பல்லவர் வரலாறு/5. முதற்காலப் பல்லவர் - (கி.பி. 250-340)

விக்கிமூலம் இலிருந்து

5. முதற்காலப் பல்லவர்
(கி.பி. 250-340)

முவகைப் பட்டயங்கள்

பல்லவர் பட்டயங்கள் பிராக்ருதம், வடமொழி, கிரந்த தமிழ் என மூவகை மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. எனவே, மொழிவல்லுநர் இவற்றை நன்கு ஆய்ந்து, முதலில் வெளிப் பட்டவை பிராக்ருதப் பட்டயங்கள்; பின்னர் வெளிப்பட்டவை வடமொழிப் பட்டயங்கள்; இறுதியில் வெளிப்பட்டவையே கிரந்த-தமிழ்ப பட்டயங்கள் என்னும் முடிவிற்கு வந்துள்ளனர். அவர்களே, பிராக்ருத மொழியில் தீட்டப்பட்டுள்ள பட்டயங்கள் கி.பி. 3, 4 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை; வடமொழிப் பட்டயங்கள் கி.பி. 4,5,6 ஆம் நூற்றாண்டிலிருந்து கணக்கிடத்தக்கவை. என்றும் முடிவு கூறியுள்ளனர். இம் முறைப்படி ஆராயின், பல்லவர் பட்டயங்கள் மூவகைப்படும். அவற்றுள் முதலன பிராக்ருத மொழியின. அவற்றின் காலம் கி.பி. 3,4ஆம் நூற்றாண்டுகள் ஆகும். மற்றவை மேற்சொன்ன இரண்டு காலங்களைச் சார்ந்தவை ஆகும். ஆகவே, நாம் (1) பிராக்ருத மொழியில் பட்டயங்களை வெளியிட்ட பல்லவரை முற்காலப் பல்லவர் (கி.பி. 250-340) என்றும், (2) வடமொழியில் பட்டயங்களை வெளியிட்ட பல்லவரை இடைக்காலப் பல்லவர். (கி.பி. 340-575) என்றும், (3) கிரந்த தமிழ் மொழியில் பட்டயங்களையும் கல்வெட்டுகளையும் வெளியிட்ட பல்லவரைப் பிற்காலப் பல்லவர் (கி.பி. 575-900) என்றும் இந்நூலுள் அழைப்போம்.

பிராக்ருத பட்டயங்கள்

முற்காலப் பல்லவர் பட்டயங்களில் சிறந்தவை முன்றே ஆகும். அவை: (1) மயிதவோலு-பட்டயங்கள், (2) ஹிரஹத கல்லிப் பட்டயங்கள், (3) குணபதேயப் பட்டயங்கள் என்பன. இவை மேனாட்டு அறிஞரால் நன்கு ஆராயப்பட்டுத்தக்க விளக்கவுரைகள் பெற்றவையாகும். இப் பட்டயங்கள் தம்மை விடுத்தவர் பெயர்களைக் குறிப்பிட்டு, தாம் எழுந்த காரணத்தையும் குறிப்பவை ஆகும். ஆதலின், இவற்றைக்கொண்டு முற்காலப் பல்லவர் பரம்பரை, போர், நாகரிகம், அரசியல் முதலிய வரலாற்றுக்குரிய செய்திகளை நன்கு அறியக்கூடவில்லை.

முதற்காலப் பல்லவர் நாடு (கி.பி. 250-340)


ஆந்திர பதமும் தொண்டை நாட்டின் வடபகுதியும் இக்காலப் பல்லவர் நாடாக இருந்தன.


(1) மயிதவோலு-பட்டயம்.

இது பல்லவர் மரபினனும் பாரத்வாச கோத்திரத்தைச் சேர்ந்தவனும் ஆன இளம் பேரரசன் (யுவமகாராசன்) சிவஸ்கந்த வெளியிட்டது. ஆந்திர பதத்தில் (பல்லாரிக் கோட்டத்தில் உள்ள ‘விரிபரம்’ என்னும் சிற்றுரை இரண்டு பிராமணர்க்கு உரிமையாக் கினமை இப் பட்டயத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வுரிமை, இளவரசன் காலத்தில் பல்லவ அரசனாக இருந்தவனது ஆட்சி 10 ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்டது. இது காஞ்சியிலிருந்து விடப் பட்டதாகும். இது தான்ய கடகத்தில் இருந்த (பல்லவர்க்குரிய தெலுங்கு நாட்டைத் தலைவனாக இருந்து ஆண்ட) தலைவனுக்கு அனுப்பப் பட்டது.

