மகாபாரதம்-அறத்தின் குரல்/3. சிவதரிசனம்

விக்கிமூலம் இலிருந்து

3. சிவதரிசனம்

கைலாச சிகரத்தின் உச்சியிலிருந்து மவர்களைக் கொய்யவும் நீராடுவதற்காகவும் மலைச் சாரலுக்கு வந்து செல்லும் உமாதேவியின் தோழிப் பெண்கள் ஒருநாள் அர்ச்சுனன் தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு விட்டனர். அவர்கள் மூலமாகச் செய்தி உமாதேவிக்கு எட்டியது. உமாதேவி சிவபெருமானோடு உரையாடிக் கொண்டிருக்கும்போது அர்ச்சுனன் தவம் செய்து கொண்டிருக்கும் செய்தியை அவருக்குக் கூறினாள். மகேஸ்வரனாகிய சிவபெருமான் அதைக் கேட்டுப் புன்முறுவல் பூத்தார். அவருடைய முகமண்டலத்தில் புதியதோர் விகசிப்புத் தோன்றியது. அவருடைய முகமலர்ச்சிக்கும் சிரிப்புக்கும் அர்த்தம் தெரிந்து கொள்ள விரும்புகின்ற பாவனையில் அவரை ஏறிட்டுப் பார்த்தாள் உமாதேவி.

“தேவி! அர்ச்சுனன் இங்கு வந்து பல நாட்களாகத் தவம் செய்து கொண்டிருப்பதை நான் முன்பே அறிவேன். துரியோதனாதியர்கள் கொடுமை செய்து பாண்டவர்களை யாவும் இழந்து காட்டிற்கு வரும்படி செய்து விட்டார்கள். வனவாசம் முடிந்ததும் துரியோதனாதியர்களோடு போர் செய்வதற்காக பாசுபதாஸ்திரம் பெற விரும்பியே அர்ச்சுனன் என்னை நோக்கித் தவம் செய்கிறான். அவனுக்கு அருள் செய்ய வேண்டுமென்று சமயத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தேன்."

“ஏன்? சமயம் என்ன? இப்போதே அந்த அருளைச் செய்து விட்டால் போகிறது.”

“ஆமாம்! ஆமாம் அருள் செய்ய வேண்டிய சமயம் இப்போதே வந்துவிட்டது. தவம் செய்து கொண்டிருப்புவனைக் கொன்று தொலைத்து விடுவதற்காக முகன் என்னும் அசுரனை ஏவி விட்டிருக்கிறான் துரியோதனன். நாம் போனால்தான் பக்தனை உயிரோடு காப்பாற்றலாம்.”

“புறப்படுங்கள்! இப்போதே போகலாம்.”

“போக வேண்டியதுதான். ஆனால் ஒரு நிபந்தனை தேவி!”

“என்ன நிபந்தனை?”

“நான் வேடனைப் போன்ற மாற்றுருவத்திலும் நீ வேட்டுவச்சியைப் போன்ற மாற்றுருவிலுமாகச் செல்ல வேண்டும்.”

“ஏன் அப்படி?”

“அர்ச்சுனனை எதிர்க்க வந்திருக்கும் முகாசுரனைக் கொன்று பின்பு அவன் தவ வலிமையைச் சோதித்த பின் அருள் செய்ய மாறுவேடத்தில் போவதே வசதியாக இருக்கும்.”

“சரி, அவ்வாறே போகலாம்”

உமை சம்மதித்தாள். மறுவிநாடி கைலாச சிகரத்திலிருந்து ஒரு வேடனும் வேட்டுவச்சியும் மலைச்சாரலை நோக்கி இறங்கிச் சென்றார்கள். வேடனாகச் சென்ற சர்வேசுவரன் வில்லும் அம்பும் ஏந்தியிருந்தான். வேட்டுவச்சியாகச் சென்ற பராசக்தி முருகனைக் குழந்தையாக்கி இடுப்பிலே தூக்கிக் கொண்டு சென்றாள். சிவகணங்கள் வேட்டுவக்குலத்து மக்களைப் போல மாறி அவர்களைப் பின்பற்றின. அவர்கள் கைலாச சிகரத்தைக் கடந்து கீழே அர்ச்சுனன் தவம் செய்து கொண்டிருந்த இடத்தை வந்தடைந்த போது, பன்றி வடிவில் வந்திருந்த முகாசுரன் அர்ச்சுனன் மேலே தாவிப் பாய்ந்து அவனைக் கொல்ல முயன்று கொண்டிருந்தான். தியானத்தில் ஆழ்ந்திருந்த அர்ச்சுனன் விழித்துக் கொண்டு பன்றி மேல் அம்பு எய்தான். அவன் எய்த அம்பு பன்றியைத் துளைப்பதற்கு முன்பே வேடனாக வந்திருந்த சிவபெருமானின் அம்பு பன்றியைத் துளைத்து விட்டது. இரண்டாவதாக அர்ச்சுனனின் அம்பும் துளைத்தது. இரண்டு அம்புகளுமாகச் சேர்ந்து பன்றியை இறக்கச் செய்து விட்டதென்னவோ உண்மை.

