பாப்பா முதல் பாட்டி வரை/012-024

விக்கிமூலம் இலிருந்து

பெண்களே கோபத்தை அடக்காதீர்கள்

கரங்களில் இருசக்கர வாகனங்கள் அல்லது கார்களைப் பெண்கள் ஓட்டுவதைப் பார்த்தோ, அல்லது வேலைக்குச் செல்வதைப் பார்த்தோ, பெண்கள் முன்னேறிவிட்டார்கள் என்று கணிப்பது சரியல்ல. பெண் உரிமைக்காகப் போராடும் இயக்கங்கள், ஆங்காங்கே உள்ள நிலையிலும், இலட்சக்கணக்கான பெண்கள், இரண்டாம் தரக் குடிமக்களாகவே இன்னமும் நடத்தப்படுகின்றனர்.

உதாரணமாக, இன்னமும் தனது பெற்றோர் வீட்டுக்குச் செல்வதற்கு கணவனின் அனுமதியைப் பெற வேண்டிய கட்டாயம் மனைவிக்கு உள்ளது. இதே போன்று பெற்றாேர் வீட்டுக்குக் கணவனுடன் தான் செல்ல வேண்டும் என்ற நிலையும் உள்ளது. பெற்றோர் வீட்டுக்குச் செல்வதற்குக் கூட சுதந்திரம் இல்லாத நிலை வருத்தத்துக்குரியது. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், இன்னமும் சமூகத்தில், பெண்களின் நிலை, ஆண்களை விடத் தாழ்ந்த தாகத்தான் உள்ளது.

மொத்த இந்திய மக்கள் தொகையில், 50 சதவீதம் பேர் பெண்கள். அதாவது 50 கோடிப் பேர் பெண்கள். நோய்வாய்ப்படும் நிலையில் குடும்பப் பொறுப்பைச் சுமக்கும் பெண், உடனடியாகச் சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை. உடல் நிலை மிக மோசமான பிறகே, டாக்டரிடம் செல்லும் நிலைதான் உள்ளது. தங்களது உடல் நலத்தில் அக்கறை காண்பிக்கும் ஆர்வம் ஆரம்பத்திலிருந்தே பெண்களுக்கு இருப்பதில்லை.

கோபப்பட சுதந்திரம் இல்லை : பெண்ணுக்கு கோபம் ஏற்பட்டால், அது அடக்கத்தோடு ஒப்பிடப்படுகிறது. பெண் என்றால், அடக்கமாக, அதாவது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எழுதப்படாத சட்டம், நீண்டகாலமாக உள்ளது. உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடப் பெண்ணுக்குச் சுதந்திரம் கிடையாது. அதே சமயம், ஆண் கோபப்படுவது குறித்து, யாரும் குறை கூறுவதில்லை. நியாயமான விஷயங்களில் கூட கோபத்தை அடக்குவதால், பெண்களின் மனநலம் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. எனவே தேவையின்றி, உணர்ச்சிகளை அடக்கிக் கொள்ளுவது நல்லதல்ல.

ஆண்களின் ஆதிக்கம் : இன்னமும் 70 முதல் 80 சதவீதம் வரை, ஆண் ஆதிக்கச் சமுதாயத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கணவனைச் சார்ந்து வாழ வேண்டியுள்ளதால், தங்களது விருப்பத்தை - மனத்துக்குப் பிடித்ததைச் சுதந்திரமாகச் சொல்ல முடியாத நிலைக்குப் பல சமயங்களில் தள்ளப்படுகிறார்கள். எந்தவொரு முக்கியமான விஷயத்திலும், பெரும்பாலும் ஆணின் முடிவை ஏற்றுக்கொள்ளும் நிலையும் ஏற்படுகிறது.

ஆண் குழந்தையா, பெண் குழந்தையா-யார் காரணம்?: பிறக்கும் குழந்தை பெண்ணாக இல்லாமல், ஆணாக இருக்க வேண்டுமே என்று, படித்தவர்கள் கூட விரும்புகிறார்கள். குரோமோசோம்கள் மூலமே குழந்தையின் பாலினம், (ஆண் அல்லது பெண்) தீர்மானிக்கப்படுகிறது. ஆண், பெண் இருவருக்குமே, தலா 23 குரோமோசோம்கள் இருக்கும். ஆணுக்கு எக்ஸ், ஒய் என, இரு வகையான குரோமோசோம்கள் இருக்கும். பெண்ணுக்கு ஒய் குரோமோசோம்கள் கிடையாது. செக்ஸ் குரோமோசோமுக்கு உரிய எண் 23. கணவனின் ஒய் குரோமோசோம், மனைவியின் எக்ஸ் குரோமோசோமுடன் சேரும் நிலையில், ஆண் குழந்தை பிறக்கும். கணவனின் எக்ஸ் குரோமோசோம், மனைவியின் எக்ஸ் குரோமாசோம்களுடன் சேரும் நிலையில் பெண் குழந்தை பிறக்கும். ஆக, குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கணவனின் குரோமோசோம் தான் தீர்மானிக்கிறது. எனவே, பெண் குழந்தை பிறந்தால், பெண்ணைக் குறை சொல்வது தவறு என்பதை, அனைவரும் உணருவது அவசியம்.

