பழைய கணக்கு/முதுகில் விழுந்த அடி!

விக்கிமூலம் இலிருந்து



முதுகில் விழுந்த அடி!

பெல்லாரிக்குப் பக்கத்தில் இரண்டு மூன்று மைல் தள்ளி அமைந்துள்ளது அலிபுரம் சிறைச்சாலே. ஹைதர் அலி காலத்தில் யானைகளைக் கட்டிப் போட்ட இடம். ‘ப்ளாக் ப்ளாக்’காக பத்துப் பதினைந்து ப்ளாக்குகள் கொண்டது, .

‘க்விட் இண்டியா’ இயக்கத்தின் போது அங்கு சென்றவர்கள் சிறைச்சாலேக்குள் தாங்களாகவே ஆளுக்கொரு வேலையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். எனக்குப் புத்தக ஆர்வம் நிறைய இருந்ததால் நான் கைதிகளுக்குப் புத்தகம் விநியோகம் செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.

என்னதான் புத்தகங்கள் படித்தாலும் வெளியுலகச் செய்திகளுக்காக எல்லாருமே ஏங்கிக் கிடந்தோம். சிறைக்குள் செய்தித்தாள் வருவது தடை செய்யப்பட்டிருந்த போதிலும் வார்டர்கள் மூலம் ரகசியமாக அவற்றைத் தருவித்தோம்.

அத்தனை ப்ளாக்குகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு தினப் பத்திரிகைதான் வரும். அதிலிருந்து தலைப்புச் செய்திகளை மட்டும் எடுத்து ஒரு சிலேட்டில் எழுதி பக்கத்து பிளாக்குக்கு அனுப்பி வைப்போம். கொடுமுடி ராஜகோபாலன் இந்த வேலையைச் செய்வார். இப்படியே அது எல்லா பிளாக்குகளையும் சுற்றி வரும். ஒவ்வொரு நாளும் அரசியல் கைதிகள் நூற்றுக் கணக்கில் சிறைக்குள் வந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் பத்திரிகைகளில் வராத சில செய்திகளைக் கொண்டு வருவார்கள். பொய்யா மெய்யா என்று தெரியாது. நம்பவும் முடியாது. நம்பாமல் இருக்கவும் முடியாது.

“சிறைக்குள்ளிருக்கும் அரசியல் கைதிகள் சிறைச்சாலையையும் போராட்டக் களமாக எண்ணிச் செயல்பட வேண்டும். சிறைக் கம்பிகளை உடைத்துக் கொண்டு வெளியே செல்ல வேண்டும்” என்று காந்திஜி கூறியதாக ஒரு செய்தி வந்தது. எங்களுக்கெல்லாம் இச்செய்தி தேனாக இனித்தது. காந்திஜி நிச்சயம் சொல்லியிருப்பார் என்று பேசிக் கொண்டோம். உடனே சிறைக்குள்ளேயே கூட்டம் போட்டு சிறைச்சாலையை உடைத்துக் கொண்டு வெளியேறுவது என்று உற்சாகத்தோடு தீர்மானம் போட்டோம்.

இன்னும் ஒரு வாரத்தில் எங்கள் திட்டத்தை நிறைவேற்றி விடுவது என்று ஓர் இரவு ரகசியமாகக் கூடி முடிவெடுத்தோம். நாங்கள் ரகசியமாகப் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த ஜெயில் வார்டர் ஒருவன் இந்த விஷயத்தை ஜெயில் சூப்பரின்டெண்டிடம் போய்ச் சொல்லி விட்டான்.

அப்போது ஹெள துரை என்பவன்தான் ஜெயில் சூப்பரின்டெண்ட். மிகப் பொல்லாதவன். பிரகாசம்காரு திருச்சி சிறையில் இருந்த போது இவன் கொட்டத்தை அடக்க ஒரு நாள் அவனைச் செருப்பால் அடித்து விட்டாராம். அதிலிருந்து இவன் காங்கிரஸ்காரர்களிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டான்.

காங்கிரஸ் கைதிகளைக் கண்டால் ‘யூ காந்தி கேப்’ என்று தலைமுடியைப் பற்றி இழுத்து அடிப்பான்.

மறு நாள் விநாயக சதுர்த்தி. முதல் நாள் இரவு சில நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, “போன வருடம் பிள்ளையார் சதுர்த்திக்கு வீட்டில் கொழுக்கட்டை சாப்பிட்டேன். இந்த வருடம் எப்படியோ?” என்று கொழுக்கட்டைக்காக ஏக்கப் பெருமூச்சு விட்டேன்.

மறுநாள் காலை எல்லோரும் கஞ்சி குடித்துவிட்டு அங்கங்கே சிறுசிறு கும்பலாய் மரத்தடிகளில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அன்று திங்கட்கிழமையானதால் ஏழரை ஒன்பது ராகுகாலம். திடீரென்று நூற்றுக்கணக்கான விசில்களின் ஒலி இடைவிடாமல் கேட்டது. சிறையைச் சுற்றிலும் ரிஸர்வ் போலீஸ் படை துப்பாக்கியுடன் அணிவகுத்து நின்றது.

“எல்லோரும் பிளாக்குக்குள் ஒடுங்க, ஜெயிலையா உடைக்கப் போறீங்க? இப்ப உங்க மண்டையை உடைக்கிறோம், பாருங்க” என்று கர்ஜித்துக் கொண்டே சிறை வார்டர்கள் எங்களைத் துரத்தித் துரத்தி விரட்டினார்கள்.

எல்லோரும் தடி அடிக்குப் பயந்து மூலைக்கு மூல பாய்ந்து ஓடிய போது எனது வலது தோள் பட்டையில் வேகமாக ஓர் அடி விழுந்தது. “அம்மாடி!” என்று சுருண்டு விழுந்தேன். அதற்குள் சிலர் என் மீது விழவே நான் இடையில் மாட்டிக் கொண்டேன். மேற்கொண்டு விழுந்த அடிகளே அவர்கள் தாங்கிக் கொண்டனர். சிலருக்கு எலும்பு முறிந்து போயிற்று. கை, கால், காது, மூக்கு இழந்த்வர்கள் பலர். இந்த லத்தி சார்ஜ் அரைமணி நேரம் நடந்தது. பிறகு அடிபட்டவர்கள் எல்லோரையும் சிறை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றார்கள்.

ஒரு வாரத்துக்குப் பின் சிறைக்குள் மீண்டும் அமைதி ஏற்பட்டதும் ஒருவருக்கொருவர் மெதுவான குரலில் குசலம் விசாரித்துக் கொண்டோம். என் மீது விழுந்த அடி வலது தோளுக்குக் கீழ் முதுகுப் பக்கம் விழுந்ததால் அது கொழுக் கட்டை அளவுக்குப் பெரிதாக வீங்கிப் போய் விட்டது. அதைச் சுட்டிக் காட்டி என் நண்பர்களிடம் நான் சொன்னேன்.

“பாருங்கப்பா, என் ஆசை நிறைவேறிப் போச்சு! பிள்ளையார் சதுர்த்தியன்றைக்குப் பெரிய கொழுக்கட்டைக்கு ஆசைப்பட்டேன், இல்லையா? இதோ பாருங்க, முதுகிலே கிடைச்சிருக்கு!”