ஆனால் சிவனுடைய ஏவலின்படி சோதனைக்காக அர்ச்சுனனைச் சிவ கணங்கள் வம்புக்கு இழுத்தன. “எங்கள் தலைவன் அம்பு எய்தபின் செத்த பன்றியின் மேல் புதிதாக அம்பு தொடுப்பது போல நீயும் அம்பு தொடுக்கலாமா? அப்படிச் செய்வது சுத்த வீரனுக்கு அழகல்லவே?”

“தவறு நீங்கள் உங்கள் தலைவன் பன்றியை எய்ததாகக் கூறுவது பொய். உங்கள் தலைவன் எய்யத் தொடங்கு முன்பே என் வில்லிலிருந்து அம்பு புறப்பட்டு விட்டது.” அர்ச்சுனன் விடவில்லை! பன்றி தன் அம்பினாலேயே இறந்ததென்றும் தானே முதலில் எய்ததாகவும் சாதித்தான்!

சிவபெருமானும் சிவகணங்களும் அதை வலிந்து மறுத்தனர். இறுதியில் வேடனாக வந்திருந்த சிவபெருமானுக்குக் கோபம் வந்து விட்டது. “உண்மையில் நீ ஒரு தபஸ்விதானா? விருப்பு வெறுப்பற்றுத் தியானத்தில் ஆழ்ந்திருக்கும் உனக்கு ஒரு பன்றியின் உயிரைக் கொல்லும் ஆசை ஏற்படலாமா? நீ தவம் செய்வது போல் நடிக்கிறாய். உண்மையில் நீ ஒரு அயோக்கியன். நீ இங்கே பொறுமையோடு தவம் செய்வது போல் நடிப்பது யாரைக் கெடுப்பதற்கோ? உன்னைப் பற்றிய விபரங்களை எல்லாம் சொல்லவில்லை என்றால் நீ என்னிடமிருந்து உயிரோடு தப்ப முடியாது!”

“வீண் கோபம் கொண்டு துள்ளாதே வேடனே! நான் யார் என்பதைச் சொன்னால் நீ இங்கே நிற்பதற்கே பயந்து என்னை வணங்கி விட்டு ஓடிப் போவாய். ஜாக்கிரதை!"

“சும்மா மிரட்ட வேண்டாம். நான் பேடியல்ல ஓடிப் போவதற்கு நீ யாரென்று சொல்!”

“சொல்லி விடட்டுமா ! நெஞ்சத்தை உறுதியாக்கிக் கொண்டு கேள். நான்தான் அர்ச்சுனன். இந்த உலகத்தில் வில் என்று ஒரு கருவி பிறந்திருக்கிறதே, அதை ஆள்வதற்கென்றே பிறந்த வில்லாளன்.”

“ஓகோ! அப்படியா? இப்பொழுது இதைக் கேள்விப் பட்ட பிறகுதான் என் கோபம் இரண்டு மடங்காகிறது. நீதான் அந்த அர்ச்சுனனா? அப்படிச் சொல்! எங்கள் குலத்தைச் சேர்ந்த ஏகலைவன் கட்டை விரலை இழக்கக் காரணமாக இருந்த துரோணரின் சீடன் இல்லையா நீ? மதிப்பிற்குரிய துருபத மன்னனைத் தேர்க்காலில் கட்டி இழுத்து வந்து அவமானம் செய்தது, காண்டவத்தில் தீ எரிந்தபோது அங்கு வசித்த பல வேடர்களைத் தீயில் எரிந்து அழிந்து போகுமாறு செய்தது, ஒரு பார்ப்பானுடைய பசுக்களைக் கவர்ந்ததற்காகப் பல வேடர்களைத் துன்புறுத்தியது, ஆகிய தீமைகளை யெல்லாம் கூசாமல் செய்த கொடியவன் நீதானா? நீ பிறந்த நாளிலிருந்து இன்று வரை வேடர் குலத்துக்கு எவ்வளவு தீமைகள் புரிந்திருக்கிறாய்? இன்று சரியாக என்னிடம் மாட்டிக் கொண்டாய்? உன் உயிரை வாங்காமல் விடப் போவதில்லை. ஆண்மையிருந்தால் என்னோடு போருக்கு வா! பார்க்கலாம்” என்று வேடன் ஆத்திரத்தோடு வில்லை வளைத்தான்.

