புறப்பொருள் வெண்பாமாலை/வஞ்சிப் படலம்

விக்கிமூலம் இலிருந்து

வஞ்சிப் படலம்[தொகு]

வாடாவஞ்சி வஞ்சி யரவம்
கூடார்ப் பிணிக்குங் குடைநிலை வாணிலை
கொற்றவை நிலையே கொற்ற வஞ்சி
குற்றமில் சிறப்பிற் கொற்ற வள்ளை
பேராண் வஞ்சி மாராய வஞ்சி
நெடுமொழி வஞ்சி முதுமொழி வஞ்சி
துழுபுல வஞ்சி மழபுல வஞ்சி
கொடையின் வஞ்சி குறுவஞ் சிய்யே
பெருவஞ் சிய்யே பெறுஞ்சோற்று நிலையொடு
நல்லிசை வஞ்சியென நாட்டினர்ஃதொகுத்த
எஞ்சாச் சீர்த்தி யிருபத் தொன்றும்
வஞ்சியும் வஞ்சித் துறையு மாகும்.
  1. வஞ்சி
  2. வஞ்சியரவம்
  3. குடைநிலை
  4. வாணிலை
  5. கொற்றவை நிலை
  6. கொற்ற வஞ்சி
  7. கொற்ற வள்ளை
  8. பேராண் வஞ்சி
  9. மாராய வஞ்சி
  10. நெடுமொழி வஞ்சி
  11. முதுமொழி வஞ்சி
  12. உழபுல வஞ்சி
  13. மழபுல வஞ்சி
  14. கொடை வஞ்சி
  15. குறுவஞ்சி
  16. ஒருதனிநிலை
  17. தழிஞ்சி
  18. பாசறை
  19. பெருவஞ்சி
  20. பெறுஞ்சோற்று நிலை
  21. நல்லிசை வஞ்சி

என்று வஞ்சித்திணை 21 (1+20) துறைகள் கொண்டது

வஞ்சி[தொகு]

வாடாவஞ்சி தலைமலைந்து
கூடார்மண் கொளல்குறித்தன்று. - கொளு
வாடாத பொன்மலர் வஞ்சி சூடிக்கொண்டு
இணக்கம் இல்லாதவர் மண்ணைக் கொள்ளக் கருதியது
செங்கண் மழவிடையிற் றண்டிச் சிலைமறவர்
வெங்கண் மகிழ்ந்து விழவமர – அங்குழைய
வஞ்சி வணங்கார் வணக்கிய வண்டார்ப்பக்
குஞ்சி மலைந்தானெங் கோ.
சினம் கொண்ட காளை போல்
சிலைமறவர் விழாக் கொண்டாட
வணங்காரை வணக்க
மன்னன் வஞ்சி மலர் சூடினான்

வஞ்சியரவம்[தொகு]

வள்வார் முரசமொடு வயக்களிறு முழங்க
ஒள்வாட் டானை யுருத்தெழுந் தன்று.
முரசும் களிறும் முழங்க வாள் மறவர் போருக்கு எழுதல்
பௌவம் பணைமுழங்கப் பற்றார்மண் பாழாக
வௌவிய வஞ்சி வலம்புனையச் – செவ்வேல்
ஒளிறும் படைநடுவ ணூழித்தீ யன்ன
களிறுங் களித்ததிருங் கார்.
பணைமுரசம் கடல் அலை போல் முழங்க
பகைவர் மண் பாழாகும்படி
வஞ்சிப் பூவைத் தலையின் வலப் பக்கம் அணிந்துகொண்டு
வேல் மறவன் களிற்றின் மேல் சென்றான்

குடைநிலை[தொகு]

பெய்தாமஞ் சுரும்பிமிரப் பெரும்புலவர் புகழ்பாடக்
கொய்தார் மன்னவன் குடைநாட் கொண்டன்று.
மாலையில் வண்டு மொய்க்கவும்
புலவர் புகழ் பாடவும்
மன்னன் தன் குடைக்கு நாள்விழா கொண்டாடுதல்
முன்னர் முரசிரங்க மூரிக் கடற்றானைத்
துன்னருந் துப்பிற் றொழுதெழா – மன்னர்
உடைநா ளுலந்தனவா லோதநீர் வேலிக்
குடைநா ளிறைவன் கொள.
மன்னன் குடைநாள் விழா கொண்டாடியபோது
முரசு முழக்கம் முன்னே சென்றது
கடல் போன்ற படை மன்னனின் வலிமையைத் தொழுதது