(2) ஹிரஹதகல்லிப் பட்டயம்

‘ஹிரஹதகல்லி’ என்பது பல்லாரிக் கோட்டத்தில் உள்ள சிற்றுர், இப் பட்டயம் பல்லவ - தர்ம - மகாராசாதிராசன் சிவஸ்கந்தவர்மன் விடுத்ததாகும். இஃது இவன் பட்டம் பெற்ற எட்டாம் ஆண்டில் விடப்பட்டது. பப்பமகாராசன்[1] விடுத்த தானத்தை உறுதிப் படுத்தவும் விரிவு படுத்தவும் இது விடப்பட்டது. தானம் பெற்ற தோட்டம் உள்ள ஊர் ‘சில்லரேக கொடுங்கா’ என்பது. அது சாதவாகனராட்டிரத்தில் உள்ளது. இதில் அரசியல் அலுவலாளர் பெயர்களும் பிறவும் குறிக்கப்பட்டுள்ளன. சிவஸ்கந்தவர்மன் அக்நிஷ்டோமம், வாஜபேயம், அசுவமேதம் என்னும் பெரு வேள்விகளைச் செய்தவன் என இப் பட்டயம் குறிக்கிறது.

(3) குணபதேயப் பட்டயம்

இது விசய-ஸ்கந்தவர்ம மகாராசன் ஆட்சிக்காலத்தில், இளவரசன் புத்தவர்மன் மனைவியும் புத்தியங்குரன் தாயுமான சாருதேவி என்பவள் விடுத்தது. தாலூராவில் உள்ள பெருமாள் (நாராயணன்) கோவிலுக்கு அவ்விளவரசி நிலத்தைத் தானமாக விட்ட செய்தி இதில் காணப்படுகிறது. விசய ஸ்கந்தவர்மனுக்கும் இளவரசன் புத்தவர்மனுக்கும் என்ன உறவு என்பது இதில் குறிக்கப்படவில்லை.

இவற்றால் அறியத்தக்கவை

சிவஸ்கந்தவர்மன் இளவரசனாக இருந்தபொழுது தன்னை ‘இளம்பேரரசன்’ (யுவ மகாராசன்) என்று கூறுவதால், அவன் தந்தை பேரரசனாகத்தான் இருந்தான் என்பது பெறப்படுகிறது.

பேரரசன் (மகாராசன்) என்னும் பட்டம் சாதாரண சிற்றரசரும் சாதாரண தணி அரசரும் வைத்துக்கொள்ளல் வழக்கமாக இருந்தது. ஆகலின், சிவஸ்கந்தவர்மனின் தந்தை ஒரு சாதாரண அரசனாகவே இருந்தான் என்பது வெளிப்படை. இது, சிவஸ்கந்தவர்மன் பட்டம் பெற்றபின், தன்னை ‘மகா ராசாதிராசன்’ என்று கூறிக்கொள்வதாலும் வலியுறும் சிவஸ்கந்தவர்மன் இங்ஙனம் தன்னைத்தான் பட்டம்பெற்ற 8ஆம் ஆண்டிலே கூறிக்கொள்வதாலும், அவன் இளம் பேரரசனாக இருந்தபொழுதே காஞ்சியிலிருந்து பட்டயம் விடுத்தததாலும், அவன் தந்தை காஞ்சியிலிருந்து பட்டயம் விடுத்ததற்குச் சான்று இன்மையாலும். சிவஸ்கந்தவர்மன் பேரரசன் செய்யத் தக்க அக்நிஷ்டோமம், வாஜபேயம், அஸ்வமேதம்[2] என்னும் பெரு வேள்விகள் செய்துள்ளமையாலும்-பல்லவப் பேரரசை ஏற்படுத்திய வனும் அதற்குத் தலைநகரமாகக் காஞ்சியைக் கண்டவனும் இச் சிவஸ்கந்தவர்மனே ஆதல் வேண்டு என்று கூறல் தவறாகாது.[3]

