பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/பொல்லாத மழைப் புயல்

விக்கிமூலம் இலிருந்து

6. பொல்லாத மழைப் புயல்

சிக்கசேனாபதி வந்து கூறிய செய்தியைக் கேட்டதும் குமாரபாண்டியனின் மனத்தில் உணர்ச்சியலைகள் மேலெழுந்து பொங்கின. தமனன் தோட்டத்துத் துறையில் ஈழ நாட்டுக் கடற்படை வீரர்களால் கைப்பற்றப்பட்டிருக்கும் கப்பல் யாருடையதாக இருக்கும் அதில் வந்திருப்பவர்கள் யாராயிருப்பார்கள்?’ என்ற சந்தேகம் அவன் நினைவுகளை வளர்த்தது.

ஆனால் சக்கசேனாபதி அந்த நினைவுகளை வளர விடவில்லை. “நாளைக்கு அதிகாலையில் நாமிருவருமே தமனன் தோட்டத்துக்குப் போய்ப் பார்க்கலாம். நீங்கள் செம்பவழத் தீவில் கண்ட எதிரிகளின் கப்பலாக இருந்தால் அதிலிருப்பவர்களைக் கீழிறக்கி விசாரிக்கிற முறைப்படி விசாரிப்போம்” என்று கூறினார் அவர். அப்போது அவர்களுடன் அங்கிருந்த கனகமாலை “சேனாபதித் தாத்தா! நானும் நாளைக்கு உங்களோடு தமனன் தோட்டத்துக்கு வரப் போகிறேன். நீங்கள் மறுப்புச் சொல்லாமல் என்னையும் கூட்டிக் கொண்டு போகவேண்டும்!” என்று பிடிவாதம் பிடித்தாள்.

“ஐயோ, நீ கூடவருகிற சந்தர்ப்பமில்லை அம்மா இது! நாங்கள் ஒரு முக்கியமான காரியமாகப் போய்விட்டுத் திரும்பி விடுவோம்” என்று சேனாபதி அந்தப் பெண்ணின் விருப்பத்தை மறுத்தார். பின்பு சக்கசேனாபதியும் குமாரபாண்டியனும் காசிப மன்னரிடம் போய்ச் சொல்லிக் கொண்டார்கள்.

“இப்படி ஒரு கப்பல் உங்களை இரகசியமாகத் தொடர்ந்து பின்பற்றி வந்ததென்ற விவரத்தை இங்கு வந்ததுமே நீங்கள் என்னிடம் சொல்லியிருக்கலாமே! சொல்லாததனாலும் பரவாயில்லை. இப்போது உடனே போய் அந்தக் கப்பலைக் கவனியுங்கள். அதிலிருப்பவர்கள் குமாரபாண்டியனின் எதிரிகள் என்று சந்தேகப்படுகிறதற்கு ஏற்றவர்களாயிருந்தால் அவர்களைச் சிறைப்பிடித்து இங்கேயே கொண்டு வாருங்கள்” என்று கூறி, அவர்களுக்கு விடைகொடுத்தார் ஈழ நாட்டு மன்னர். பயணம் தொடங்குவதற்கு முன் நினைவாகத் தன் வலம்புரிச் சங்கை உடனெடுத்துக் கொண்டான் இராசசிம்மன்.

வைகறை மெல்லிருள் விலகுவதற்குமுன் அவர்கள் இருவரும் பொலன்னறுவையிலிருந்து புறப்பட்டார்கள். என்று மில்லாதபடி அவர்களுக்கென்றே வாய்த்ததுபோல் அன்றைக்கு இயற்கைச் சூழ்நிலை மிக அற்புதமாக இருந்தது.மெல்லச் சுழன்று வீசும் குளிர்ந்த காற்றுடனே ஊசி ஒழுகுவதுபோல சாரல் பெய்துகொண்டிருந்தது. வானம் பிறந்த மேனியாய்த் தனது நீலநிறத்தைத் திறந்து காட்டிக் கொண்டிராதபடி, மேகச் சுருள்கள் திட்டுத் திட்டாக அடைந்திருந்தன. எல்லோருடைய .

கவனத்தையும் கவரத்தக்க மிகப் பெரிய காரியமொன்றைத் திடீரென்று செய்வதற்கு இருக்கிற மனிதன் மாதிரி, இயற்கை அமைந்து அடங்கித் தன் ஆற்றலை ஒன்றுபடுத்திக் கொண்டிருப்பது போலத் தோன்றியது.

