உள்ளடக்கத்துக்குச் செல்

புல்லின் இதழ்கள்/கொஞ்சும் அழகு

விக்கிமூலம் இலிருந்து

29. கொஞ்சும் அழகு

ரி விழித்தவுடன், எதிர்ச் சுவரில் இருந்த காலண்டர்தான் அவன் கண்ணில் பட்டது. தரையில் உட்கார்ந்து பாடிக் கொண்டிருந்தவன், காந்தாமணியின் கட்டிலில் இடம் பெற்ற வரலாற்றையும், இடையே மூன்று நாள் ஓடிப் போனது எப்படி என்பதையும் சிந்தித்துக் கொண்டே எழுந்திருக்கப் போனவன், பதறிப் போய்த் தன் கால்களைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டான்.

மண்ணில் நடந்து சென்றவன் பாததூளி பட்டுக் கல்லொன்று பெண்ணாகி எழுந்த வித்தையைப் போல—ஹரியின் கால் பட்டு, கட்டிலின் கீழே படுத்திருந்த காந்தாமணி உறக்கம் கலைந்து, வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள்.

அதற்குள், அங்கே வந்த காந்தாமணியின் தாய், மிக்க மகிழ்ச்சியுடன், “டீச்சர் ஸார், விழித்துக் கொண்டு விட்டீர்களா? நல்ல வேளை, எங்கள் வயிற்றில் பாலை வார்த்தீர்கள்! அப்படியே படுத்திருங்கள்” என்று கூறிக் கொண்டே ஹரியின் அருகில் வந்தாள்.

விழிப்பு வந்ததும் கொடுக்கும்படி டாக்டர் தந்த மருந்தையும், மாத்திரையையும் ஹரியின் கையில் கொடுத்துச் சாப்பிடச் செய்தாள். “உடம்பு இப்போது எப்படி இருக்கிறது?” என்று மிகவும் கவலையோடு கேட்ட அவள் முகத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே ஹரி கூறினான்: “உங்களுக்கெல்லாம் வீண் சிரமத்தைக் கொடுத்து, மிகவும் பயமுறுத்தி விட்டேன்.”

“வீண் சிரமமா? யாருக்கு? உங்களுக்கு இத்தனை கஷ்டமும் ஏற்பட நான்தான் காரணம். வரும்போதே, உங்களுக்கு உடம்பு சரியில்லை என்று என்னிடம் ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா?”

“இப்பொழுது யார் சொன்னார்கள்?”

“யாரும் சொல்லவில்லை. சட்டைப் பையில் இருந்த மாத்திரைகளைப் பார்த்துத் தெரிந்து கொண்டோம். இங்கே வந்து இப்படி ஆகி விட்டதே என்று, நான் பயந்து விட்டேன். நீங்கள் கண் விழித்து எழுந்திருக்க வேண்டுமே என்று, நான் இந்த உலகத்தில் வேண்டாத தெய்வம் ஒன்று பாக்கியில்லை” என்று காந்தாமணி கூறினாள்.

அப்போது அங்கு வந்த அவர்கள் குடும்ப டாக்டர் “அது மட்டுமல்ல மிஸ்டர் ஹரி; கடந்த நாலைந்து நாட்களில், உங்களை வந்து பார்க்காத டாக்டர், இந்த ஊரில் ஒருவர் பாக்கி இல்லை” என்று சிரித்தபடியே கூறினார்.

ஹரியைச் சோதனை செய்து விட்டு, “இனி மேல், ஒன்றுக்கும் கவலைப் பட வேண்டியதே இல்லை” என்று கூறி, “நல்ல ஆகாரங்கள், பழங்கள், ஹார்லிக்ஸ் மட்டும் கொடுங்கள். ஆனால், கண்டிப்பாக இன்னும் இரண்டு நாளாவது படுக்கையை விட்டு எழுந்திருக்காமல், ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றவர், ஒரு டானிக்கையும் எழுதிக் காந்தாமணியின் தாயின் கையில் கொடுத்தார்.

