உள்ளடக்கத்துக்குச் செல்

பெரியார் — ஒரு சகாப்தம்/பொதுத் தொண்டினை ஓர் கலையாகவே மாற்றிவிட்டார் பெரியார்

விக்கிமூலம் இலிருந்து

பொதுத் தொண்டினை
ஓர் கலையாகவே
மாற்றிவிட்டார் பெரியார்

"......பெரியார் அவர்கள் சொன்னார்கள் - நான் சொன்னதை யெல்லாம் அப்படியே நம்பாதீர்கள்: உங்கள் அறிவைக்கொண்டு சிந்தித்து, உங்களுக்குச் சரியென்று பட்டதை எடுத்துக்கொள்ளுங்கள்' என்றார்கள், ஏன் அப்படிச் சொன்னாரென்றால், சிந்திக்க ஆரம்பித்தால் அதில் எதுவும் சிறு தவறு கூட இருக்காது. அவர் சொன்னவையெல்லாம் உண்மை என்பது நன்றாகவே தெரியும். அதைக் கண்டுபிடிப்பதில் சிந்திப்பவனுக்குத் தைரியம் தானாகவே வந்துவிடும். அப்படிப்பட்ட பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்பிவருகிற பெரியார் அவர்கள் பல ஆண்டுகாலமாக எடுத்துச்சொல்லியும், இன்னமும் மக்கள் திருத்தாமலிருக்கிறார்களே என்ற கவலையால் கடுமையாக நம் இழிநிலையைச் சுட்டிக்காட்டுகிறார். பெரியார் அவர்கள் காலத்தில் அவரது கண்களுக்குத் தெரியுமாறு நாட்டில் இன்று பல சீர்திருத்தங்கள் நடைபெற்றிருக்கின்றன.

பெரியார் அவர்கள் தனது தொண்டின்மூலம் பொதுத்தொண்டினை ஒரு கலையாகவே மாற்றியுள்ளார்கள் ரயில் புறப்படுகிற நேரத்தில் ரயிலில்

போகவேண்டியவன் காப்பியை அருந்திக்கொண்டு மிக் சாவகாசமாக இருந்தால் பெரியவர்கள், நாலுவார்த்தை திட்டி, காப்பி பிறகு குடிக்கலாம்; வண்டி போய்விடும்; வண்டியிலேறு என்பதுபோல, "உலகம் இவ்வளவு முன்னேறியிருக்கிறது; நீ இன்னும் இப்படி இருக்கிறாயே?" என்ற கவலையால், கடினமாகவும், வேகமாகவும் வலியுறுத்தி நமக்குப் பகுத்தறிவைப்புகட்டுகின்றார்.

பெரியாரின் முதல்கவலை நம் சமுதாயத்தைப் பற்றியதே

எனக்கு நன்றாகத் தெரியும் : அவருக்குள்ளகவலை; 'இத்தனை ஆண்டுகள் பாடுபட்டும் இந்தச்சமுதாயம் இன்னும் இப்படியே இருக்கிறதே; இதை எப்படி முன்னுக்குக் கொண்டுவருவது? உலகமக்களோடு சமமாக்குவது?'என்கின்ற கவலை அவருக்கு நிறைய இருக்கிறது. பெரியார் அவர்கள் நினைப்பது போலில்லாவிட்டாலும் ஓரளவுக்காவது இன்று மாறுதல் ஏற்பட்டுத்தான் இருக்கிறது.

வேகமான மாற்றம் தேவை

இன்றைக்குச் சமூகம் நெருமளவுக்குத் திருந்தி இருப்பதை உணருவார்கள். 30,35 ஆண்டுகளுக்கு முன் நகராட்சி மன்றங்களில், தாங்கள் சைவர்கள், தாங்கள் வைணவர்கள் என்பதைக் காட்டிக்கொள்வதற்காக தங்களின் நெற்றியிலே பூச்சும் நாமமுமாகத் தான் எல்லோரும் வந்திருப்பார்கள். இன்றைக்கு 100க்கு 5 பேர் நெற்றியில்கூட குறிகள் காண்பது அரிது. அதுவும் வியர்வையினால் பாதி மறைந்தும் மறையாமலும் இருக்கிறது. இப்படிச் சமுதாயமானது வைதீகக்கட்டுக் குலைந்துகொண்டிருக்கிறது. பெரியாருக்கிருக்கிற கவலை இன்னும் வேகமாக மாற வேண்டும்; ஒரேயடியாக மாறவேண்டுமென்பதே! இந்தச் சமுதாயம் இன்னும் வேகமாக நடக்கவேண்டும்; முன்னேற்றமடையவேண்டும் என்பதேயாகும்.

முதன்முதல் பெரியார் பேச்சைக் கேட்ட நான்...

பெரியார் அவர்களின் கருத்துக்களை நான் முதன் முதல் 40 வருடங்களுக்கு முன் கேட்க நேர்ந்தபோது, 'என்ன இவர், இப்படிப் பச்சையாகப் பேசுகிறாரே' என்று நினைத்தேன். பின் அவரது கருத்துக்களை சிந்தித்து, அவரோடு தொண்டாற்றத் தொடங்கிய பிறகு அவர் பேசும்போது அதை விட்டுவிட்டாரே இதை விட்டுவிட்டாரே என்ற உணர்வு ஏற்பட்டது. அப்படித்தான் எல்லோருக்கும் முதலில் கசப்பாகத் தோன்றும்; சிந்தித்தால் நான் உண்மையை உணர முடியும். நான் பொறுப்பேற்றுள்ள தமிழ் நாட்டரசு மக்களிடையே பரவியிருக்கும் மூடப்பழக்க வழக்கங்களை நீக்கப்

பாடுபடும். நாம் மட்டுமல்லாமல், நகராட்சிகள், பஞ்சாயத்துக்கள், ஒன்றிப்புக்கள் பகுத்தறிவு வளர்வதற்குப் பாடுபட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அவைகள் கண்காட்சிகள் கடத்த வேண்டும். கண்காட்சியில் கடைத்தெருக் கடைகளை ஒரு பந்தலில் கொண்டு வந்து வைப்பதாக இருக்கக்கூடாது. உலகின் முன்னேற்றத்தையொட்டி கல்வி போக்குவரத்து—ஒழுக்கத்துறை—முன் நம்பிய கடவுள், இங்போது எப்படி அக்கடவுள்களை மக்கள் விட்டார்கள் என்பனவற்றை விளக்கக்கூடியதாக அமைய வேண்டும். பெரியார் அவர்கள் சுட்டிக்காட்டியதை கவனத்தில் கொண்டு நகராட்சியினர் தங்களால் இயன்ற அளவு தொண்டு வேண்டுகின்றேன்.'

[திருப்பத்தூர் நகராட்சி மன்றத்தின் 80-வது
ஆண்டு நிறைவு விழாவில் 13 12-67 அன்று
கலந்துகொண்டு ஆற்றிய உரையின் ஒரு பகுதி]



எதிர்காலம்தான் முக்கியம்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் எப்படி இருக்கும் என்ற சிந்தனையும், கண்ணும்கொள்ள எனக்கு விருப்பமேயொழிய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைப் பற்றிய அக்கறை கிடையாது.

(11-2-44ல் ஈரோடு
மாநாட்டில் பேசியது)