“இன்றைக்கு மாலைக்குள் பெருமழை வரலாம் போலிருக்கிறது!” என்று குதிரையை வேகமாகச் செலுத்திக் கொண்டே சொன்னார் சக்கசேனாபதி. இராசசிம்மன் வானத்தை அண்ணாந்து பார்த்தான். ஒரே மேகக் குழப்பம். அத்தனையும் கனிந்த சூல் கொண்ட கருமேகங்கள்.

பொலன்னறுவையிலிருந்து நேர்மேற்கே சென்றால் தமனன் தோட்டம்தான். அனுராதபுரத்துக்குச் செல்லாமல் சிம்மகிரி, விசிதபுரம் ஆகிய ஊர்களைக் கடந்து நேர்வழியாகவே பயணம் செய்வதென்று முடிவு செய்து கொண்டார்கள் அவர்கள். எவ்வளவு வேகமாகச் செல்ல முடியுமோ, அவ்வளவு வேக மிகுதி அவர்களுடைய குதிரைப் பயணத்தில் இருந்தது. இருவரும் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக் கொண்டு செலுத்துவதுபோல் குதிரைகளைச் செலுத்தினர்.

“சக்கசேனாபதி ! எனக்கென்னவோ நான் இங்கே அதிக நாட்கள் தங்கியிருக்க முடியுமென்று நம்பிக்கை ஏற்படவில்லை. எந்த விநாடியிலும் என்னைத் தேடிக் கொண்டு தென்பாண்டி நாட்டிலிருந்து ஆட்கள் வரலாம். விரைவாக நான் திரும்பிச் செல்ல வேண்டியிருக்குமென்று என் மனத்தில் ஒரு தோற்றம் ஏற்படுகிறது” என்று போகும்போது இருந்தாற்போலிருந்து அவரிடம் கூறினான் இராசசிம்மன்.

“போர் ஏற்பட்டாலொழிய அவ்வளவு அவசரமாக உங்களைத் தேடிக்கொண்டு யாரும் வரப்போவதில்லை. தவிர, உங்களைத் தேடி வருவதற்கு நீங்கள் இங்கே தான் வந்திருக்கிறீர்கள் என்று யாருக்குத் தெரியும்? நீங்களாக எதையாவது மனத்தில் நினைத்துப் பதற்றமடையாதீர்கள், இளவரசே!” என்று அவர் அவனுக்குப் பதில் சொன்னார்.

அதைக் கேட்டு இராசசிம்மன் சிரித்தான். “காணாமல் போன நான் எங்கே சென்றிருப்பேன் என்று அனுமானிக்க முடியாத அளவுக்குத் தென்பாண்டி நாட்டு

மகாமண்டலேசுவரரும், என் அன்னையும், தளபதியும் சிந்தனை குன்றியவர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் போலிருக்கிறது. நான் அங்கில்லையென்றால் இங்கேதான் இருப்பேனென்று அவர்கள் மிக எளிதாகத் தெரிந்துகொள்ளுவார்கள்” என்று இராசசிம்மன் கூறியபோது சக்கசேனாபதி அதைக் கவனித்துக் காதில் வாங்கிக் கொள்ளாமல், கலக்கம் நிறைந்த பார்வையால் வாணவெளியை நிமிர்ந்து பார்த்தார். “இன்றைக்கு நம்முடைய பயணம் நடுவழியில் எங்கேயாவது தடைப்படத்தான் போகிறது. வானம் இருக்கிற சீரைப் பார்த்தால் தன் ஆத்திரத்தை யெல்லாம் கொட்டித் தீர்த்துக் கொள்ளப்போகிற மாதிரி இருக்கிறது” என்று கவலை நிறைந்த குரலில் கூறினார். “மழை வருவதாயிருந்தால் அதைத் தடுப்பதற்கு நாம் யார்? ஈழ நாட்டுப் படைத் தலைவரும், பாண்டி நாட்டு இளவரசனும் பயணம் செய்கிறார்களென்றால் மழைக.ட அவர்களுக்குப் பயப்படவேண்டுமென்கிற அவசியம் உண்டா?” என்று சற்றே வேடிக்கையாகச் சக்கசேனாபதியை நோக்கிச் சொன்னான் குமாரபாண்டியன். கவலை நிழல் படியத் தொடங்கியிருந்த அவர் முகத்தில் அவனுடைய வேடிக்கைப் பேச்சு சிரிப்பையோ, மலர்ச்சியையோ உண்டாக்கவில்லை.

