உள்ளடக்கத்துக்குச் செல்

பெரியார் — ஒரு சகாப்தம்/தமிழர் வாழ்வினை உயர்த்திய பேராசிரியர் பெரியார்!

விக்கிமூலம் இலிருந்து

தமிழர் வாழ்வினை உயர்த்திய
பேராசிரியர் பெரியார்!

......பெரியார் அவர்களின் பெயரால் கட்டப்பட்டுள்ள கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்கள் சிறந்த கல்வி பெறவேண்டும்; அதுவும் பகுத்தறிவு கல்வியாக இருக்கவேண்டும்; அதற்கு ஆசிரியர்கள், மாணவர்களுக்குப் பகுத்தறிவு கருத்துக்களை எடுத்துச் சொல்லவேண்டும். இதை அரை நூற்றாண்டாக எடுத்துச் சொல்லிவருபவர் பெரியாரவர்கள் ஆவார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன், என் திராவிடநாடு பத்திரிகையில் ஆண்டு மலருக்காக ஒரு கட்டுரை எழுதினேன். அதில் பல நாட்டுக் கவிஞர்கள் பல நாட்டுப் பேராசிரியர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, நமது தமிழகத்தின் முதல் பேராசிரியர் பெரியார்' என்று எழுதியிருக்கின்றேன். அவர் சமுதாயத்தில் செய்த தொண்டு மிக அதிகம். அவரது கருத்துக்களை, கொள்கைகளை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளுமளவிற்கு மனவளம் பெறவில்லை. நிலத்தினுடைய வளத்திற்குத் தக்கபடிதான் பயிர் வளர முடியும்: அதுபோல், மனவளம் பெற்றவர்களால்தான் பெரியாரின் கருத்துக்களை ஏற்க முடியும். ஆனால், அவரது தொண்டு வீண் போகவில்லை. பெரியார் அவர்களின் 30, 40 ஆண்டு தொண்டுகளுக்குப் பிறகு, புதிதாகக் கட்டப்பட்ட கோயில்கள் எத்தனை ? பள்ளிகள் எத்தனை? என்ற கணக்கில் பார்த்தால்; தமிழகத்தில் அறிவுப் புரட்சி நடைபெற்றிருப்பதும், வெற்றி பெற்றிருப்பதும் தெரியும். பெரியார் அவர்களின் பகுத்தறிவுப் பிரசாரத்தின் வலிமை எவ்வளவு என்பதும் தெரியும். அவர் பிரசாரத்தைத் துவங்கிய காலத்தில் பல வகுப்பார் படிப்பதற்கே அருகதையில்லாதவர்களென்று ஏட்டிலே எழுதிவைக்கப்பட்டதுமட்டுமல்ல, நாட்டிலே சொல்லப்பட்டும் வந்தது. அந்த வகுப்பாரே கூட நம்பினார்கள் நமக்குப் படிப்பு வராது என்று ! நாம் எதற்காகப் படிக்க வேண்டுமென்று அவர்கள் தெரியாமல் தடுமாறினார்கள். நான் கல்லூரியில் பொருளாதார 'ஆனர்சு' வகுப்பை எடுக்கச் சென்றபோது, அங்கு ஆசிரியராக இருந்த ஒரு பார்ப்பனர் இந்தப் பொருளாதாரப் பாடம் உனக்கு வருமா? உனக்கேன் இது ? வேறு ஏதாவது எடுத்துக்கொள்!' என்று கூறி, என் ஆர்வத்தைக் குறைக்கப் பார்த்தார். நான் பொருளாதாரத்தையே எடுத்துச் சிறந்த முறையில் தேர்வும் பெற்றேன்.

நான் 38 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக அரசின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு, அது எவ்வளவு உதவியாக இருக்கிறது என்பதை உணர்கிறேன்.