வாணிலை (வாள்+நிலை)[தொகு]

செற்றார்மேல் செலவமர்ந்து
கொற்றவா ணாடகொண்டன்று. - கொளு
பகைவர் மேல் செல்ல விரும்பி மன்னன்
தன் கொற்றவாளுக்கு நாள்விழா கொண்டாடியது
அறிந்தவ ராய்ந்தநா ளாழித்தேர் மன்னர்
எறிந்தில கொள்வா ளியக்கம் – அறிந்திகலிப்
பின்பகலே யன்றியும் பேணா ரகநாட்டு
நன்பகலுங் கூகை நகும்.
நன்னாள் அறிந்தவர் ஆய்ந்து சொன்ன நாள்
ஆழித்தேர் மன்னவன்
தன் வாளை வெளியில் எடுத்து விழா கொண்டாடினான்
அப்போது கூகை பகலிலும் குழறிச் சிரித்தது

கொற்றவை நிலை[தொகு]

நீடோளான் வென்றிகொள்கென நிறைமண்டை வலனுயரிக்
கூடாரைப் புறங்காணுங் கொற்றவைநிலை யுரைத்தன்று. -கொளு
கொற்றவை புலால் உண்ணும் மண்டையை வைத்திருப்பவள்
மன்னன் வெற்றி கொள்ள வேண்டும் என்று அவளுக்கு விழா எடுத்தல்
அணங்குடை நோலை பொரிபுழுக்கள் பிண்டி
நிணங்குடர் நெய்த்தோர் நிறைத்துக் – கணம்புகலக்
கையிரிய மண்டைக் கண்மோடி காவலற்கு
மொய்யிரியத் தான்முந் துறும்.
எள்ளுருண்டை
பொரித்த புளுக் கறிகள்
பிண்டி என்னும் கொழுக்கட்டை
கொழுப்பு
குருதி
நிறைத்து வைத்த மண்டைகளுடன் சென்று வழிபட்டனர்

இதுவுமது

மைந்துடை யாடவர் செய்தொழில் கூறலும்
அந்தமில் புலவ ரதுவென மொழிப. - கொளு
மறவர் இன்னது செய்வேன் என்று வஞ்சினம் கூறலும்
அதனைப் புலவர் போற்றலும்
தமருட் டலையாத றார்தாங்கி நிற்றல்
எமருள்யா மின்னமென் றெண்ணல் – அமரின்
முடுகழலின் முந்துறுதன் முல்லைத்தார் வேந்தன்
தொடுகழன் மைந்தர் தொழில்.
தமர் முன்னிலையில் தலைகாட்டாமல்
தார்ப்படையில் நின்றவன்
இப்படிப்பட்டவன் என்று எண்ண வேண்டாம்
போரில் முன்னே நிற்பான்
இவன் வேந்தனுக்குக் வீரக்கழல் சூட்டுபவன்

கொற்றவஞ்சி[தொகு]

வையகம் வணங்க வாளோச் சினனெனச்
செய்கழல் வேந்தன் சீர்மிகுத் தன்று. - கொளு
தன் நாடு வணங்கும்படி போரில் வாளோச்சினான் என்று
மன்னவன் சீராட்டியது
அழலடைந்த மன்றத் தலந்தயரா நின்றார்
நிழலடைந்தே நின்னையென் றேத்திக் – கழலடையா
செற்றங்கொண் டாடிச் சிலைத்தெழுந்தார் வீந்தவியக்
கொற்றங்கொண் டெஃகுயர்த்தான் கோ.
இவன் போர்க்களத்தில்
தனக்கு நிழலாய் இருந்து
பகைவர் கொற்றம் அவிய,
தன் வேலை உயர்த்தினான்
என்று மன்னவன் பாராட்டினான்