வடநாட்டு வென்றி

சாதவாகனர் வீழ்ச்சிக் காலத்தில் (கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில்) கிருஷ்ணை-குண்டூர்க் கோட்டங்கள் கொண்ட நிலப்பகுதி இக்குவாகர் ஆட்சியில் இருந்தது அப் பகுதிக்குத் தலைநகரம் தான்யகடகம் அல்லது அமராவதி என்னலாம். அவர் மரபில் மூவர் ஆண்டமைக்குப் பட்டயங்கள் உள்ளன. அவர்கள் கி.பி. 3ஆம் நூற்றாண்டின் இடையில் மறைந்தனர்; பிறகு பிருகத் பலாயனர் தோன்றினர். அவர்கள் ஆண்ட பகுதிக்குத் தெற்கே சாதவாகனர் மாகாணத் தலைவர்களாக இருந்த பல்லவர், இருதிறத்தாரையும் வென்று ஆந்திர பதத்தைக் கைக்கொண்டனர். இங்ஙனம் செய்த பல்லவ அரசன் சிவஸ்கந்தவர் மகனாகவே இருத்தல் வேண்டும் என்னை? ஆந்திரபதத்தில் உள்ள தன் பிரதிநிதிக்கு ஆணை விடுத்த முதல் அரசன் இவனே ஆதலின் என்க.[4] மேலும் இவன் தன்னை முதலில் இளம்பேரரசன் என்றும், பிறகு மகா இராசாதிராசன் என்றும் கூறிக் கொண்டதாலும், பேரரசன் செய்ய வேண்டிய பெரு வேள்விகள் செய்தமையாலும், இக்குவாகரும் சாதவாகனரும் வெளியிட்ட பட்டயங்களில் உள்ள பிராக்ருத எழுத்துகட்கு இவனது பட்டய எழுத்துகள் சிறிதே பிற்பட்டவை என்பது நன்கு தெரிதலின், இக்குவாகர்க்குப் பின் ஆந்திர பதத்தை ஆண்ட முதற் பல்லவன் - அங்ஙனமே காஞ்சியைக் கைப்பற்றி ஆண்ட முதற் பல்லவன் இவனே ஆவன் எனத் துணிந்து கூறலாம்.

சிவஸ்கந்த வர்மன் காலம்

இவன் விடுத்த பட்டயங்களின் உள்ளுரை பிராக்ருதத்தில் இருப்பினும், பட்டயம் கொடுக்கப்பட்டசெய்தி வடமொழியிலேயே இருத்தலாலும், குஷானரைப் பின்பற்றிக் கி.பி. 4ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குப்தர் தம்மை ‘மகா ராசாதிராசர்’ என்று கூறிக் கொண்டவாறே இவனும் தன்னை மகாராசாதி ராசன் என்று கூறிக் கொள்வதாலும், இவனும் இவனுக்குப் பிற்பட்டவரும் கி.பி350இல் சமுத்திர குப்தனை எதிர்த்த விஷ்ணுகோப பல்லவனுக்கு முற்பட்டவர் என்பது அறிஞர் முடியாதலாலும் இன்ன பிற காரணங்களாலும்,-இவன் காலம் கி.மு. 300-325 எனத் துணிதலில் தவறில்லை.[5]

பிறர் கூற்று

(1) மயிதவோலு, ஹிதஹதவல்லி - பட்டயங்கள் காஞ்சியிலிருந்து விடப்பட்டவை. முதல் பட்டயம் இளவரசனான சிவஸ்கந்தவர்மன் விடுத்தது; இரண்டாம் பட்டயம் சிவஸ்கந்தவர்மன் ‘தர்ம மகா ராசாதிராசன்’ ஆன பிறகு விடுத்தது. இந்த மயிதவோலுப் பட்டயமே பல்லவர் பட்டயங்களில் பழைமை வாய்ந்தது; சயவர்மனது (பிருகத்பலாயன அரசன்) கொண்ட முடிப்ப பட்டயங்கள், கெளதமீ புத்திர சதகர்ணி விடுத்த கார்லே-கல்வெட்டு, வசிஷ்டீபுத்திர புலுமாயி விடுத்த நாசிக் கல்வெட்டு ஆகிய இவற்றை ஏறக்குறைய ஒத்துள்ளது. எனவே, சிவஸ்கந்தவர்மன் மேற்சொன்ன அரசர் காலத்திற்கு மிகுந்த பிற்காலத்தில் இருந்திருத்தல் முடியாது. (2) மேலும் கி.பி. 4ஆம் நூற்றாண்டின் இடையில் காஞ்சியை விஷ்ணு கோபன் ஆண்டதாகச் சமுத்திர குப்தன் கல்வெட்டுக் கூறுகிறது. குப்தனை எதிர்க்கத்தக்க அளவில் வன்மை பெற்ற பல்லவர், அதற்கு முன்னர்ச் சில தலைமுறையேனும் காஞ்சியில் ஆண்டனர் என்று கொள்ளலே ஏற்புடையதாகும். (3) காஞ்சியைப் ‘பல்லவேந்திரபுரி’ என்று கதம்ப-காகுத்தவர்மன் பட்டயம் கூறலாலும், அது மயூரசன்மனது வாக்கு எனக் கொள்ளின், மயூரசன்மன் காலம் கி.பி. 3ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி என்று சந்திரவல்லிக் கல்வெட்டுக் கூறலால், பல்லவர் காஞ்சியில் ஆளத்தொடங்கிய காலம் ஏறத்தாழக் கி.பி.250 எனக்கோடல் தவறாகாது. (4) கி.பி. 200 அல்லது 250 உடன் முடிவுற்ற சங்ககால நூல்களிலும் பல்லவர் குறிக்கப்பட்டாமையும், ஒரு சான்றாகும். இன்ன பிற காரணங்களால், பல்லவரது ஆட்சித்தொடக்கம் ஏறக்குறைய கி.பி. 250 எனக்கோடலே பொருத்தமுடையது....... சிவஸ்கந்தவர்மனின் தந்தையே (பெயர் தெரியவில்லை) காஞ்சியைப் பிடித்தாண்ட முதல் அரசனாகக் கூறலாம்.[6]