சூரிய ஒளியே உறைக்காத மேக மூட்டம் உச்சிப் போது கழிந்து சில நாழிகைகளான பின்னும் நீடித்தது. அதனால் அந்திக்கு இன்னும் நெடுநேரம் மீதமிருந்தபோதும் அப்போது இருளத் தொடங்கிவிட்டது போன்ற சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இரவு நேரத்தில் தங்குவதற்குப் பாதுகாப்பான இடத்தை அடைந்துவிட்டால் மழையைப் பற்றிக் கவலைப்பட வேண்டியிராதென்று சக்கசேனாபதி நினைத்திருந்தார்.

ஆனால் மழை அவருடைய நினைவை முந்திக்கொண்டு வந்துவிட்டது. தனி மழையாக வரவில்லை. பயங்கரமான காற்றும், மழையும் ஒன்றுசேர்ந்துகொண்டன. அந்தச் சமயத்தில் நடுக்காட்டில் கடல்போலப் பரந்து தேங்கிக் கிடந்த ஓர் ஏரியை ஒட்டி அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். தண்ணிரைப் பாளம் பாளமாக யாரோ சீவி எறிவதுபோல் அலைமோதியது. ஏரியில் நான்கு புறமும் காது செவிடுபடுகிறாற் போல் ஒரே பிரளயப் பேரொலியில் மூழ்கிவிட்டனவா? காற்றுக்

கடவுளுக்கும் மழைக் கடவுளுக்கும் போர் மூண்டு விட்டதா? இடி ஓசையும் காட்டு மரங்கள் முறிந்து விழும் ஒசையும், காற்றொலியிலும் மழை ஒலியிலும் கலந்து சிறிதாகி ஒலித்தன. ஊழிக் காற்று, ஊழி மழை என்றெல்லாம் சொல்லுவார்களே அவையிரண்டும் ஒரே சமயத்தில் ஊழி எல்லைய்ைக் காண ஆசைப்பட்டு விட்டவை போலக் கிளர்ந்து எழுந்து விட்டன என்று சொல்லத்தக்க நிலை. -

ஏரியின் இக்கரையில் அவர்களுடைய வழிமேல் ஒரு பெளத்தப் பள்ளியும், அருகில் உயரமான பெரிய புத்தர் சிலையும் தெரிந்தன.

“இளவரசே! வேறு வழியில்லை. இங்கே தங்கிவிட வேண்டியதுதான். இந்த இடம் ஏரி நீர்ப்பரப்பைக் காட்டிலும் மேட்டுப் பாங்கானது. இதே வழி போகப் போக தாழ்ந்து பள்ளமான நிலத்தில் செல்கிறது. இந்தக் காற்றிலும், மழையிலும் எப்படி ஆகுமோ? இப்படியே தங்குவதுதான் நல்லது” என்றார் சக்கசேனாபதி, e - . . . -

இந்தத் தீர்மானத்துக்கு வருவதற்குள் அவர்கள் இருவருடைய உடல்களும் தெப்பமாக நனைந்துவிட்டன. இருவரும் தங்கள் குதிரைகளை விரட்டிக்கொண்டு போய் அந்தப் பெளத்தப் பள்ளிக்கு முன்பாக நிறுத்தினார்கள். ஆள் பழக்கமில்லாத காரணத்தால் கட்டடம் இருண்டு பாழடைந்திருந்தது. - -

“மழைக்கும் புயலுக்கும் பயந்துகொண்டு நடு வழியில் தங்கி நாம் ஆற அமரப் போய்ச் சேருவதற்குள் தமனன் தோட்டத்தில் பிடிபட்ட கப்பலும் ஆட்களும் தப்பிப் போனால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று சொல்லிக் கொண்டே குதிரையிலிருந்து இறங்கிக் கட்டடத்துக்குள் நுழைந்தான் குமாரபாண்டியன். . . . . - - o

“அப்படித் தப்பவிட்டு விடுவதற்கு ஈழ நாட்டுக் கடற்படை வீரர்கள் முட்டாள்கள் அல்லர்” என்று பதில் கூறிக் கொண்டே அவனைப் பின்பற்றி உள்ளே சென்றார் சக்கசேனாபதி. -

ஈர ஆடையோடு சோர்ந்து போய் ஓரிடத்தில் உட்காரு வதற்காகக் குனிந்த குமாரபாண்டியன் ஒருவிதமாகப் பயங்

பா. தே.39

கலந்த கூப்பாட்டோடு அந்த இடத்திலிருந்து துள்ளித் தாவினான்.