உடனே காந்தாமணியின் தாய், “அப்படியே இவள் கையையும் கொஞ்சம் பாருங்கள். ஹரி படுத்ததிலிருந்து, இவள் விழியே மூடவில்லை. இப்படியே கட்டிலின் கீழே உட்கார்ந்து கொண்டு, நேற்றுப் பகல் முழுவதும் இருமிக் கொண்டே இருந்தாள்” என்று மகளைப் பற்றிச் சிபாரிசு செய்தாள்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை. இனி மேல், எல்லாம் சரியாகி விடும். சாப்பிட்டு விட்டு நன்றாகத் தூங்கச் சொல்லுங்கள். இன்னும் ஒரு வாரத்துக்குத் தம்பூராவின் பக்கமே இரண்டு பேரும் போகக் கூடாது” என்று கூறிச் சென்றார் டாக்டர்.

ஹரியும், காந்தாமணியும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர். உடனே ஹரி, “இப்பொழுது எனக்கு ஒன்றுமில்லை. வீணே, நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. மத்தியான்ன வண்டிக்கே, நான் ஊருக்குப் போயாக வேண்டும். ஒரு தகவலும் இல்லாமல், என்னைக் காணவில்லையே என்று அங்கே எல்லாரும் கவலைப் பட்டுக் கொண்டிருப்பார்கள். எப்படியும் நான் இன்று புறப்பட்டுப் போய் விடத்தான் போகிறேன்” என்று ஹரி தீர்மானமாகக் கூறினான்.

இதைக் கேட்டதும் காந்தாமணியும், அவள் தாயும் ஹரியை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

“நன்றாகத்தான் இருக்கிறது! ஏன் ஸார், இதை நீங்கள், டாக்டர் வந்த போது சொல்லுவதெற்கென்ன? அவரைக் கேட்காமல், இப்போது உங்களை அனுப்பி வைத்தால், அவருக்கு நாங்கள் என்ன பதில் சொல்லுவது?” என்று உள்ளபடியே பயந்தது போல், காந்தாமணியின் தாய் கூறினாள்.

காந்தாமணியும், தாயின் வார்த்தைகளையே ஹரிக்குச் சிபாரிசு செய்தாள். “உங்களை இரண்டு நாளைக்குக் கட்டிலை விட்டுக் கீழே இறங்க, நான் அநுமதிக்க மாட்டேன். யார் என்னைத் திட்டினாலும், பரவாயில்லை” என்று கூறிய காந்தாமணி, பதிலுக்குக் கூட காத்திராமல், தாயையும் அழைத்துக் கொண்டு கீழே சென்று விட்டாள்.

தனிமையில் இருந்த ஹரியைச் சிந்தனை மொய்த்துக் கொண்டது. அந்தச் சிந்தனைகளில் சுசீலாவும், வசந்தியும், காயத்திரியும், பாகவதரும், லட்சுமியம்மாளும், சுந்தரியும் சுற்றிச் சுற்றி வந்தார்கள்.

அவர்களுக்கெல்லாம் என்ன பதில் கூறுவது என்றே தெரியாததுடன், தான் இருக்கும் இடத்தையும் தெரிவிக்க முடியாத நிலையில் அகப்பட்டுக் கொண்டதையே எண்ணி ஹரி வேதனைப்பட்டான்.

சர்வ சாதாரணமாகக் கூறிய பொய்க்கு, இத்தனை காலத்துக்குப் பிறகு சோதனை ஏற்பட்டதை எண்ணிப் பார்த்தான். காந்தாமணிதான் கல்யாணராமன் என்கிற உண்மை வெளியானால், எப்படி இருக்கும்? எத்தனை உயர்ந்த நோக்கத்துடன், அந்தப் பொய்யைச் சொல்லிக் காரியத்தை மேற் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்பதைப் பற்றிச் சொன்னால், யாராவது நம்புவார்களா?

‘காயத்திரிக்குக் கூட என் நிலையை விளக்க முடியாமற் போய் விட்டதே!’ என்று எண்ணித்தான் ஹரி வருந்தினான்.