கொற்றவள்ளை[தொகு]

மன்னவன் புகழ்கிளந்
தொன்னார்நா டழிபிரங்கிற்று. - கொளு
தன் அரசன் புகழைப் பாடும்போது
பகைவன் நாடு அழிகின்றதே என்று இரங்குதல்
தாழார மார்பினான் றாமரைக்கண் சேந்தனவாற்
பாழாய்ப் பரிய விளிவதுகொல் – யாழாய்ப்
புடைத்தே னிமிர்கண்ணிப் ப்பூங்கட் புதல்வர்
நடைத்தே ரொலிகறங்கு நாடு.
ஆர மார்பின்
தாமரைக் கண்ணான்
என் மன்னன் கண் சிவந்தான்
யாழ் போல் வண்டொலிக்கும்
கண்ணி சூடிய புதல்வர்கள்
நடைத்தேர் ஒலி கறங்கும் நாடு
அழிந்துவிடுமோ

பேராண் வஞ்சி[தொகு]

கேளல்லார் முனைகெடுத்த
மீளியாளர்க்கு மிகவுய்த்தன்று. - கொளு
பகைவர் போர்முனையை அழித்த மீளியாளர்க்கு
மன்னன் கொடை வழங்கி மேம்படுத்தியது
பலிபெறு நன்னகரும் பள்ளி யிடனும்
ஒலிகெழு நான்மறையோ ரில்லும் – நலிவொரீஇப்
புல்லா ரிரியப் பொருதார் முனைகெடுத்த
வில்லார்க் கருள்சுரந்தான் வேந்து.
பலி பெறும் கோயில்களும்
பள்ளித் தலங்களும்
நலிவு இல்லாமல் இருக்க,
பகைவரைப் போரில் அழித்த வில்லாளனுக்கு
வேந்தன் அருள்கொடை வழங்கினான்

இதுவுமது

அருந்திறை யளப்ப வாறிய சினத்தொடு
பெரும்பூண் மன்னவன் பெயர்தலு மதுவே. - கொளு
பகைவர் திறை கொடுக்க,
சினம் மாறிய அரசன் திரும்புதல்
கூடி முரசிரங்கத் கொய்யுளைமா முன்னுகளப்
பாடி பெயர்ந்திட்டான் பல்வேலான் – கோடி
நிதியந் திறையளந்தார் நேராருந் தன்கீழ்
முதியமென் றாறி முரண்.
பகைவர் திறை அளந்து தந்து
உன் அயியில் முதியோம் என்று கூற
முரசு முழக்கத்துடன்
குதிரை துள்ளி வர
அரசன் பாடியிலிருந்து திரும்பினான்

மாராய வஞ்சி[தொகு]

மறவேந்தனிற் சிறப்பெய்திய
விறல்வேலோர் நிலையுரைத்தன்று. - கொளு
வேந்தன் வெற்றி மறவனுக்கு "மாராயன்" என்னும் விருது வழங்கிச் சிறப்பித்தான்
நேராரம் பூண்ட நெடுந்தகை நேர்கழலான்
சேரார் முனைநோக்கிக் கண்சிவப்பப் – போரார்
நறவேய் கமழ்தெரிய னண்ணா ரெறிந்த
மறவே லிலைமுகந்த மார்பு.
பகைவரின் மறவேலை மார்பில் தாங்கிச்
சினத்துடன் பகைவரை வென்று
மீண்ட மறவனுக்கு
மார்பில் ஆரமும்
காலில் கழலும் அணிவித்து
அரசன் மாராய விருது வழங்கினான்

நெடுமொழி வஞ்சி[தொகு]

ஒன்னாதார் படைகெழுமித்
தன்னாண்மை யெடுத்துரைத்தன்று.
பகைவர் படை நடுவில்
மறவன் தன் ஆண்மைத் திறத்தை எடுத்துக் கூறுவது
இன்ன ரெனவேண்டா வென்னோ டெதிர்சீறி
முன்னர் வருக முரணகலும் – மன்னர்
பருந்தார் படையமருட் பல்லார் புகழ
விருந்தா யடைகுறுவார் வீண்.
இன்னார் எனல் வேண்டா
யார் வேண்டுமானாலும் வருக
என்னோடு போரிடுக
அவர்களையும்
அவர்களின் மன்னனையும்
பருந்துக்கு விருந்தாக்குவேன்
மறவன் இவ்வாறு கூறுகிறான்

