடமொழியில் எழுதப்பெற்ற பல்லவர் பட்டயங்களோ, பிற கல்வெட்டுகளோ ‘பல்லவர் பஹ்லவர் மரபினர்’ என்றோ, வேற்று நாட்டவர் என்றோ, ‘திரையர் மரபினர் என்றோ, ‘மணி பல்லவத் தீவினர்’ என்றோ குறிக்கவில்லை சங்க காலத்தில் தொண்டை மண்டலத்தை ஆண்ட இளங்கிள்ளி. இளந்திரையன் என்பார்க்கும் சிவஸ் கந்தவர்மன், ‘புத்தவர்மன்’ வீரகூர்சவர்மன் என்பார்க்கும் தொடர்பு ஏதும் இருந்திருத்தல் இயலாது என்பதைச் சிறிதளவு அறிவுடையாரும் தெளிவுறத்தெறிதல் கூடும் அன்றோ? மேலும் பல்லவர் பட்டயங்கள் அனைத்தும் பிராக்ருத மொழியிலும் பெரும்பாலான வடமொழியிலும் இருக்கின்றன. பல்லவர் சோழர் மரபினர் ஆயின் - இளந்திரையன் வழிவந்தவர் ஆயின் தமிழில் எழுதாது, தமிழ் மக்கட்கே புரியாத வடநாட்டு மொழிகளில் எழுதத் துணிந்திருப்பரோ?[7] கி.பி 9ஆம் நூற்றாண்டிற்கும் பிற்பட்ட சோழரோ, பாண்டியரோ வளர்க்காத முறையில் தமிழைப் புறக்கணித்து, வடமொழியைத் தமது ஆட்சியில் வளர்த்திருப்பரோ? பல்லவர் காலத்தில் வடமொழி தொண்டை மண்டலத்தில் பேரரசு செலுத்தியது என்பது மிகையாகாது. பாரவி, தண்டி முதலிய வடமொழிப் புலவர் பல்லவர் ஆட்சியில் செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பது தெரிகிறதேயன்றி, எந்தத் தமிழ்ப் புலவரும் கி.பி எட்டாம் நூற்றாண்டுவரை பல்லவர் ஆதரவு பெற்றதாகத் தெரியவில்லை. மேலும், பல்லவர் தம்மைப் ‘பாரத்வாச கோத்திரத்தார் என்று பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் கூறிக்கொள்கின்றனர்; குடிவழி அறிந்தவர்கள்; தமிழர்க்கு இருடிகள் கோத்திரம் எது?[8] இன்ன பிற காரணங்களால். பல்லவர் தமிழரின் வேறுபட்டவர் என்பதைத் தெளிவுறக் காணலாம். ஆயின், பல்லவர் யாவர்?

தொண்டை நாடும் சங்க நூல்களும்

வடபெண்ணை யாற்றைத் தென் எல்லையாகவும் சோணையாற்றை வட எல்லையாகவும் அரபிக்கடலை மேற்கு எல்லையாகவும் கலிங்கத்தையும் வங்க மாகாணத்தையும் கிழக்கு எல்லையாகவும் கொண்ட ஆந்திரப் பெருநாடு கி.மு. 184 முதல் கி.பி. 260 வரை செறிப்புற்று இருந்தது. வடபெண்ணை முதல் தென்பெண்ணைவரை இருந்தநிலப்பரப்பே அக்காலத்தொண்டை மண்டலம் எனப்பட்டது. அஃது அருவாநாடு, அருவா வடதலை நாடு என இரண்டு பிரிவுகளாக இருந்தது- முன்னதில் காஞ்சி நகரம் உட்பட்டது. பின்னது காஞ்சி முதல் வடபெண்ணை வரை இருந்த நாடாகும். இது குன்றுகளும் காடுகளும் சூழ்ந்த இடமாகும்; காளத்தி முதலிய மலையூர்களைத் தன்னகத்தே பெற்றது. அவ்விடம் இன்றும் ‘தொண்டைமான் மாகணி’ (மாகாணம்) எனப்படும். இரண்டு வெள்ளாறுகட்கு இடையில் உள்ள நிலமே சோழநாடு. தென்வெள்ளாற்றுக்குத் தென்பால் உள்ள இடமே பாண்டியநாடு. கொச்சி, திருவாங்கூர் நாடுகள் அடங்கிய இடமே பழைய சேர நாடாகும். குடகு முதலிய மலை நாட்டு இடங்களும் அவற்றைச் சார்ந்த கடற்கரையும் கொங்காணம் எனப்படும். அதனைச் சங்க காலத்தில் நன்னன் என்பவன் ஆண்டு வந்தான்.