“என்ன ஸார், யோசனை பலமாக இருக்கிறது: முதலில் வாயை கொப்புளித்துக் காபி சாப்பிடுங்கள்” என்றாள் காந்தாமணி.

முகத்தைத் துடைத்துக் கொண்டு துண்டைக் கொடுத்தவன், பூசிக் கொள்ளத் திருநீறு கேட்டான். கீழே போய்ப் பழனி விபூதியைக் கொண்டு வந்தாள்.

அதை “முருகா, சுவாமிநாதா” என்று எடுத்து அள்ளி, அவன் பூசிக் கொண்டான். எதிரில் ஒரு தாம்பாளத்தில் இட்டிலி இருந்தது. “இவ்வளவு நெய்யை அதன் தலையில் உருட்டி வைத்துத் தருகிறாயே; உடம்புக்கு ஒத்துக் கொள்ளுமா!” என்று கேட்டான்

“எல்லாம் ஒத்துக் கொள்ளும். பேசாமல் வாயைத் திறந்து சாப்பிடுங்கள்.”

“மனிதன் கீழே விழுந்து விட்டால், நிமிர்ந்து நிற்கிறவர்கள் ஆட்டி வைக்கிறபடி ஆட வேண்டும் போலிருக்கிறது. இப்படி, நெய்க்கு இட்லியைத் தொட்டுக் கொண்டு தின்று எனக்குப் பழக்கமில்லை காந்தாமணி. சொல்வதைக் கேள்.”

“நான் சொல்லுவதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும் . ஏனென்றால் டாக்டர் சொன்னபடித்தான் நான் செய்கிறேன்” என்றாள்.

“தொட்டதற்கெல்லாம், அம்மாவும், பெண்ணும் டாக்டர் மீது பழியைப் போட்டு விடுங்கள். எப்படியோ, உங்களிடம் வந்து அகப்பட்டுக் கொண்டு விட்டேன். சொன்னபடி கேட்காத வரை விட மாட்டீர்கள்; ஒழுங்காகக் கேட்டு விடுகிறேன்.”

“அப்படி வாருங்கள் வழிக்கு. கரும்பு தின்னக் கூலி கேட்கிறீர்களே!” என்றாள் காந்தாமணி புன்னகை பூத்தவாறு.

அந்தப் பார்வை, மின்னல் வேகத்தில் அவன் விழி வழிப் பாய்ந்து, புலன்கள் அனைத்தையும் ஒரு முறை ஆட்டி அலைக்கழித்து விட்டது. ஹரியால் ஏறிட்டும் பார்க்க முடியவில்லை.

மந்திர சக்தியால் கட்டுண்டவன் போல், அவள் நீட்டிய கரத்திலிருந்து ஓவல்டினை வாங்கி, மளமளவென்று குடித்துத் தீர்த்தான்.

காலியான பாத்திரங்களை டிரேயில் அடுக்கி எடுத்துக் கொண்டு புறப்பட்டவளை, ‘காந்தாமணி” என்று ஹரி அழைத்தான்.

அவள் ஆர்வத்தோடு திரும்பிப் பார்த்தாள்.

‘நீ டிபன் சாப்பிட்டு விட்டு மாடிக்கு வரும் போது, எனக்கு ஓர் உதவி செய்ய முடியுமா?”

“என்ன வேண்டும்? தபால் கார்டுதானே?”

“ஆமாம்” என்றான் வியப்புடன்.

“கொண்டு வருகிறேன்” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறி விட்டு, அவள் கீழே இறங்கிச் சென்றாள்.

வாழ்க்கையில், ஹரி அநுபவித்த துன்பமே அதிகம். அதற்கு பரிகாரமாகத்தான் இன்பத்தையும், மகிழ்ச்சியையும் கடவுள் இப்போது சிறிது, சிறிதாக அவனுக்கு அளித்து வருகிறார் போலும். ஆனால், அந்த ஆனந்தத்துக்கும் அடித்தளத்தில் ஏதோ ஒரு வேதனை, அவன் நெஞ்சை வாட்டியது.