முதுமொழி வஞ்சி[தொகு]

தொன்மரபின் வாட்குடியின்
முன்னோனது நிலைகிளந்தன்று. - கொளு
மறவன் ஒருவனின் தொல்குடி மரபினை
மற்றவர்கள் புகழ்ந்து கூறுதல்
குளிறு முரசங் குணில்பாயக் கூடார்
ஒளிறுவாள் வெள்ள முழக்கிக் – களிறெறிந்து
புண்ணொடு வந்தான் புதல்வற்குப் பூங்கழலோய்
தண்ணடை நல்கல் தரும்.
பார்க்களத்தில் முரசு முழங்கிற்று
இந்த மறவன் தன் வாளைப் பகைவர் வாளோடு முழக்கினான்
பகைவர் களிற்றை வெட்டி வீழ்த்தினான்
புண்ணுடன் வந்திருக்கிறான்
அரசன் இவலுக்குத் தண்ணடை (நன்செய் நிலம்) தருகிறான்

உழபுல வஞ்சி[தொகு]

நேராதார் வளநாட்டைக்
கூரெரி கொளீஇயன்று - கொளு
பகைவர் நாட்டை எரித்தல்
அயிலன்ன கண்புதைத் தஞ்சி யலறி
மயிலன்னார் மன்றம் படரக் – குயிலகவ
ஆடிரிய வண்டிமிருஞ் செம்ம லடையார்நாட்
டோடெரியுள் வைகின வூர்.
மயில் அன்னார்
வேல் போன்ற கண்களைக்
கைகளால் மூடிக்கொண்டு
அசி, அலறி ஊர் மன்றம் வரும்படியாக
குயில்கள் அகவும்பறியாக
ஆடுகள் வெருவி ஓடும்படியாக
வண்டுகள் பறக்கும்படியாக
தழைமரங்கள் மிக்க ஊர்
தீ பற்றி எரிந்தது

மழபுல வஞ்சி[தொகு]

கூடார்முனை கொள்ளைசாற்றி
வீடறக்கவர்ந்த வினைமொழிந்தன்று. - கொளு
பகைவர் ஊரிலுள்ள பொருள்களை
மக்களிடமிருந்து பிடுங்கிக்கொண்டு வருதல்
களமர் கதிர்மணி காலேகஞ் செம்பொன்
வளமனை பாழாக வாரிக் – கொளன்மலிந்து
கண்ணார் சிலையார் கவர்ந்தார் கழல்வேந்தன்
நண்ணார் கிளையலற நாடு.
உழவர் விளைச்சல்
பொன் மணிகள்
முதலானவற்றை
மனை பாழாகும்படி
வில் மறவர்கள் அள்ளிக்கொண்டு வந்தனர்
வேந்தன் பகைவர் சுற்றம் அலறிற்று

கொடை வஞ்சி[தொகு]

நீடவுங் குறுகவு நிவப்பவுந் தூக்கிப்
பாடிய புலவர்க்குப் பரிசினீட் டின்று. - கொளு
தன்னைப் போற்றிப் பாடிக்கொண்டு வந்த புலவர்களுக்கு,
கவர்ந்துவந்த பொருள்களைப் பரிசிலாக வழங்குதல்
சுற்றிய சுற்ற முடன்மயங்கித் தம்வயி
றெற்றி மடவா ரிரிந்தோட – முற்றிக்
குரிசி லடையாரைக் கொண்டகூட டெல்லாம்
பரிசின் முகந்தன பாண்.
சுற்றத்தார் மயங்கினர்
மகளிர் ஓடினர்
நெல் கூடுகள் கொள்ளை அடித்துக் கொண்டுவரப்பட்டன
அவை பாணர்களுக்கும் பரிசிலாக வழங்கப்பட்டன