நமது இன மாணவர்கள்
திறமைக்கோர் எடுத்துக்காட்டு

நம் மாணவர்கள் ஒன்றும் அறிவில் குறைந்தவர்கள் அல்லர். அவர்களுக்குத் தகுந்த ஊக்கமும், வாய்ப்யும். கொடுத்தால், முற்போக்குச் சமுதாயத்தோடு போட்டி போடக்கூடிய அளவுக்கு முன்னேற்றத்தை அடைந்து விடுவார்கள். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. நான் ஆயிரமாயிரம் மேடைகளிலே பேசியுள்ளன், அதற்குமுன் தமிழகத்தில் தலைசிறந்த வக்கீல்கள் யார் என்றால், ஒரு அல்லாடி கிருஷ்ணசாமி; தலைசிறந்த டாக்டர் யார் என்றால், ஒரு ரங்காச்சாரி; சிறந்த நீதிபதி யார் என்றால், முத்துச்சாமி அய்யர்; சிறந்த நிர்வாகி யார் என்றால், கோபால்சாமி அய்யங்கார். இப்படித்தான் சொல்லக்கூடிய நிலையில் தமிழகம் இருக்கிறது என்று சொல்லி வந்தேன். இன்றைய தினம் எந்தத் துறையில் எடுத்துக்கொண்டாலும் இதுவரையில் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று இருந்தவர்கள் முதல் தரமான வக்கீல், தலைசிறந்த மருத்துவர் என்று இப்படித்தான் இருக்கிறார்கள். சர் .ஏ.ராமசாமி முதலியார் அரசியலில் இருந்து விரட்டப்பட்டார் என்றாலும் அய்தராபாத் சம்மந்தமாக ஏற்பட்ட ஒரு விவகாரத்தினைத் தீர்ப்பதற்கு அய். நா. வில் பேச, அவரை நேரு விரும்பி வேண்டிக்கொண்டார் என்றால், அவர் திறமையைக் கருதியே அல்லவா? சர்.ஏ.ராமசாமி அய். நா, சென்று வந்ததுமட்டுமல்ல; வென்றும் வந்தார். இப்படி நம்மிலே பல அறிஞர்கள், படித்தவர்கள் இருக்கிறார்கள். பிற்பட்ட இனம் என்று தவறான காரணங்களைக் காட்டி, அடக்கி வைக்கப்பட்டிருந்தவர்கள் இன்று உயர் பதவிகளில், உத்யோகங்களில் நல்ல செல்வாக்கோடு இருக்கின்றனர். இந்த அளவு அதிகப்பட வேண்டும். ஆகவே, இத்தகைய வளர்ச்சி பெரியார் அவர்களின் அரை நூற்றாண்டு இடைவிடாத் தொண்டினால் ஏற்பட்டது என்பதனை யாராலும் மறுக்க முடியாது.

சமுதாய புரட்சியே
பெரியாரின் முக்கிய பணி

பெரியார் அவர்கள் எடுத்துக்கொண்டிருக்கிற பணி சமுதாயத்தை மாற்றியமைக்கும் புரட்சிகரப் பணியாகும். அரசாங்கத்தால் மட்டுமே ஒரு சமுதாயத்தை அடியோடு மாற்றியமைத்துவிட முடியாது. அரசாங்கத்திற்கு அந்த வலிமை இல்லை. என்னிடம் ஒரு அரசு அளிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் அது ஒரு பெரிய சர்க்காருக்குக் கட்டுப்பட்டுக் காரியமாற்ற வேண்டிய ஒன்றே தவிர, தன்னிச்சையாக காரியமாற்ற முடியாது. இதனைப் பெரியாரவர்கள் நன்கு அறிவார்கள். உலகத்திலே எந்த நாட்டிலேயும் சர்க்காரால் சாதித்ததைவிட, தனிப்பட்டசீர்திருத்தவாதிகளாலேயே சமூகம் திருத்தப்பட்டிருக்கிறது.

பெரியார் அறிவுரைதான்
சமூகத்தை முன்னேற்றுகிறது

பெரியார் அவர்கள் தரும் பெரும். பேருரைகளால், அவருடைய சலியாத உழைப்பினால், அவர் தந்துள்ள பகுத்தறிவு: கருத்துக்களினால்தான் இன்னறய தினம் நம் சமூகம் மிக நல்ல அளவிலே முன்னேறிக்கொண்டு வருகிறது. அவருக்குத் திருப்தி ஏற்படுகிற வகையிலே இல்லாமலிருந்தாலும், என்னைப் போன்றவர்கள் இந்த அளவுக்குக்கூட மாறுவார்களா என்று எண்ணிப்பார்க்காத அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

முதியோரின் மூடச்செயல்

ஒருமுறை பெரியாரும் நானும் ஈரோட்டுக்குப் பக்கத்தில் ஈங்கூர் என்னும் கிராமத்தில் சுய மரியாதைப் பிரசாரத்திற்காகச் சென்றோம். அந்த ஊரில் இருந்த பெரிய மனிதர் ஒருவர், நாங்கள் பேசிய இடத்திற்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அந்த ஊரில் உள்ள மற்றவர்களைவிட்டு, நாங்கள் பேசிக்கொண்டிருக்கிற இடத்தில் காற்றடிக்கும் பக்கம் பார்த்துச் சாம்பலைத் தூவிக்கொண்டே யிருக்கச் சொன்னார்; பெரியாரும் பேசிக்கொண்டேயிருந்தார். நான் பேசும்போது குறிப்பிட்டேன், 'சாம்பலைத் தூவிக்கொண்டேயிருக்கிறீர்கள்; அது பெரியாரை என்ன செய்யும்? தாடியிலே படலாம், அது ஏற்கனவே வெள்ளை அதனால் எந்தக் கெடுதலும் வராது' என்று பேசினேன்.