‘நான் ஏதாவது தவறு செய்கிறேனா’—என்று எண்ணிப் பார்த்தான். ‘உன்னால் முடியாது’ என்று காயத்திரி அவனைப் பார்த்துச் சிரிப்பது போல் தோன்றியது. கண்களை கசக்கி விட்டுக் கொண்டு பார்த்தான். அந்த உருவமும், அந்தச் சிரிப்பும் மாறவே இல்லை. மீண்டும் கண்ணைக் கசக்க கையை உயர்த்தினான். காந்தாமணி அவன் கரங்களைப் பிடித்துக் கொண்டாள்.

“என்ன இது? பகலில் விழித்துக் கொண்டே தூங்குகிறீர்களா? எதிரில் நிற்கிற என்னை, எதற்காகக் கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்க்கிறீர்கள்? ஏதாவது கனவு கண்டீர்களா?”

ஹரி அவளுடைய தளிர்க் கரங்களிலிருந்து, தன் கையை மெல்ல விடுவித்துக் கொண்டான்.

“கார்டு கொண்டு வந்தாயா காந்தாமணி?”

“இதோ.”

“பேனாவையும் கொடேன்.”

“நீங்கள் சொல்லுங்கள்; நான் எழுதுகிறேன்.”

“ஏன்? டாக்டர் கடிதங்கூட என்னை எழுதக் கூடாது— என்று சொன்னாரா?”

காந்தாமணி சிரித்துக் கொண்டே கேட்டாள்: “ஏன்? ‘வாத்தியாருக்கு உடம்பு சரியில்லை, இரண்டு நாள் கழித்துத்தான் வருவார்’ என்று நான் எழுதக் கூடாதா? ஒரு வேளை, எனக்குத் தெரியாத ரகசியம் ஏதாவது எழுதப் போகிறீர்களா?”

“உன்னைப் புத்திசாலி என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். இம்மாதிரி அசட்டுக் கேள்விகளை நீ கேட்கக் கூடாது.”

“அப்படி நான், என்ன கேட்டு விட்டேனாம்?”

“இன்னும் என்ன கேட்க வேண்டும்? கல்யாண ராமனை எங்கள் வீட்டில் எல்லாரும் ஆண் பிள்ளை என்றுதான் எண்ணியிருக்கிறார்கள். இப்போது சொல், நீ யார்? கல்யாண ராமனா, காந்தாமணியா?”

காந்தாமணி அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு, அடித் தொண்டையில் மெல்லக் கேட்டாள்; “நான் யார் என்று சொல்ல வேண்டுமா? சொல்லவா… சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா? கோபிக்க மாட்டீர்களே?”

ஹரி செயலிழந்தவன் போல், மிக அருகிலிருக்கும் அவள் முகத்தையே பார்த்தான்.

“ஏன் பதில் பேச மாட்டேன் என்கிறீர்கள்?”

காந்தாமணி அவன் தோள்களைப் பிடித்து உலுக்கிக் கேட்டாள்.

“நான் எதற்காகப் பேச வேண்டும்? நீதானே, ஏதோ சொல்கிறேன் என்றாய். கேட்க வேண்டியவன் ஊமையாகத்தானே இருக்க வேண்டும்?”

“ஊமையாக மட்டும் இருந்தால் போதாது. இனிமேல் நீங்கள் குருடாகவும் இருக்க வேண்டும். என் பெயர் காந்தாரி; ஆனால் தேவகாந்தாரி அல்ல!” புதிர் போட்டாற் போல் கூறியவள், விடுவிடென்று கீழே சென்று விட்டாள்.

ஹரி மட்டும் அந்தப் பெயரையே மனத்துக்குள் உருட்டிக் கொண்டிருந்தான். ‘காந்தாமணிக்கும் காந்தாரிக்கும் என்ன சம்பந்தம்’ என்று அவன் குழம்பிக் கொண்டிருந்த போது, கையில் அவள் கொடுத்த தபால் கார்டுடன், ஒரு காகிதம் இருப்பதைக் கண்டான். அதைப் பிரித்துப் பார்த்த ஹரி பிரமித்துப் போனான்.