வடக்கே இருந்த அருவா வடதலை நாட்டில் திருப்பதியைத் தன் அகத்தே கொண்ட மலைநாட்டுப் பகுதியைத் திரையன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் தலைநகரம் பாவித்திரி என்பது. அஃது இப்பொழுதையை கூடுர் தாலுக்காவில் உள்ள ரெட்டிபாளையம், என்னும் ஊராகும். இந்நிலப்பகுதி முன்னாளில் காகந்தி நாடு எனப்பெயர் பெற்றது. காகந்தி என்பது புகாரின் மறுபெயர் ஆகும். சோழர் இப் பகுதியைக் கைக்கொண்டமையின், இதற்குக் காகந்தி நாடு (புகாருக்கு உரிமையான நாடு) என்று பெயரிட்டனர் போலும் ‘கரிகாற் சோழன்’ காடு கெடுத்து நாடாக்கினான். விளை நிலங்கள் ஆக்கினான். ஏரி குளங்களை வெட்டுவித்தான்: தொண்டை மண்டலத்தை நாடாக்கினான்: நாகரிகத்தைத் தோற்றுவித்தான்.' என்று பட்டினப்பாலை முதலிய தமிழ் நூல்கள் கூறுகின்றன. இங்ஙனம் தொண்டை மண்டலம் சோழர் ஆட்சிக்கு வந்தது. முதல் சோழர் மரபினர் ஒருவர் தொண்டை மண்டலத்தை ஆண்ட செய்தி சங்கநூல்களில் காணக்கிடக்கின்றது. திரையன் அருவா வடதலை நாட்டை ஆண்டபோது, ‘இளந்திரையன்’ அருவா நாட்டை ஆண்டனள் என்பதும் அறியக்கிடக்கிறது. தொண்டைமான் இளந்திரையன் என்பவன் காஞ்சியை ஆண்ட தமிழ் அரசனாகப் பெரும்பாணாற்றுப்படையில் சிறப்பிக்கப்படுகிறான்.

தொண்டைமான் இளந்திரையான் காலத்தில் காளத்தி முதலிய மலைநாடுகளைச் சேர்ந்த காடுகளில் களவர் என்னும் வகுப்பினர் வாழ்ந்திருந்தனர். அவர்கட்குத் தலைவனாக இருந்தவன் புல்லி என்பவன். இவன் திரையனுக்கு அடங்கி இருந்தவனா அல்லது மாறுபட்டவனா என்பதை அறியக் கூடவில்லை. இந்த அளவே அகநானூறு முதலிய சங்க நூல்களால் நாம் அறியக்கிடக்கும் உண்மை ஆகும்.