இப்போது பெரியார் பேசும் பேச்சுக்களைக் கேட்டால் ஒருகணம் மயக்கம் வருகிறது. அடுத்து ஒருவரை யொருவர் சந்தித்துப் பேசும்போது நியாயம்தான், தேவைதான் என்ற எண்ணம்தான் வருகிறதே தவிர, அதைக் கேட்ட உடனே பதறிய காலம்; பகைத்து எழுந்த காலம்; 'இவர்களைப் படுகொலை செய்துவிடலாம்' என்று பேசிக்கொண்டிருந்த காலம்; இந்தக்காலங்கள் எல்லாம் அந்தக் காலங்களாகிவிட்டன. இப்போதிருக்கும் காலம் மிகப் பக்குவம் நிறைந்தகாலம். பெரியார் அவர்களின் கருத்துக்களைச் சட்ட மூலம் செயல்படுத்த, இந்த சர்க்காரின் அதிகார எல்லைக்குட்பட்டு என்னென்ன செய்ய முடியுமோ அவைகளைச் செய்ய, எப்போதும் தயாராக இருக்கிறேன்.

பெரியாரவர்கள் கருத்துக்களைச்
செயலாக்க நான் தயார்

பெரியார் அவர்கள் எடுத்துச் சொல்லுகிற கருத்துக்களையும் கொள்கைகளையும் பரப்புவதற்கு, செயலாக்குவதற்கு நான் தயாராக இருக்கிறேன். சர்க்காரிலே இருந்துகொண்டு ஏதோ சில காரியங்களைச் செய்யவா ? அல்லது விட்டுவிட்டு உங்களிடம் வந்து, தமிழகத்திலே இதே பேச்சை, பேசிக்கொண்டு உங்களோடு இருக்கவா ? என்பதை முடிவு செய்யும் பொறுப்பை பெரியாரவர்களுக்கே விட்டுவிடுகின்றேன். அவர்—என்னோடு வந்து, 'பணியாற்று' என்றால் —அதற்குத் தயாராக இருக்கின்றேன்.

சமுதாயப்பணிக்குப் பெரியாரைத் தவிர
வேறு ஆளே இல்லை

கோலாரிலே தங்கம் கிடைக்கிறது என்றால், பூமியை வெட்டியவுடன் அது பாளம் பாளமாகக் கிடைப்பதில்லை. கல்லை வெட்டி, அதைக் கறைத்து அறைத்துக் காய்ச்சிய பின்தான் மின்னும் தங்கத்தை எடுக்கின்றனர். அவ்வளவு கஷ்டப்படவேண்டியிருக்கிறது. அதுபோன்றுதான் சமுதாயச் சீர்திருத்தப்பணியாகும். பெரியார் அவர்களுக்கு நாம் தந்துள்ள சமுதாய சீர்திருத்த வேலை, அவர் இறுதி மூச்சுள்ளவரை செய்துதீரவேண்டிய வேலை. ஏனென்றால், அந்தப் பணியைச் செய்வதற்கு அவரைத் தவிர வேறு ஆள் இல்லை: நேற்று இருந்ததில்லை ; நாளைக்கு வருவார்களா என்பதும் அய்யப்பாட்டிற்குரியது. பெரியார் அவர்கள் செய்யும் வேலையில் மனநிம்மதியோடு இருக்கலாம். தமிழகம் இன்று எந்தப் புதுக்கருத்தையும் ஏற்றுக்கொள்வதற்கும், தாங்கிக்கொள்வதற்கும் தயாராக இருக்கிறது. அது செயல்வடிவத்திலே வருவதற்குச் சில ஆண்டுகள் பிடிக்கலாம். அவரது கருத்துக்களும், கொள்கைகளும் இன்னும் முற்றும் செயல்படவில்லை; அது செயல்வடிவத்திற்கு வருவதற்குப் பல ஆண்டுகள் பிடிக்கலாம். ஆனால், அது செயல்பட்டே தீரும். பெரியாரவர்கள் எடுத்துக்கொண்டிருக்கும் பணி மிகச் சிறந்த பணி: நம் நாட்டிற்கு மிகத் தேவையான பணி! அதனை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் பெரியாரவர்களுக்கே உண்டு. ஆனாலும் அவருக்கு ஓய்வு கொடுத்து அவரது வேலையை நாம் மேற்கொள்ள வேண்டும்.