‘காந்தாமணி—ஹரி’ என்று எழுதி, அதில் அவள் பெயரில் உள்ள ‘மணி’யையும், தன் பெயரிலுள்ன ‘ஹ’ வையும் நீக்கி, கூட்டியே அவள் தன் பெயரைக் காந்தாரி ஆக்கிக் கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது. ஆனால், அதே சமயம், தன்னைக குருடனாக, திருதராஷ்டிரனாக ஆக வேண்டுமென்று கூறியதின் உட்பொருளும் அவனுக்குப் புரிந்தது. காந்தாமணி போட்ட புதிரை அவிழ்த்து விட்டதில் அடைய வேண்டிய மகிழ்ச்சிக்குப் பதில், ஹரியின் உள்ளத்தில் கவலையே மேலோங்கியது.

இரவு மணி பத்தடித்தது. ஹரி கட்டிலில் படுத்திருந்தான். ஏனோ, அவனுக்குத் தூக்கமே வரவில்லை. நாளை இரவு அவன் சுவாமி மலையில் படுத்துக் கொண்டிருப்பான். பஞ்சணையும், கட்டிலும் இன்றோடு சரி. ஆனால், அந்த மன அமைதியும், நிறைவும், இந்த வசதிகளை அநுபவிக்கும் போது ஏன் ஏற்படவில்லை? குணமானதும் உடனேயாவது புறப்பட்டுப் போயிருக்க வேண்டாமா? அதன் பிறகும், கடிதம் எழுதிப் போட்டு விட்டு, அதிக நாள் ஏன் தங்க வேண்டும்?

அவன் மனத்தில் பயம் சூழ்ந்து கொண்டது. ஊருக்குப் போனதும், காயத்திரிக்கு என்ன பதில் கூறுவது? அவள் என்னுடைய இந்தச் செய்கையை ஆதரிப்பாளா? எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன்?’ என்று ஹரி தன்னையே கடிந்து கொண்டான் .

ஆனால், அதே சமயம், தான் மயக்கமுற்று விழுந்ததும், பணத்தைப் பணமென்று பார்க்காமல் செலவு செய்து, இரவு பகலாய் அருகில் இருந்து, கண் விழித்து உயிரூட்டிய காந்தாமணியையும், அவள் தாயையும் மீறிக் கொண்டு புறப்படவும், அவனால் முடியவில்லையே!

கீழே சுவரிலிருந்த பெரிய கடிகாரம் மீண்டும் ஒரு முறை ஒலித்தது. இரவு மணி பத்தரை. எதேச்சையாக நிலைப்படி பக்கம் திரும்பியவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

இருள் சூழ்ந்த அறையில், மங்கலாக ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்த விடிவிளக்கின் தடத்தில், ஓர் உருவம் நிழலாடுவது போல் இருந்தது.

ஹரி கூர்ந்து கவனித்தான். எழுந்து உட்கார்ந்து “யார்?” என்றான்.

காந்தாமணியின் செல்லப் பூனை, துள்ளி அவன் கட்டிலில் ஏறியது. “உஸ்! ஏன் சத்தம் போடுகிறீர்கள்?” என்று அவன் வாயைக் கையால் மூடினாள் காந்தாமணி.

“நீயா?”—ஹரியின் குரல் குழறிற்று.

வாயைப் பொத்திய கையை, அவள் எடுக்கவே இல்லை. கை மகிழம்பூவாக மணத்தது. ஹரியின் உடல் நடுங்கியது. மாடிப் படியை அவன் கண்கள் துழாவின.

இருளில், நிலவின் ஒளியாகத் தான் அருகில் இருக்கையில்; விளக்கைப் போட எழுந்தவனின் கையைக் கெட்டியாகப் பிடித்துத் தடுத்தாள் காந்தாமணி.

“கையை விடு” என்று உதறியவனின் குரல், மார்கழி மாதக் குளிரில், நடுக் குளத்தில் நிற்பவனைப் போல் நடுங்கியது.

“ஏன் இப்படிப் பயந்து சாகிறீர்கள்”

“ஆமாம், நீ ஏன் இப்போது, இங்கு வந்தாய்?”

“ஏன்? வரக் கூடாதா?”