எல்லைப் போர்கள்

வடபெண்ணையாற்றுக்கு வடக்கே ஆதோணியைச் சுற்றி உள்ள நிலப்பரப்பு சாதவாகனர் (ஆந்திரர்) ஆட்சியின் தென்மேற்குப் பகுதியாக இருந்தது. அந்த இடம் ‘சாதவாகனி இராட்டிரம்’ என்று வழங்கப்பட்டது. சாதவாகனருடைய பெரும் இந்தப் பகுதிக்குத் தலைவனாக இருந்தான். அதே காலத்தில் சாதவாகனரது தென்பகுதியை மேற்பார்த்து வந்த தலைவர்களே பல்லவர் ஆவர். ஆதலின். இந்தப் பகுதி தமிழகத்தின் அருவாவடதலை நாட்டிற்கும் வடக்கின் கண்ணது ஆதலின், எல்லைப் போர்கள் பல நடத்தவண்ணம் இருந்தன. இப் போர்களைப் பற்றிய விவரங்கள் அறிய முடியாவிடினும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் தமிழ் அரசர்க்கும் ‘ஆரியர்’ என்று கருதப்பட்ட சாதவாகனர்க்கும் எல்லைப்புறச் சண்டைகள் நடைபெற்றன என்பதைச் சங்க நூல்களால் நன்கறியலாம். ஆரியப் படை கடந்த நெடுஞ்சொழியன் என்னும் பெயரும், திருக்கோவலூரை ஆண்ட மலையமான் ஆரியரை வென்றான் என வருவதும் ‘சோழர் ஆரியரை வென்றனர்'[9] என்னும் குறிப்புகள் தமிழ் நூல்களில் பல இடங்களில் வருதலும் இவ்வெல்லைப் போர்களையே குறித்தனவாதல் வேண்டும். கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் (சிலப்பதிகார காலத்தில்) தோன்றி வளர்ந்து வந்த இந்த எல்லைப்புறப் போராட்டங்கள், ஆதோணியைச் சேர்ந்த நிலப்பகுதிக்குத் தலைவராக இருந்த சாதவாகன அதிகாரிகட்கும் தென்பகுதித் தலைவர்கட்கும் நாளடைவில் வெற்றியை அளித்தனவாதல் வேண்டும். இன்றேல், அக்கால வழக்கில் இருந்த சாதவாகனர் கையாண்ட ‘கப்பல் நாணயங்கள் வடபெண்ணை முதல் தென்பெண்ணை வரை காணக் கிடத்தற்குக் தக்க காரணம் வேண்டுமென்றோ?

சாதவாகனப் பெருநாடு

சாதவாகனப் பெருநாடு பல மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தன. அவற்றைச் சாதவாகன மரபினரும் உயர்ந்த தானைத் தலைவரும் மண்டலத் தலைவராக இருந்து ஆண்டு வந்தனர்.

விஷ்ணு குண்டர்

கோதாவரிக்கு வடபாற்பட்ட பகுதியை, வாகாடகர் பெண்ணை மணந்த தலைவன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் மரபினர் விஷ்ணு குண்டர் எனப்பட்டனர். அவரது ஆட்சிக்காலம் கி.பி. 450-550 என்னலாம்.[10]

சாலங்காயனர்

கோதாவரிக்கும் கிருஷ்ணைக்கும் இடைப்பட்ட வேங்கி நாட்டைச் சாலங்காயனர் என்பவர் கி.பி. 320 முதல் 500[11] வரை ஆண்டனர். அவர் தலைநகரம் வேங்கி (பெத்த வேங்கி) என்பது. அவர்கள் நந்தி வழிபாட்டினர். (சாலங்காயன நந்தி). அவருள் இரண்டாம் அரசனான அத்திவர்மனே (கி.பி.345-370) சமுத்திரகுப்தனை எதிர்த்த அரசர் பலருள் ஒருவன் ஆவன். இறுதியில் இந்நாடு சாளுக்கியர் கைப்பட்டது.