குறுவஞ்சி[தொகு]

மடுத்தெழுந்த மறவேந்தர்க்குக்
கொடுத்தளித்துக் குடியோம்பின்று. - கொளு
போரில் துணைநின்ற மன்னர்க்கு,
அள்ளிக்கொண்டு வந்த பொருள்களைக் கொடுத்து
அவர்களின் குடிமக்களைக் காப்பாற்றுவது
தாட்டாழ் தடக்கைத்தனிமதி வெண்குடையான்
வாட்டானை வெள்ளம் வரவஞ்சி – மீட்டான்
மலையா மறமன்னன் மால்வரையே போலும்
கொலையானை பாய்மாக் கொடுத்து.
போரில் கவர்ந்து வந்த
யானை, குதிரைகளை
உதவிய மன்னர்களுக்கு வழங்கினான்

இதுவுமது

கட்டூரது வகைகூறினும்
அத்துறைக் குறித்தாகும் - கொளு
கட்டிய ஊராகிய பாசறை பற்றிக் கூறினாலும் குறுவஞ்சித் துறை ஆகும்
அவிழ்மலர்க் கோதைய ராட வொருபால்
இமிழ்முழவம் யாழோ டியம்பக் – கவிழ்மணிய
காய்கடா யானை யொருபாற் களித்ததிரும்
ஆய்கழலான் கட்டூ ரகத்து.
பாசறையில் மகளிர் ஆடினர்
முழவு முழங்கிற்று
யாழ் இசை எழுந்தது
யானை முழங்கிற்று

ஒருதனிநிலை[தொகு]

பொருபடையுட் கற்சிறைபோன்
றொருவன்றாங்கிய நிலையுரைத்தன்று. - கொளு
ஆற்று வெள்ளத்தைத் தடுத்து நிற்கும் தனிப்பாறை போல்
போரைத் தடுத்து நின்ற ஒருவன் பற்றிச் சிறப்பித்துக் கூறுதல்
வீடுணர்ந் தோர்க்கும் வியப்பாமா லிந்நின்ற
வாடன் முதியாள் வயிற்றிடம் – கூடார்
பெரும்படை வெள்ள நெரிதரவும் பேரா
இரும்புலி சேர்ந்த விடம்.
முதியாள் வயிற்றிடம் வீடுபேறு போல் தோன்றுவதில் வியப்பு ஒன்றுமில்லை
இவள் மகன் பெரும்படையைப் புலிபோல் நின்று காத்தான்

தழிஞ்சி[தொகு]

அழிகுநர் புறக்கொடை யயில்வா ளோச்சாக்
கழிதறு கண்மை காதலித் துரைத்தன்று. - கொளு
அழியும் படை புறங்கொடுக்குபடி
வாளோச்சிய தறுகண்மையைப் பாராட்டுதல்
கான்படு தீயிற் கலவார்தன் மேல்வரினும்
தான்படை தீண்டாத் தறுகண்ணன் – வான்படர்தல்
கண்ணியபி னன்றிக் கறுத்தார் மறந்தொலைதல்
எண்ணியபின் போக்குமோ வெஃகு.
காட்டுத் தீ போலப் பகைவர் தாக்கினாலும்
தடுத்து நிற்பானே அல்லாமல்
தன் உயிருக்கு இறுதி நேரும் என்னும் நிலை வருவதற்கு முன்னர்
தன் வேலை அந்த மறவன் வீசமாட்டான்

பாசறைநிலை[தொகு]

மதிக்குடைக்கீழ் வழிமொழிந்து மன்னரெல்லா மறந்துறப்பவும்
பதிப்பெயரான் மறவேந்தன் பாசறை யிருந்தன்று. - கொளு
மன்னர் எல்லாரும் போரை விட்டுவிட்டு வழிமொழிந்து காத்திருக்கும்போது
பாசறையில் குடை நிழலில் வீற்றிருக்கும் வேந்தன் ஊர் திரும்பாமல் இருக்கும் நிலையைக் கூறுவது
கரும்பொடு காய்நெற் கனையெரி யூட்டிப்
பெரும்புனல் வாய்திறந்த பின்னும் – சுரும்பின்
தொகைமலிந்த தண்குவளைத் தாமலர்த் தாரான்
பகைமெலியப் பாசறையு ளான்.
நெல், கரும்பு வயல்களை எரித்த பின்னரும்
நீர்த் தேக்கங்களை உடைத்த பின்னரும்
குவளை மலர் மாலை அணிந்த வேந்தன்
பகைவர்கள் மேலும் மெலியும்படிப் பாசறையில் இருக்கிறான்