“வரலாமா?”

“அப்படித்தான் வருவேன்.”

“ஓ! இது உன் வீடு என்பதனாலா?”

“இல்லை, நீங்கள் என்னுடையவர் என்பதனால்.”

ஹரிக்கு உடம்பெல்லாம் ‘குப்’பென்று வேர்த்தது.

“உடம்பு ஏன் இப்படி, அநாவசியமாக நடுங்குகிறது? நான் என்ன பேயா, பிசாசா?”

நனைந்து விட்ட அவனுடைய கழுத்தையும், நெற்றியையும் துடைக்கப் போன காந்தாமணியின் கையை, ஹரி தடுத்து நிறுத்தினான்.

‘பேய்க்கும், பிசாசுக்கும் நான் பயப்படுகிறவனல்ல. சுடுகாட்டின் பக்கத்தில்தான் என் வீடு’ என்று கூறப் போனவன், “இப்போது நீ போய் விடு காந்தாமணி, இல்லாவிட்டால், சத்தம் போட்டு அம்மாவைக் கூப்பிடுவேன்” என்றான்.

“அம்மாவை ஏன் கூப்பிட வேண்டும்? என்னை உங்களுக்குப் பிடிக்கவில்லையா?”

“………”

“ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள்? நான் உங்கள் கண்ணுக்கு அழகாக இல்லையா?”

“நான் அப்படியா சொன்னேன்?”

“பின் ஏன் என்னைப் ‘போ போ?’ என்று விரட்டியபடி இருக்கிறீர்கள்? நான் இங்கு வரக் கூடாதா?” அவள் அவனையே பார்த்துக் கேட்டாள்; கண்களிலே காமம் மின்னியது.

“வரலாம்; ஆனால் இந்த நிலையில் அல்ல; உன்னை நான் இப்படி எதிர் பார்க்கவில்லை.”

“என்ன செய்ய? நான் இந்நிலைக்கு ஆளாகி விட்டேன்.” காந்தாமணி அவன் தலையை வருடிக் கொண்டிருந்தாள்.

“அது உன்னுடைய குற்றம்.”

“இல்லை, என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்தவர் நீங்கள்தாம்.”

“நானா?”

“ஆமாம்.”

ஆச்சரியத்தினால், ஹரியின் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. காந்தாமணி ஹரியின் தோள்களைப் பற்றியவாறு கூறினாள்: “உங்களுடைய இசையைக் கேட்டு, என்றோ என் மனத்தைப் பறி கொடுத்திருந்தேன். ஆனால் இந்தச் சமீப காலத்தில், உள்ளத்தையும், குணத்தையும் கண்டு கொண்ட பின், இனி நீங்கள் இல்லாமல், நான் இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன். எனக்கு அந்தப் பாக்கியம் கிட்டுமா?”

காந்தாமணியின் பேச்சைக் கேட்கக் கேட்க, குடத்துள் விளக்காக அவனுள் அடங்கிக் கிடந்த ஓர் உணர்ச்சி, மலையின் உச்சியில் பற்றி எரியும் பேரொளியாகக் கிளம்பத் தலைப்பட்டது.

ஹரி மிகவும் அமைதியாகவே கூறினான்: “காந்தாமணி, நீ இப்போது, இங்கிருந்து போய் விடுவது நல்லது. எதையும், நாளை பேசிக் கொள்ளலாம்.”

“காலையில்தான் நீங்கள் ஊருக்குப் போய் விடப் போகிறீர்களே!” காலடியில் வந்து நின்ற பூனையைக் கையில் எடுத்து அணைத்துக் கொண்டவாறு கூறினாள்.

“அதற்காக?”

“எனக்கு இந்த ஓர் இரவுதான்; அதுவும் சில மணி நேரந்தான் சொந்தம். அதற்குள், என் மனத்தில் உள்ளதை எல்லாம் உங்களிடம் கூறா விட்டால், என் இதயமே வெடித்து விடும் போலிருக்கிறது. இந்த உலகில் நான் ஓர் அநாதை. எனக்கு வேறு யார் இருக்கிறார்கள்?” விக்கலும், விசும்பலுமாக இந்த வார்த்தைகளைக் கூறி முடிக்கு முன், காந்தாமணி சிறு குழந்தை போல் அழுது விட்டாள்.

