பெருங்கதை/3 8 பாங்கற்கு உரைத்தது

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
  • பாடல் மூலம்

3 8 பாங்கர்க்குரைத்தது

பதுமாபதியின் நிலை[தொகு]

வைகிந காலை வத்தவ ரிறைவனும்
பைவிரி யல்குற் பதுமா பதியும்
கண்ணுறக் கலந்த காம வேகம்
ஒண்ணிறச் செந்தீ யுண்ணிறைத் தடக்கிய
ஊதுலை போல வுள்ளகங் கனற்ற 5
மறுத்தவற் காணும் குறிப்புமனத் தடக்கிப்
பண்கெழு விரலிற் கண்கழூஉச் செய்து
தெய்வம் பேணிப் பையென விருந்தபிற்

செவிலி முதலியோர் பதுமாபதியிடம் கூறல்[தொகு]

பாசிலைச் செவிலியும் பயந்த தாயும்
நங்கை தவ்வையும் வந்தொருங் கீண்டிப் 10
படிநலப் பாண்டியங் கடிதூர்ந் துராஅய
வையத் திருப்ப மருங்குனொந் த்துகொல்
தெயவத் தானத்துத் தீண்டிய துண்டுகொல்
பாடகஞ் சுமந்த சூடுறு சேவடி
கோடுயர் மாடத்துக் கொடுமுடி யேற 15
அரத்தக் கொப்புளொடு வருத்தங் கொண்டகொல்
அளிமலர்ப் பொய்கையுட் குளிர்நீர் குடையக்
கருங்கண் சிவப்பப் பெருந்தோ ணொந்தகொல்
யாதுகொ னங்கைக் கசைவுண் டின்றெனச்
செவ்வி யறிந்து பையெனக் குறுகி 20
வேறுபடு வனப்பின் விளங்கிழை வையம்
ஏறின மாகி யிளமரக் காவினுட்
சேறு மோவெனச் சேயிழைக் குரைப்ப

பதுமாபதி கூற்று[தொகு]

முற்ற நோனபு முடியு மாத்திரம்
கொற்றக் கொமான் குறிப்பின் றாயினும் 25
வினவ வேண்டா செலவென விரும்பி
மெல்லென் கிளவி சில்லென மிழற்றிப்
புனைமாண் வையம் பொருக்கெனத் தருகென
வினைமா ணிளையரை யேவலின் விரும்பி
நாப்புடை பெயரா மாத்திரம் விரைந்து 30
காப்புடை வையம் பண்ணி யாப்புடை
மாதர் வாயின் மருங்கிற் றருதலின்

பதுமாபதியின் செயல்[தொகு]

கோதை யாயம் பரவ வேறித்
திருமலர் வீதி போதந் தெதிர்மலர்க்
காவினுட் பொலிந்த வோவக் கைவினைக் 35
கண்ணார் மாட நண்ணுவன ளிழிந்து
தேனிமிர் படலைத் திருவமர் மார்பனைத்
தானினி தெதிர்ந்த தானத் தருகே
அன்று மவாவி நோக்கின ணன்றியல்

உதயணன் பதுமாபதியாகிய இருவர் செயல்[தொகு]

இருவரு மியைந்து பருவரல் காட்டிப் 40
புறத்தோர் முன்னர்க் குறிப்புமறைத் தொடுக்கிக்
கருங்கண் டம்மு ளொருங்குசென் றாட
வந்தும் பெயர்ந்து மன்றைக் கொண்டும்
காலையும் பகலு மாலையும் யாமமும்
தவலருந் துன்பமொடு கவலையிற் கையற் 45
றைந்நாள் கழிந்த பின்றைத் தன்மேல்
இன்னா வெந்நோய் தன்னமர் தோழிக்
குரைக்கு மூக்கமொடு திருத்தகு மாதர்
வான்றோய் மண்டபம் வந்தொருங் கேறித்
தேன்றோய் கோதை சில்லென வுராஅய் 50
இடுகிய கருங்கண் வீங்கிய கொழுங்கவுட்
குறுகிய நடுவிற் சிறுகிய மென்முலை
நீண்ட குறங்கி னிழன்மணிப் பல்கலம்
பூண்ட வாகத்துப் பூந்துகி லல்குல்
அயிரா பதியெனுஞ் செயிர்தீர் கூனியைத் 55
தடந்தோண் மாதர் கொடுங்கழுத் தசைஇ
நின்ற செவ்வியு ளொன்றா ரட்ட
வாமான் றிண்டேர் வத்தவர் பெருமகன்
கோமாட் கோடிய குறிப்பின னாகித்
திகழ்தரு மதியிற் றிருமெய் தழீஇ 60
வெள்ளைச் சாந்தின் வள்ளி யெழுதிய
வயந்தக குமரன் வரைபுரை யகலத்
தசைந்த தோள னாகி யொருகையுட்
டாரகம் புதைத்த தண்மலர் நறும்பைந்
தூழறிந் துருட்டா வொருசிறை நின்றுழிப் 65
பந்தவன் செங்கை பயில்வது நோக்கி

பதுமாபதி அயிராபதியை வினவல்[தொகு]

அந்தண வுருவொடு வந்தவ ணின்றோன்
யார்கொ லவனை யறிதி யோவெனப்
பாவை வினவப் பணிந்தவ ளுரைக்கும்