இக்குவாகர்-பிருகத்பலாயனர்

கிருஷ்ணை, குண்டுர்க்கோட்டங்களை இக்குவாகர் (இக்ஷவாகர்) என்பவர் மாகாணத் தலைவராக இருந்து ஆண்டனர். இவருள் ஒருவனான சாந்தமூலன் என்பவன் கி.பி. 225இல் தன்ஆட்சி நிறுவி அந்நாட்டைஆண்டான். இவன் மரபினர் சில ஆண்டுகளே அதனை ஆண்டனர். பிறகு அதனைப் பிருகத் பலாயனர் ஆண்டினர்; இறுதியில் அப் பகுதி ஏறத்தாழக் கி.பி. 275இல் பல்லவர் கைப்பட்டதாகலாம். அதன் தலைநகரம் ‘தான்யகடகம்’ என்பது.[12] இந்நகரம் பல்லவர் வடபகுதிக்குத்தலைநகரமாகச் சிவஸ்கந்தவர்மன் பட்டயத்தில் காணப்படுகிறது.[13]

ஆனந்தர்

குண்டுர், கிருஷ்ணைக் கோட்டங்களை இக்குவாகரிடமிருந்து ஆனந்தர் என்பவர் கைப்பற்றிக் கி.பி. 350 முதல் 450 வரை ஆண்டுவந்தனர். அப் பகுதி இறுதியிற் சாலங்காயனர் கைப்பட்டது.[14]

சூட்டு நாகர்

சாதவாகனப் பெருநாட்டின் தென்மேற்குப் பகுதி சூட்டு நாகர் என்பவர் ஆட்சியில் இருந்தது. அதனை ஆண்ட மாகாணத் தலைவருட் சிறந்தவனே கந்தநாதன் என்பவன். இம் மரபினர் சாதவாகனருடன் உறவு கொண்டிருந்தனர். இவர் தலைநகரம் வனவாசி என்பது. இவர் ஆட்சி கி.பி.340 இல் கதம்பரால் பறிக்கப்பட்டு விட்டது.

பல்லவர்

சாதவாகனப் பேரரசில் கிருஷ்ணையாற்றுக்குத் தென்பாற் பட்ட நிலப்பகுதியே பல்லவர் ஆட்சியில் இருந்தது. பல்லவா மரபினர் சாதவாகனர் மாகாணத் தலைவராக இருந்து ஆண்டு வந்தவர்; தம் பேரரசு வலி குன்றத் தொடங்கிய 225 இல் தாம் ஆண்ட நாட்டைத் தமக்கே உரிமை செய்துகொண்டு விட்டனர்; பின்னர் வலுப் பெற்றதும், தொண்டைநாட்டைக் கைப்பற்ற முனைந்தனர்.

இங்ஙனம் சாதவாகனர் பேரரசில் மாகாணத் தலைவராக இருந்த சாலங்காயனர். விஷ்ணுகுண்டர், இக்குவாகர், பிருகத் பலாயனர், சூட்டுநாகர், பல்லவர் என்பவர். அப்பேரரசு வலிகுன்றத் தொடங்கியதும், தாம்தாம் ஆண்டுவந்த மாகாணத்திற்குத்தாமே அரசராகிவிட்டனர்.[15]

இதனாற்றான், (சாதவாகனப் பேரரசு சத்ரபர், வாகாடகர் என்ற புதிய மரபினர் படையெடுப்பால்நிலைதளர்ந்தபோது தம் ஆட்சியை உண்டாக்கிக் கொண்ட) இந்த அரசருள் பலர், கி.பி.340 இல் தெற்கு நோக்கிப் படையெடுத்த சமுத்திர குப்தனை எதிர்த்தனர் என்பதை அல்லகாபாத்துண்கல்வெட்டு உணர்த்துகிறது. சாதவாகனப் பேரரசு உடைபட்டுச் சிறிய பல நாடுகள் தோன்றியிராவிடின், சமுத்திர குப்தனை இத்துணை அரசர் (இவருள் காஞ்சியை ஆண்ட விஷ்ணுகோபன் ஒருவன்) கோதாவரி, கிருஷ்ணை ஆறுகளண்டை எதிர்த்திருத்தல் இயலாதன்றோ?