பெருவஞ்சி[தொகு]

முன்னடையார் வளநாட்டைப்
பின்னருமுடன் றெரீகொளீஇயன்று. - கொளு
தன்னை வணங்காதவர் வளநாட்டை,
படையுடன் சென்று எரி மூட்டியது
பீடுலா மன்னர் நடுங்கப் பெரும்புகை
ஊடுலாய் வானத் தொளிமறைப்ப – நாடெலாம்
பின்னும் பிறங்கழல் வேய்ந்தன பெய்கழற்கால்
மன்னன் கனல மறம்.
வேந்தன் மறத்தால் கனன்று
பெருமை மிக்க மன்னர் நடுங்க
வானில் ஒளி மறையும்படி
பகைவர் நாடெல்லாம் தீ மூட்டினான்

பெருஞ்சோற்று நிலை[தொகு]

திருந்தார் தெம்முனை தெறுகுவ ரிவரெனப்
பெருஞ்சோ றாடவர் பெறுமுறை வகுத்தன்று. - கொளு
இவர் பகைவர் போர்முனையை அழிப்பர் என்று ஊக்குவிக்க
முன்கூட்டியே மறவர்க்குப் பெருஞ்சோறு அளித்து அவர்கள் பெற்றதைக் கூறுவது
இயவர் புகழ வெறிமுர சார்ப்பக்
குயவரி வேங்கை யனைய – வயவர்
பெறுமுறையாற் பிண்டங்கோ ளேவினான் பேணார்
இறுமுறாயா லெண்ணி யிறை.
இயவரின் முரசு முழக்கத்துடன்
வேங்கை போன்ற வயவர்க்கு
அவர்களின் தரவரிசை முறைப்படி
வேந்தன் பெருஞ்சோற்றுப் பிண்டம் கொடுத்தான்

நல்லிசை வஞ்சி[தொகு]

ஒன்னாதார் முனைகெடவிறுத்த
வென்வேலாடவன் விறன்மிகுத்தன்று. - கொளு
பகைவர் போர்முனையை அழித்த
வேல்வீரனின் ஆற்றலைப் புகழ்ந்தது
மடங்கலிற் சீறி மலைத்தெழுந்தார் மண்மேல்
இடங்கெடச் சென்றிறுத்த பின்னும் – நுடங்கெரிபோல்
வெல்லப் பெருகும் படையாற்கு வேந்தர்மேற்
செல்லப் பெருகும் சினம்.
போருக்கெழுந்தவர் நாட்டின்மீது மடங்கல் போல் சீறித் தாக்கிய பின்னரும்
தீயைப் போல் வெல்லச் செல்லும் படையானின் சினத்தைப் பாராட்டியது

இதுவுமது

இறுத்தபி னழிபிரங்கல்
மறுத்துரைப்பினு மத்துறையாகும் - கொளு
போர் நடத்திய பின்னர்
பகைவர் அழிவுக்கு இரங்க மறுத்துக் கூறுவதும் அத் துறை
குரையழன் மண்டிய கோடுயர் மாடம்
கரையொடுபேய்ப் பீர்க்குஞ் சுமந்த – நிரைதிண்டேர்ப்
பல்லிசை வென்றிப் படைக்கடலான் சென்றிறுப்ப
நல்லிசை கொண்டடையார் நாடு.
வேந்தன் புகழை ஏற்றுக்கொள்ளாதவர் நகர மாடங்கள் தீ பற்றி எரிந்து அவிந்து
சுரை, பீர்க்கங் கொடிகள் படர்ந்திருந்தன

மூன்றாவது வஞ்சிப்படலம் முற்றிற்று.