“என்ன? ஏன் இவ்வளவு பயம்” என்று அந்த இடத்தில் சிறிது குனிந்து பார்த்த சக்கசேனாபதியும் முதலில் மலைத்துப் பின் வாங்கினார். அடுத்த கணம் துணிவாக முன் சென்று கயிற்றைப் புரட்டி இழுப்பதுபோல் எதையோ சரசரவென்று பிடித்து இழுத்தார். ஓங்கிச் சுழற்றி வெளியே வீசி எறிந்தார்.

பளபளவென்று நெளிந்து கருமை மின்னும் அந்தப் பொருள் போய் விழுந்த இடத்தில் சீறி எழுந்து படத்தைத் தூக்கியது! அப்பப்பா! எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! அவர் வீசி எறிந்தது ஒரு கருநாகம்!

“சக்கசேனாபதி ! உங்களுடைய துணிவு ஈடு சொல்ல முடியாதது. எனக்கானால் நீங்கள் அதன் வாலைப் பிடித்து இழுத்தபோது குடல் நடுங்கியது” என்று அவரைப் பார்த்து வியந்து கூறினான் இராசசிம்மன்.

ஓங்கிய படத்தைத் தரையில் அடித்துவிட்டுப் புதரில் புகுந்து மறைந்தது அது. - -

“ஐயோ! வேண்டவே வேண்டாம். மழையில் நனைந்து துன்புற்றாலும் சரி. மேலே பயணத்தைத் தொடரலாம். இந்தக் கட்டடத்தில் தங்கிப் பாம்புக் கடிபட வேண்டாம். அந்தக் கருநாகத்தைப் பார்த்ததிலிருந்து எனக்கு இந்த மண்டபம் முழுதிலும் பாம்பு இருக்கும்போலத் தோன்றுகிறது என்றான் குமாரபாண்டியன். - - -

- “அதெல்லாம் வீண் பிரமை. இப்போதுள்ள சூழ்நிலையில் இந்த இடத்தை விட்டு நகர்வது நடவாத காரியம்” என்று சக்கசேனாபதி உறுதியாகக் கூறினார். குமாரபாண்டியன் அந்த இடத்தில் உட்காருவதற்கே பயமும் அருவருப்பும் அடைகிறவனைப் போல் ஒதுங்கி நின்றான். -

“அதோ! இன்னும் யாரோ நமக்குத் துணையாக இதே கட்டடத்தில் தங்குவதற்கு ஓடிவருகிறார், பாருங்கள்” என்று. வெளியே கையை நீட்டிக் காண்பித்தார் சக்கசேனாபதி. நடுத்தர

வயது மதிக்கத்தக்க தோற்றமுள்ள புத்தபிட்சு ஒருவர் ஓடி வந்து கட்டடத்துக்குள்துழைந்தார்.

“அடிகளே! இந்த மழையிலும், காற்றிலும் ஏன் இப்படித் துன்பப்பட்டுக்கொண்டு ஓடி வருகிறீர்கள்? ஏரிக்கு அக்கரையில் இருக்கிற தவப்பள்ளியிலேயே தங்கியிருக்கலாமே! இப்போது ஏரிக்கரையோரமாக நடந்து வழியைக் கடப்பதே பயப்பட வேண்டிய செய்தியாயிற்றே?” என்று அனுதாபத்தோடு வந்தவரை விசாரித்தார் சக்கசேனாபதி.

மொட்டைத் தலையில் வழிந்த தண்ணிரைத் துடைத்துக் கொண்டே பதில் சொன்னார் பிட்சு: “அப்படித்தான் செய்ய நினைத்தேன், ஐயா! யாரோ ஒரு சிறு பெண்பிள்ளைக்கு இரக்கப்படப்போக இந்தக் கதிக்கு வர நேர்ந்தது. நிமிர நிமிரத் தண்ணிரோடு அலை பாய்ந்து கொண்டிருக்கிற ஏரிக்கரையில் சிறு வயதுப்பெண் ஒருத்தி வழி தெரியாமல் தயங்கி நின்று கொண்டிருந்தாள். எனக்குப் பரிதாபமாக இருந்தது. எங்கே அம்மா போகவேண்டும்? என்று கேட்டேன். எனக்கு இந்த நாட்டு அரசரின் அரண்மனைக்குப் போக வேண்டும் என்று துணிச்சலோடு சொன்னாள் அவள். நடுக்காட்டில் நின்று கொண்டு அரண்மனைக்குப் போக ஆசைப்படும் அந்தப் பெண் பைத்தியமோ என்று எனக்குத் தோன்றியது. .