முடிபு

அறிஞர் கருத்துகள் பலவாக இருத்தலை நோக்க, கீழ் வருமாறு முடிபுகொள்ளல் பொருந்துவதாகும். (1) சிவஸ் கந்தவர்மனே தன் தந்தை ஆந்திர பதத்தை ஆண்டுவந்த போது, தொண்டை நாட்டைக் கைப்பற்றி இருக்கலாம். (2) தான் கஞ்சியிற்றானே தங்கித் தந்தை இறக்குமளவும் இளவரசனாகவே இருந்திருக்கலாம். (தந்தை இருப்ப, மகன் தனி மாகாணத்தை ஆளுதல் பல்லவர் பழக்கம் என்பதைப் பட்டயங்களே காட்டுகின்றன.) (3) தந்தை இறந்த பிறகு பல்லவப் பேரரசுக்குக் காஞ்சியைத் தலைநகரமாக்கிப் பலநாடுகளை வென்று, தர்ம மகா ராசாதிராசனாகி இருக்கலாம். இப் பேரரசன் காலம் ஏறத்தாழக் கி.பி. 250-275 எனக் கொள்ளலாம்.

இக்காலப் பல்லவர்

இவனுக்குப்பின் விசய ஸ்கந்தவர்மன் பல்லவ நாட்டை ஆண்டான். ஆயின், அவனுக்கும் சிவஸ்கந்தவர்மனுக்கும் என்ன உறவு என்பது விளங்கவில்லை. அவனது ஆட்சிக் காலத்தில் இளவரசனான புத்தவர்மன் மனைவி சாருதேவி என்பவள் விட்ட பட்டயம் காணின், புத்தவர்மன் விசயஸ்கந்தவர்மனின் மகன் எனக் கோடலில் தவறில்லை. எனினும், உறுதியாகக் கூறுதற்கில்லை. புத்தவர்மனுக்கு புத்யங்குரன் என்றொரு மைந்தன் இருந்தான் என்பதும் குண்பதேயப் பட்டயத்தால் தெரிகிறது. இம் மூன்று பட்டயங்களைக் காண்கையில், இம் முதற்காலப் பல்லவர் பெயர்களைக் கீழே வருமாறு முறைப் படுத்தலாம்.

பப்புதேவன்[7]

|
சிவஸ்கந்தவர்மன்
|
விசயஸ்கந்தவர்மன்
|
இளவரசன் புத்தவர்மன்
|

புத்பங்குரன்

  1. பப்ப அப்பன் என்பது பொருள். எனவே ‘பப்பமகாராசன்” என்பது சிவஸ்கந்தவர்மன் தந்தையாதல் வேண்டும். ஆனால், அவனது இயற்பெயர் இன்னதென்று விளங்கவில்லை. Vide D. Sircar’s Successors of the Satvahanas’ p. 183.
  2. அக்திசுடோமம்:- வசந்தகாலத்தில் பலநாள் தொடர்ந்து செய்யப் படும் வேள்வி. வரஜபேயம்:- உயர்ந்த அரச நிலையின் பொருட்டுச் செய்யப்படும் வேள்வி. அஸ்வமேதம்:- பேரரசன் என்பதை அரசர் பலரும் ஒப்புக் கொண்டமைக்கு அறிகுறியாகச் செய்யப்படும் பெரு வேள்வி.
  3. Vide Hera’s “Studies in Pallava History”, p.11
  4. Dr. K.G.Palacharl’s “Early History of the Andhra country’, pp.157,158.
  5. D. Sircar’s “Successors of the Satavahanas’ pp. 164-166,247–248.
  6. Dr.c. Minakshi’s Administration and Social Life under the pallavas pp.12 & 10.
  7. S.I.I. Vol p506 foot-note by H. Krishna Sastry. இடைக்காலப் பல்லவருள் ஒருவனான ‘வீரகூர்ச்சவர்மனே இந்தப் பப்பதேவன்’ என்பது ஒர் ஆராய்ச்சியாளர் கருத்து.