கண்களிலிருந்து வழிந்த கண்ணீர், ஆவி நீரைப் போல், அவன் புறங்கையின் மேல் உருண்டோடியது.

“அழாதே, அழாதே. இப்போது என்ன நேர்ந்து விட்டது? உன் சத்தத்தைக் கேட்டு, அம்மா மேலே வந்து நிற்கப் போகிறாள். அப்புறம், எனக்கு இந்த வீட்டிலே வேலை இல்லை. அதற்குத்தான், இன்று நீ இப்படி ஆரம்பித்திருக்கிறாய்.”

“அப்படி ஒரு நாளும் நேராது.”

“நேரத்தான் போகிறது.”

“நேர்ந்தால். நானும் உங்களோடு வந்து விடுவேன்; என்னை ஏற்றுக் கொள்வீர்களா?”

“நிச்சயம் மாட்டேன்.”—இடியே தலை மேல் இறங்கி விட்டாற் போல், ஹரி நடுங்கியபடியே கூறினான்:

“ஆனால், அந்த நிலைமையை உனக்கு ஏற்படுத்துவதற்கு முன், நானே கீழே சென்று விடுகிறேன்” என்று எழுந்தவனைக் காந்தாமணி மறித்தாள்.

“நில்லுங்கள். நானே போய் விடுகிறேன். அநாவசியமாக, எனக்காக நீங்கள் ஏன் கீழே போக வேண்டும்? பயப்படாமல் நிம்மதியாகத் தூங்குங்கள். அம்மா வர மாட்டாள்; ஏனென்றால், அவள் கீழே இல்லை!” என்று கூறி, பதிலுக்குக் கூடக் காத்திராமல், விருட்டென்று செல்ல முயன்றவளை, ஹரி தடுத்து நிறுத்தினான்.

“என்ன? அம்மா இல்லையா?”

“இல்லை. பிருகதீசுவரர் கோயிலுக்குக் கதை கேட்கப் போயிருக்கிறாள். ஒரு மணிக்குத்தான் வருவாள்.”

“இதை ஏன் நீ சொல்லவில்லை?”

“என்னை நீங்கள் எதைச் சொல்ல விட்டீர்கள்; வந்ததிலிருந்து, ‘போ, போ’ என்று விரட்டிக் கொண்டிருந்ததைத் தவிர, இந்த உலகில் யாருக்குமே நான் வேண்டாதவளாகி விட்டேன்.”

“சொல்ல வந்ததை, நீ வருத்தப்படாமல் தாராளமாகச் சொல்; நான் கேட்கிறேன்.” ஹரி விளக்கைப் போட்டான்.

“இனி மேல், சொல்ல என்ன இருக்கிறது? சொல்ல வேண்டியதை நான் சொல்லி விட்டேன். நானே வெட்கத்தை விட்டு, மீண்டும் கூறுகிறேன்; என் ஆசை தவறாகக் கூட இருக்கலாம். ஆனால், என்னால் உங்களை மறக்க முடியவில்லை. முன்பு, உங்கள் இசையைப் பற்றி மட்டுமே அறிந்திருந்தேன். இப்போது, உங்களுடன் பழக நேரிட்ட சொற்ப நாட்களுக்குள், உங்கள் உயர்ந்த உள்ளம் என்னை வசீகரித்து விட்டது. என்னை மணந்து கொள்ள உங்களுக்குச் சம்மதமா?”

“உன் விருப்பம் இப்படி இருக்கும் என்று நான் எண்ணவில்லை காந்தாமணி. ஆனால், நான் அதை நிறைவேற்ற முடியாமைக்கு வருந்துகிறேன். எனக்கு முன்பே திருமணமாகி விட்டது.”

ஹரி வார்த்தைகளை முடிக்கவில்லை; காந்தாமணி பதறியே போனாள். “உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா?” வார்த்தைகள் ஆச்சரியத்தின் எல்லைக் கோட்டையே தாண்டி நின்றன.