‘மழையும் காற்றுமாக வருகிறது. பக்கத்திலிருக்கிற தவப்பள்ளியில் போய்த் தங்கிவிட்டுக் காலையில் அரண்மனைக்குப் புறப்படு அம்மா! நானும் உன்னோடு கூட அரண்மனைக்கு வருகிறேன் என்றேன். அந்தப் பாவிப் பெண் என்னைப் பற்றித் தவறாக நினைத்துக்கொண்டு, காட்டுப் பாதையில் மனம் போன போக்கில் நடக்க ஆரம்பித்தாள். அவளுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடக்கூடாதே என்று அவளையுமறியாமல் பின் தொடர்ந்தேன். நான் பின்பற்றுவதை அவள் கண்டு கொண்டாள். என்னைப் பற்றி வேறுவிதமாக நினைத்துக் கொண்டு எங்கோ ஒடி மறைந்து விட்டாள். இவ்வளவு தொலைவு வந்த பின் அக்கரையிலுள்ள தவப்பள்ளிக்குப் போக வேண்டாமென்றுதான் இங்கே ஒண்டிக்கொள்ள வந்தேன் என்று அவர் கூறிமுடிந்ததும் “ஐயோ பாவம்! அந்தப் பெண் இந்தப் பக்கமாக வந்தால் நாம் மூன்று பேருமாகச் சமாதானப்படுத்தி யாரென்று விசாரிக்கலாமே ?” என்று அநுதாபத்தோடு சொன்னார்கள் சக்கசேனாபதியும் இராசசிம்மனும்.

“அவளைப் டார்த்தால் வெகு தொலைவிலிருந்து வந்த வேற்று நாட்டுப் பெண் மாதிரி இருந்தது. அதனால்தான் நான் உதவி செய்யப்போனேன், அந்த முரட்டுத் துணிக்ச்சல்காரி என் மேலேயே சந்தேகப்பட்டுவிட்டாள்” என்று கூறிக் கொண்டே, இருண்ட மூலை ஒன்றில் சாய்ந்துகொள்ளப் போனார் புத்தபிட்சு

கருநாகம் இருந்த செய்தியைச் சொல்லி அவரை எச்சரித்தர்கள் அவர்கள். பிட்சு சிரித்தார். “நாமாக ஏற்படுத்திக் கொள்கிற பயங்கள்தான் வாழ்க்கையின் துன்பத்தை வளர்ப்பன. தூங்கும்போது என் உடல் பற்றிய நினைவு எனக்கு உரிமை இல்லை: ஆகவே நான் பாம்பைப் ப்ற்றிக் கவலைப்படுவ்தில்லை. அது என்னைத் தீண்டும் உரிமை பெற்றிருந்தால் அதைத் தடுக்க நான் யார்?” என்று கணிரென்று பதில் சொன்னார் அவர் கால் நாழிகைக்குப் பின் பிட்சு நன்றாகத் தூங்கும் குறட்டை ஒலி கேட்டது. இருந்த பாம்பு போன பின்பு இல்லாத பாம்பை நினைத்துத் தூங்காமல் விழித்திருந்த அவர்கள் இருவருக்கும் அவர்மேல் பொறாமையாக இருந்தது'அவ்வளவு தூய்மையார் துறவி மேல் சந்தேகப்பட்ட பெண்ணை மனத்தில் சபித்தார்கள் அவர்கள். மழையும் தனியவில்லை , காற்றும் தணியவில்லை . எங்கே ஒரு மூலையில் ஏரி உடைத்துக் கொண்டு தண்ணீர் பாய்கிற ஓசையை அவர்கள் கேட்டார்கள். சிறிது நேரத்தில் ஒரு பெண்ணின் பயங்கர ஒலமும் எழுந்தது. சக்கசேனாபதி பிட்சுவை எழுப்பி அந்த ஒலத்தைக் கேட்கச்சொன்னார். சிறிது நேரம் உற்றுக் கேட்ட பிட்சு “அவளுடைய குரல் போலத்தான் இருக்கிறது” என்று தீர்மானமாகச் சொன்னார்.