ஆரம்பம் முதலே பாதகம்: தமிழகத்தில் சில இடங்களில், பெண் சிசுக்கொலை தொடருகிறது. பெண் குழந்தை பிறந்துவிட்டால், அது வளரும் நிலையில், பெற்றோரின் வசைமொழிகளுக்கு அதிகம் உள்ளாகி, ‘ஏண்டா, இந்த வீட்டில் பிறந்தோம்’ என்ற நினைப்பு ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமாவதும் உண்டு. குழந்தைப் பருவத்திலிருந்தே வசைமோழி என்றால், அப் பெண் பூப் பெய்துவிட்டால், கட்டுப்பாடுகளுக்குக் குறைவிருக்காது. ‘இருட்டிய பிறகு எங்கேயும் போகாதே’ , ‘எதிர் வீட்டு ஜன்னலில் என்ன பாக்குறே’ , ‘அந்தப் பையனோட உனக்கு என்ன பேச்சு’ எனக் கட்டுப்பாடுகள் ஆரம்பிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, வீட்டுக்கு விருந்தினர் யாராவது வந்துவிட்டால், ‘உள்ளேபோ’ என்ற அரட்டல் உடனே வரும். இப்படி ஆரம்பத்திலிருந்தே நடைபெறும். நிகழ்ச்சிகள் தான், பெண்ணின் மனநலனுக்குப் பாதகமாக அமைகின்றன.

சுய முடிவு எடுக்க அனுமதியுங்கள் : சிறு சிறு விஷயங்களில் கூட குழந்தைகளை சுய முடிவு எடுக்க விடாமல், பெற்றோர் குறுக்கிடுவது நல்லது அல்ல. உதாரணமாக புதிய ஆடை வாங்கிக் கொடுக்க கடைக்கு அழைத்துச் செல்லும் போது குழந்தை தான் விரும்பும் கலர் துணியை எடுத்துக் கொள்ளப் பெற்றோர் அனுமதிக்க வேண்டும். தங்கள் விருப்பத்தைக் குழந்தையின் மீது திணிப்பது சரியல்ல.

குழந்தைக்குப் பிரச்சினை ஏற்படும் நிலை : பள்ளியில் ஆசிரியர் திட்டிவிட்டார் என்று குழந்தை வந்து சொன்னால், பெற்றோர் உடனே, பதட்டம் அடையத் தேவையில்லை. எதற்காக ஆசிரியர் திட்டினார் என்பதைத் தெரிந்து கொண்டு, குழந்தையிடமே பிரச்சினையைத் தீர்ப்பதற்குரிய வழியைக் கேட்க வேண்டும். குழந்தையின் முடிவு சரியாக இருக்குமானால், உடனே பாராட்டத் தவறக்கூடாது. இவ்வாறு செய்தால், எந்தவொரு விஷயத்திலும், சுயமாக நல்லதொரு முடிவு எடுக்கும் திறன் குழந்தைக்கு வளர்ந்துகொண்டே வந்து, எதிர்காலத்தில் நன்மை தரும்.

யாரிடமும் பேசாமல் இருப்பது நல்லதா? : “எங்க வீட்டுப்பிள்ளைங்க யாரிடமும் பேச மாட்டார்கள்; இவர்கள் உண்டு - அவர்கள் வேலை உண்டு என இருப்பார்கள் ” எனப் பல பெற்றாேர்கள், மார்தட்டிக் கொள்வதுண்டு. இது தவறான அணுகுமுறை. மாறி வரும் சமுதாயச் சூழ்நிலையில், எல்லோரிடமும் சகஜமாகப் பேசிப் பழகுவது அவசியம். அப்போது தான், ஏட்டுக் கல்வியோடு, வாழ்க்கைக் கல்வியையும் தெரிந்து கொள்ள முடியும். யாரிடமும் பேசாமல், வீட்டுக்குள்ளேயே கிணற்றுத் தவளையாக வளரும் குழந்தைகளால், வெளி உலகத்தை ஜெயிக்க முடியாது. ஒரு கடைக்குப் போய், ஒரு பொருளை வாங்குதவற்குக் கூட அவர்களுக்குத் தயக்கம் ஏற்படும். எல்லாவற்றுக்கும் யாரையாவது சார்ந்திருக்கும் சூழ்நிலை ஏற்படும். அதேசமயம், சகஜமாகப் பழகவிட வேண்டுமென்றால், மரபுகள் - பண்புகளை மீறி எல்லை மீற வேண்டும் என்று அர்த்தம் அல்ல. நல்ல நண்பர்களைத் தேர்வு செய்துகொண்டு, நல்ல விஷயங்களை விவாதித்து மகிழ்வதும், சகஜமாகப் பழகுவது தான்.