பல்லவரும் தொண்டை நாடும்

இந்நிலைமை உண்டாதற்கு முன்னரே, இந்தப் பல்லவ மரபினர் (மாகாணத்தலைவர்) தங்கள் தென் எல்லைப்புறம்போர்களிற் சிறிது சிறிதாக வெற்றி பெற்று வந்தனர். இறுதியில் சோழர் பிடித்தாண்ட தொண்டை மண்டலத்தில் வலிமையுள்ள அரசன் இல்லாத அக்காலத்தில் பெரும் படையை அனுப்பிப் பகைவரை விரட்டியடிக்க வலியற் சோழன் சோழ மண்டலத்தை ஆண்ட அக்காலத்தில்-(வட எல்லையில் இருந்த) சாதவாகனப் பேரரசின் தென்பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் பையப் பைய அருவா வடதலை நாட்டையும், பிறகு அருவா நாட்டையும் கைப்பற்றினர்.

‘தொண்டைமான் சக்கரவர்த்திக்கும் விசுவாவசுராசனுக்கும்போர் நடந்தது’ என்னும் செவிமரபுச் செய்தி ஒன்று கர்னெல் மக்கென்சி எழுதியுள்ள குறிப்புகளில் காணப்படுகிறது. விசுவாவசுராசனே தொண்டை மண்டலத்தை வென்ற முதல் பல்லவனோ என்பது விளங்கவில்லை. எனினும், இச் செய்தி பல்லவரது தொண்டை மண்டலப் படையெடுப்பைக் குறிப்பதென்பதில் ஐயமில்லை.

இங்ஙனம் கைப்பற்றிய நாட்டில், மக்களை இன்புறச் செய்யவும் நாட்டில் அமைதியை உண்டாக்கவும் பப்பதேவன்[16] என்னும் அரசன் ஓர் இலக்கம் (லட்சம்) கலப்பைகளையும் பிறவற்றையும் தந்தான் என்று செப்பேடு கூறுகின்றது. பின் வந்த அரசரும் புதிய நாட்டில் இருந்த கோவில்களுக்கு மானியங்கள் விட்டனர் என்னும் செய்தி செப்பேடுகளில் காணப்படுகிறது. இச் செப்பேடுகளில் பிராக்ருத மொழியே காணப்படுகிறது. சாதவாகனப்பேரரசர் ஆட்சியின் தொடக்கத்தில் காணப்பட்ட செப்பேடுகளில் உள்ள பிராக்ருத மொழியிலேயே இப் பட்டயங்களும் காணப்படுகின்றன.[17] எனவே, இதுகாறும் கூறியவற்றால், சாதவாகனர் பேரரசில் தென்மாகாணத் தலைவராக இருந்தவரும் அவர் மரபினரும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அருவாவடதலை நாட்டைமுதற்கண் கைப்பற்றி, உழவு, நாகரிகம் முதலியவற்றை நுழைந்தனர்; பிறகு சோழவேந்தர் வலியற்ற நிலையைக் கண்டதும், அருவாநாட்டையும் கைப்பற்றினர்; சோழர் காலத்துத் தலைநகரமாக இருந்த -கல்விக்கும் பல சமயங்கட்கும் நிலைக்களமாக இருந்த-காஞ்சியைத் தங்கள் கோநகரமாக ஆக்கிக் கொண்டனர் என்பன நன்கு விளங்குதல் கூடும் அன்றோ? இவர்களே தங்களைப் பல்லவர் என்று கூறிக்கொண்டனர்.

பல்லவர் அரச மரபினரே

இவர்கள் தம்மைப் ‘பாரத்வாச கோத்திரத்தார்’ எனக் கூறுதல் கட்டுக்கதை. இவர்கள் சிறந்த சத்திரியரே. கதம்பமயூர சன்மன் இவர்களைப் ‘பல்லவ சத்திரியா’ என்று கூறியதாகத் தாளகுண்டாக் கல்வெட்டுக் கூறுகிறது. எனவே, பல்லவர் சத்திரியர் ஆவர். அவர்கள் வாகாடகர், சாலங்காயனர் முதலிய பிற அரச மரபினரோடு தொடர்பு கொண்டனர். ஆயின், தமிழ் வேந்தர் ஆர், வேம்பு, பனை இவற்றைத் தம் மரபுக்கு அடையாளமாகக் கொண்டவாறே ஆந்திர நாட்டிலிருந்து வந்த பல்லவரும் தமிழ் முறை பற்றித் தம்மைப் (பல்லவக்கொடி-தொண்டைக்கொடி பற்றிப்) பல்லவர் என அழைத்துக் கொண்டனர் ஆவர்.[18]