“குழந்தைகள் கூட இருக்கின்றன. கர்த்தா ராகமே என் மனைவி. ஜன்ய ராகங்களே என் குழந்தைகள். இசையை ஆராதிப்பதைத் தவிர, எனக்குத் தனியாக வேறு வாழ்க்கை கிடையாது. நீ எண்ணுவது போல், எனக்கு எவ்வித அந்தஸ்தும் இல்லை. கூறப் போனால், உன்னை மனத்தாலும் நினைத்துப் பார்க்கிற அருகதை கூட எனக்கு இல்லை. என் புற அழகையும், புகழையும் பார்த்து நீ ஏமாந்து விட்டாய்; இவற்றுக்கெல்லாம் புறம்பே உள்ள, என் உண்மை உருவம் உன் கண்ணுக்குப் புலப்பட்டால் நீயல்ல, எந்தப் பெண்ணுமே என்னை ஏறெடுத்தும் பார்க்க மாட்டாள் என்றே எண்ணுகிறேன்.

“கூலிக்குக் காஸ் விளக்குத் தூக்கிப் பிழைக்கிற, ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்த நான், இசையில் பற்றுக் கொண்டதனால், சிற்றன்னையாலும், பெற்ற தந்தையாலும் கொடுமைக்கு ஆளானேன். வீட்டை விட்டே விரட்டப்பட்டு, உயிரை மாய்த்துக் கொள்ளக் காவிரித் தாயை சரணடைந்தேன். ஆனால், என்னை ஏற்றுக் கொள்ள விரும்பாத அன்னை, பாகவதரின் காலடியில் என்னை ஒதுக்கி விட்டாள். அன்று என்னை அன்போடு கை தூக்கி ஆதரித்தவர், இன்று வரை என்னை ஆட்கொண்டு வருகிறார்.

“இந்த உலகில், தாயும், தந்தையும், குருவும், தெய்வமும், அனைத்துமே எனக்கு அவர்தாம். நீ விரும்பி, ஏற்றுக் கொள்ள விழைகிற இந்த உடம்பு அவருடையது. உயிர் அவருடையது. இப்படி எதுவுமே எனக்கென்று சொந்தம் இல்லாத என்னிடம், எதை நீ யாசிக்கிறாய்? உனக்கு நான் எதைக் கொடுக்க முடியும்? உன்னை நான், மிகச் சிறந்த மாணவிகளில் ஒருத்தியாகத்தான் கருதி, மட்டற்ற மகிழ்ச்கி கொண்டிருக்கிறேன். உன் குரல் என்னைக் கவர்ந்தது. உன் புத்திசாலித்தனமும், சிறந்த இசைத் திறனும், என்னை உன்னிடம் இத்தனை தூரம் அன்பு செலுத்தி ஈடுபாடு கொள்ளச் செய்தன. இவையன்றி, வேறு எதைப் பற்றியும் நான் எண்ணியவனல்ல. நீயும் அநாவசியமாக, வேறு எதைப் பற்றியும் எண்ணாதே. ‘நீ என் மாணவி. நான் உன் குரு’ என்ற உறவைத் தவிர, வேறு எந்தப் பாத்தியதையும் நமக்குள் இருக்கக் கூடாது. அப்படியிருந்தால்தான், நான் இனியும் இந்த வீட்டுக்கு வருவதில் அர்த்தம் இருக்கிறது. ஒரு முடிவைத் தேர்ந்தெடுக்க வேண்டியது உன் பொறுப்பு” என்று ஹரி மூச்சு விடாமல் கூறிய போதே, காந்தாமணிக்குத் துக்கம் பீரிட்டுக் கொண்டு வந்தது. அவள் தன்னையும் மீறி அழுது விட்டாள். அதே சமயம், வாசற் கதவை யாரோ பலமாகத் தட்டுகிற சத்தம் கேட்கவே, கண்களைத் துடைத்துக் கொண்டு, அவள் வேகமாகக் கீழே இறங்கி ஓடினாள். பூனையும் அவளைத் தொடர்ந்தது.