விளைவு என்ன? : இது போன்று சகஜமாகப் பழகாமல், தனக்குள்ளேயே உணர்ச்சிகளை அடக்குவோருக்கு, மன அழுத்தம் (டிப்ரஷன்) தாழ்வு மனப்பான்மை ஆகியவை ஏற்பட அதிக வாய்ப்புண்டு.குறிப்பாக, நண்பர்களே இன்றி இருப்போருக்கு, மனச் சிதைவு நோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். மேலும், பூப்பெய்திய முதலே, பெண்களின் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஆரம்பிக்கின்றன. மாதவிடாய் சுழற்சி, கர்ப்பம் தரிக்கும் நிலை, மாதவிடாய் நின்று விடுதல் ஆகிய நிகழ்வுகளின் போது, ஹார்மோன் சுரப்பில் மாற்றம் ஏற்படும். எதிர் பார்க்காமல் கர்ப்பம் தரித்துவிடும் நிலையில் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புண்டு. இதே போன்று, மாதவிலக்கு நின்று விடும்போது, (மெனோ பாஸ்) மன அழுத்தம் ஏறப்டலாம். மாதவிடாய் முற்றிலும் நின்ற பிறகு, பெண்ணின் உடல் ஹார்மோன்களைச் சீரமைத்து, உடல் நலனைப் பராமரிக்க, தற்போது ஹாா்மோன் மாற்று சிகிச்சை (Harmone Replacemnt Therapy) உள்ளது.

கணவன்மார்களே! : மனைவியின் மனநலம் பாதிக்கப்பட்டால், அது குறித்துக் கணவன் கவலைப்படுவதில்லை. மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற அக்கறையும் இருப்பதில்லை. நான் ஏன் மன நல மருத்துவரிடம் வர வேண்டும், உனக்குத்தான் மனநலம் சரியில்லை என்று கூறுவார்கள். உடலுறவுக்கு உரிய இயந்திரமாக மனைவியை 80 சதவீத ஆண்கள் நினைப்பதே, இதற்குக் காரணம் மனைவியின் மனநலம் பாதிக்கப்பட்டால், கணவன், மாமனார், மாமியார் ஆகியோர் அனைவரும் சேர்ந்து, மனநல மருத்துவரைச் சந்திப்பதே பலன் அளிக்கும். அப்போது தான், பிரச்சினையின் தன்மையை ஆய்வு செய்து, சிகிச்சை அளிக்க முடியும்.

மனைவியைத் திட்டாதீர்கள் : ஆரம்பத்திலிருந்தே பெற்றோர்கள் பேசிக்கொள்வது, நடவடிக்கைகள், ஆகியவை குழந்தையின் மனத்தில் ஆழமாகப் பதிந்து கொண்டே வரும். பல குடும்பங்களில், உங்க அம்மா சரியான மக்கு, ஒன்னுமே தெரியலே, எனக் குழந்தையின் தந்தை கூறுவது உண்டு. இதுபோன்ற வார்த்தைகள் மிகவும் தவறானவை. தொடர்ந்து செய்யப்படும் இதுபோன்ற செயல்கள் காரணமாக, எதிர் அணுகுமுறையோடு, குழந்தை, வளரும். எனவே, சண்டையிடுவது உள்பட, குழந்தையின் மன நலனைப் பாதிக்கக்கூடிய செயல்களைப் பெற்றோர் செய்யக்கூடாது.

சமுதாய பாதிப்பு: மனநோயை, ஒருவருக்கு ஏற்படும் தனிப்பட்ட நோயாகக் கருதக்கூடாது. ஏனெனில், ஒரு பெண், மன நோயால் பாதிக்கப்பட்டால், அவளது, குழந்தை, கணவர் எனக் குடும்பச் சூழலே பாதிக்கப்படுகிறது. இதனால் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படுகிறது, என்பதை நினைவில் கொள்வது அவசியம்.