காடவர் முதலிய பெயர்கள்

காடவன், காடவர்கோன், காடுவெட்டி என்பன பல்லவர்க்குப் பிற்காலத்தில் வந்த பெயர்கள். கி.பி 8 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே பல்லவர் கல்வெட்டுகளில் இவை பயில்கின்றன; வேற்றரசர் கல்வெட்டுகளிலும் வருகின்றன. எனவே, இப் பட்டங்கள் தமிழ் மக்களால் இடப்பட்டதாதல் வேண்டும்.பல்லவர் காடுகளை அழித்து நாடாக்கினமை இதனால் நன்கு புலனாகிறது.[19]


  1. 40. Vide his “Early History of India’ (1st ed,) p. 348. (2nd ed.) p.423, (3rd ed.) p.469
  2. 41. Vide his “Mysore and Coorg form Inscriptions’. p.53;
  3. Vide his Ancient “History of the Dekkhan’, pp.47-60
  4. “Indian Antiquary’, Vol. III. pp.75-80
  5. Mysore Gazetteer Vol - II part II p. 510-517
  6. Rea’s “Pallava Architecture’ p.2
  7. இப் பல்லவரைப் பார்த்தே கி.பி. 7 ஆம் நூற்றாண்டு முதல் பாண்யரும் கி.பி. 10ஆம் நூற்றாண்டு முதல் பிற்காலச் சோழரும் சில வடமொழிப் பட்டயங்களை வெளியிட்டனர்; பெரும்பாலான தமிழ்ப் பட்டயங்களே ஆகும். சங்ககாலத்தமிழ் அரசர் வடமொழியிலோ பிராக்ருத மொழியிலோ பட்டயங்களை விடுத்தமைக்குச் சான்றில்லை.
  8. சங்க காலத் தமிழரசர் ‘இன்னவர் மருமானே’ மருமகனே எனப் புலவரால் விளிக்கப்பட்டனரே அன்றிப் ‘பாரத்வாசர்’ போன்ற முனிவர் மரபினராக யாண்டும் குறிக்கப் பெற்றிலர்.
  9. Vide Dr. S.K. Aiyangar’s Int. to “The Pallavas of Kanchi’ by R.Gopalan.
  10. D. Sircar’s Successors of the Satavahanas’ pp.97-140
  11. Ibid. pp. 73,82,83
  12. Ibid, pp.163-165
  13. Dr. K. Gopalacharl’s “Early History of the Andhra country,’ pp.151-159
  14. D. Sircar’s Successors of the Satavahans,’ pp.56, 52
  15. Ibid.Iap pp.3-4
  16. ‘பப்ப’ என்பது ‘அப்பன்’ என்னும் பொருளது. இச் சொல் பல பட்டயங்களில் வருதல் கண்கூடு ஆதலின், இஃது ஒரு மனிதன் பெயரன்று. எனவே, சிவஸ்கந்தவர்மன்தந்தை பெயர் இன்னதென்பது தெரியவில்லை. Vide D.Sirear’s Successors of 1he Satavahanas, p. 183-184 and Dr. G.Minakshi’s “Administration and social Life under the Pallavas’ pp.6-10.
  17. Vide Dr. S.K. Aiyangars Valuable Introduction to the “Pallavas of the Kanchi,’ by R.Gopalan.
  18. Dr. C.Minakshi’s “Administration and Social Life under the Pallavas,’ pp. 12-13.
  19. Ibid pp. 17-1