அயிராபதியின் விடை[தொகு]

அடிகள் போக யானு மொருநாள் 70
ஒடியாப் பேரன் புள்ளத் தூர்தர
ஆண முடைத்தாக் கேட்டனெ னவனை
மாணக னென்போன் மற்றிந் நாடு
காண லுறலொடு காதலின் வந்தோன்
மறையோம் பாளன் மதித்தன னாகித் 75
தானுந் தோயருந் தான நசைஇ
நின்றனர் போகா ரென்றவட் குரைப்பப்

பதுமாபதி அயிராபதியிடம் கைறல்[தொகு]

பல்வகை மரபிற் பந்துபுனைந் துருட்டுதல்
வல்லவன் மற்றவன் கைவயிற் கொண்டது
புறத்தோ ரறியாக் குறிப்பி னுணர்த்தி 80
நமக்கு வேண்டென நலத்தகை கூறக்

அயிராபதி உதயணனிடம் குறிப்பித்தல்[தொகு]

கண்ணினுங் கையினுங் கண்ணிய துணர்த்திப்
பெருந்தகை யண்ண றிருந்துமுக நோக்கி
நீன்கைக் கொண்ட பூம்பந் தென்கை
ஆய்வளைத் தோளிக் கீக்க வென்ன 85
அங்கை யெற்றிச் செங்கணிற் காட்டிய

உதயணன் செயல்[தொகு]

கூன்மகள் குறிப்புத் தான்மனத் தடக்கித்
தன்வயிற் றாழ்ந்த தைய னிலைமை
இன்னுயிர்த் தோழர்க் கிசைத்தல் வேண்டி

உதயணன் கைற்று[தொகு]

மந்திரச் சூழ்ச்சியுள் வெந்திறல் வீரன் 90
வள்ளிதழ்க் கோதை வாசவ தத்தையை
உள்வழி யுணரா துழலுமென் னெஞ்சினைப்
பல்லிதழ்க் கோதைப் பதுமா பதியெனும்
மெல்லியற் கோமகண் மெல்லென வாங்கித்
தன்பால் வைத்துத் தானுந் தன்னுடைத் 95
திண்பா னெஞ்சினைத்திரிதலொன் றின்றி
என்னுழை நிறீஇத் திண்ணிதிற் கலந்த
காம வேட்கைய டானெனக் கூற

இசைச்சன் மறுத்தல்[தொகு]

ஈங்கிது கேட்கென விசைச்ச னுரைக்கும்
மன்னிய விழுச்சீர் மகத்தது மகளிர் 100
நன்னிறை யுடையர் நாடுங் காலை
மன்னவ னாணையு மன்ன தொன்றெனாக்
கன்னி தானுங் கடிவரை நெஞ்சினள்
வேட்டுழி வேட்கை யோட்டா வொழுக்கினள்
அற்றன் றாயிற் கொற்றங் குன்றித் 105
தொடிகெழு தோளி சுடுதீப் பட்டெனப்
படிவ நெஞ்சமொடு பார்ப்பன வேடம்
கொண்டான் மற்றவன் கண்டோர் விழையும்
வத்தவர் கோமா னென்பதை யறிவோர்
உய்த்தவட் குரைப்ப வுணர்ந்தன ளாகிப் 110
பெறுதற் கரிய பெருமக னிந்நகர்
குறுக வந்தனன் கூறுதல் குணமென
நெஞ்சுநிறை விட்டன ளாகு மன்றெனின்
ஈன மாந்த ரொப்ப மற்றிவர்
தான மேற்ற றகாஅ தென்றுதன் 115
நுண்மதி நாட்டத்து நோக்கின ளாமது
திண்மதித் தன்றெனத் திரிந்தவன் மறுப்ப

மற்றைத் தோழரும் மறுத்துக் கூறல்[தொகு]

ஒருப்பா டெய்தி யுற்றவ ரெல்லாம்
குறிப்பின் வாரா நோக்கெனக் குருசிற்கு
மறுத்த வாயிலொடு வலிப்பன ராக 120

உதயணன் கூற்று[தொகு]

உயிரொன் றாகி யுள்ளங் கலந்தவள்
செயிரின் றாகிய செங்கடை நோக்கம்
உணங்கெனக் காயிற் றவட்குமென் னோக்கம்
அத்தொழி னீர்த்தென வெய்த்தன னென்ன
உரைப்பத் தேறா வுயிர்த்துணைத் தோழரைத் 125
திருச்சேர் மார்பன் றேற்றுதல் வேண்டி
மலரினு மரும்பினுந் தளிரினும் வனைந்த
சந்தக் கண்ணிதன் சிந்தை யறியப்
பூக்குழை மாதர் நோக்கிடை நோக்கிப்
படுகாற் பொய்கைப் பக்க நிவந்த 130
நறுமலர்ப் பொதும்பர் நாற்றுவனம் போகி
மறைந்தன மிருந்த காலைமற் றவளென்
கண்ணி கொள்ளிற் கலக்கு முள்ளம்
திண்ணி தாகுத றெளிமி னீரென
மன்னவ னுரைத்தனன் மற்றவர்க் கெடுத்தென் 135

3 8 பாங்கர்க்குரைத்தது முற்றிற்று.