பகுத்தறிவை வளர்க்கும்
படிப்பே தேவை

பள்ளிக்கூட ஆசிரியர்கள் பகுத்தறிவோடு சொல்லிக்கொடுப்பார்களேயானால், இன்னும் பத்து ஆண்டுகாலத்தில், நமது மாணவர்கள் மற்ற உலக மாணவர்களோடு போட்டிபோடக் கூடிய அறிவில் முன்நிற்கக்கூடிய அளவில் செய்துவிடமுடியும். நமது பள்ளிகளில், கல்லூரிகளில் சொல்லிக்கொடுக்கப்படுகிற கல்வி,அவன் கல்லூரியைவிட்டு வெளியேறும்போது வெறும் எழுத்தறிவுக்குப் பயன்படுகிறதே.தவிர, பகுத்தறிவுத் துறைக்குப் பயன்படக்கூடியதாக இல்லை. இப்போது நாட்டிலிருக்கின்ற கல்வித்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டியது அவசியம். அதுபற்றி கல்வி நிபுணர்களோடு கலந்து ஆலோசித்துப் புதுக்கல்வித்திட்டம் வகுக்க வேண்டும்.

பெரியாரால் கிடைத்த முதல் வரவேற்பு

இன்று பெரியாரவர்கள் எனக்குப் பொன்னாடை போர்த்தினார்கள். உண்மையாகவே இது எனக்குப்பெருமைதான். இதைவிட நான் பெருமையாகக் கருதுவது, பெரியார்வர்களுக்கு ஞாபகம் இருக்கிறதோ என்னவோ; எனக்கு ஈரோட்டில், முதன்முதலில் நகராட்சியில் வரவேற்புக் கொடுக்கச் செய்து சால்வை போர்த்தினார்கள்; அதை என் வாழ்நாளில் மறக்கமுடியாது. எனக்கு முதன்முதல் வரவேற்பு என்பதே ஈரோட்டில் நகராட்சியால் கொடுக்கப்பட்டதுதான். அதன்பின், இப்போது நிறைய வரவேற்புக் கொடுக்கிறார்கள் என்றால், அவை எனக்காக அல்ல, பதவிக்காகக் கொடுக்கப்படுவதேயாகும். பெரியாரவர்கள் இடையிலே சில ஆண்டுகள் எனக்குக் கொடுக்கவேண்டிய பரிசுகளையெல்லாம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார்கள்.

பெரியாரின் கட்டளைப்படியே
நான் நடப்பேன்

இன்றுமுதல் பெரியார் இருக்கிற இடத்தில் நானிருப்பேன்; நானிருக்கிற இடத்தில் அவருடைய கருத்திருக்கும். எனவே, இனிமேலும், பெரியாரும் அண்ணாதுரையும் ஒன்றுசேர்ந்துவிட்டார்கள் என்று சொல்வது அரசியல் உலகத்தில் யாரோ சிலருக்கு ஒரு வித சந்தேகத்தை உண்டாக்கி, அவர்கள் இருவரும் ஒன்றுசேர்ந்து விட்டார்களாமே என்கிற கலவரத்தையும் உண்டாக்கக் கூடுமாதலால், இனி அப்படிக் கூற வேண்டாமென நண்பர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

பெரியாரை நாம் கஷ்டப்படுத்திவிட்டோம்

நாம், பெரியாரை வெகுவாகக் கஷ்டப்படுத்தி விட்டிருக்கிறோம். அவர் இப்போது ஓய்வெடுத்துக்கொண்டு கட்டளையிடவேண்டிய வயது. அவரது தொண்டினை நாம் மேற்கொள்ளவேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலை நமக்கு ஏற்படவில்லை. ஆனதனாலே நாம் அவருக்குக் காட்டவேண்டிய நன்றியைக் காட்டக் கடமைப்பட்டவராவோம். நன்றியைக் காட்டிக்கொள்வதில் நான் முதல்வனாக இருப்பேன் என்பதையும் இச்சமயத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

[19-12-67. அன்று நாகரசம்பட்டியில்,
புதிதாகக் கட்டப்பெற்ற 'பெரியார் ராமசாமி
கல்விநிலைய' த்தினைத் திறந்துவைத்து ஆற்றிய உரையின் ஒருபகுதி]