கையில் வில் வளைந்தது. முகத்தில் புருவங்கள் வளைந்தன. அர்ச்சுனனுக்கும் சினம் வந்து விட்டது. அவனுக்கும் போர் செய்து இரண்டிலொன்று பார்த்துவிட விருப்பம் தான். அவனுடைய வில்லும் வளைந்தது. இருவரும் ஒருவர் மேல் ஒருவராக மாற்றி மாற்றி அம்பு மழை பொழிந்தார்கள். தொடக்கத்தில் வேடன் மேல் அர்ச்சுனன் செலுத்திய அம்புகளை எல்லாம் அவன் சாமார்த்தியமாகத் தடுத்து விட்டான். ஆனால் வேடன் தன் மேற்செலுத்திய அம்புகனை அர்ச்சுனனால் பொறுத்துக் கொள்ள முடிந்ததே ஒழியத் தடுக்க இயலவில்லை. அர்ச்சுனனின் சாபம் தோள்களும் இரத்தக் காடாசிவிட்டது. தன் முன் நின்று சோதனைக்காகச் சிவபெருமான் போர் என்கின்ற திருவிளையாடலைப் புரிகிறான் என்பதை அறியமுடியாத அர்ச்சுனன் வேடன் மேல் அளவற்ற ஆத்திரமும் மனக் கொதிப்பும் கொண்டான். ஆத்திரத்தோடும் மனக்கொதிப் போடும் அவள் செலுத்திய அம்பு வேடனாக இருந்த சிவபெருமானின் முடியைத் துளைத்தது. முடிந்த சடை மறையில் கங்கை முகிழ்த்துச் சிதறியது. சடைகள் தூள் பரந்தன். சிவகணங்களுக்கு இதைக் கண்டு மிகவும் செதுப்பு ஏற்பட்டுவிட்டது. எல்லோருமாகச் சேர்ந்து வில்லை எடுத்துக் கொண்டு அர்ச்சுனன் மேல் பாய்ந்தார்கள். நல்லவேளையாக வேடன் அவர்களுடைய சினத்தை அடக்கினான், மறுபடியும் இருவருக்குமிடையே தனிப்பட்ட முறையில் விற்போர் ஆரம்பமாயிற்று போர் வெற்றி தோல்வி காண இயலாத சமநிலையில் கொடூரமாக நிகழ்ந்து கொண்டிருந்தது. இறுதியில் வேடன் குறி வைத்து எய்த அம்பு ஒன்று அர்ச்சுனனுனடய வில்லின் நாணை அறுத்து வீழ்த்தி விட்டது. விசயன் வெறுங்கையனானான். வில் நாணறுந்து திகைத்த அர்ச்சுனன் கையிலிருந்த வில் தண்டினால் வேடன் மேல் தன் பலங்கொண்ட மட்டும் ஓங்கி ஓர் அடி அடித்து விட்டான்.

வேடனாக இருந்த சிவபெருமான் அடி பொறுக்க முடியாமல் மயங்கி விழுந்தவர் போல மூர்ச்சையற்றுக் கீழே விழுந்து விட்டார். சர்வேசுவரானாகிய அவர் மேல் பட்ட அந்த அடி உலகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளின் மேலும் பஞ்ச பூதங்களின் மேலும், அவற்றாலாகிய பிரகிருதியின் மேலும் ஒருங்கே விழுந்தது போல வலித்தது, வேடன் மூர்ச்சை தெளிந்து மறுபடியும் எழுந்தான். ஆத்திரத்தோடு அர்ச்சுனனை மற்போர் செய்வதற்கு அழைத்தான். அர்ச்சுனன் இணங்கினான், வேடனுக்கும் அர்ச்சுனனுக்கும் மற்போர் நிகழ்ந்தது. திக்குத் திகந்தங்களெல்லாம் வெடி படுதாளத் திடிபடும் ஓசையென ஒலியெழுந்து அடங்கக் கோரமாகப் போர் செய்தனர். அர்ச்சுனனுடைய குத்துக்கள் வேடன் மேலும் வேடனுடைய குத்துக்கள் அர்ச்சுனன் மேலுமாக மாறி மாறி விழுந்தன. வேடன் தன் வலிமையெல்லாந் திரட்டி அர்ச்சுனனைக் கைகளால் தூக்கி மேலே எறிந்தான். வானத்தில் வெகு தூரம் தூக்கி எறியப்பட்டு கீழே விழுந்த அர்ச்சுனன் உணர்வு தெளிந்து கண் விழித்த போது அவனருகே வேடனில்லை. வேட்டுவச்சியும் இல்லை. வேடர் படைகளும் இல்லை. சிவகணங்கள் புடை சூழ கைலாசபதியாகிய சிவபெருமான் உமாதேவியாருடன் புன்முறுவல் பூத்துக் காட்சியளித்தார்.

அர்ச்சுனன் பக்திப் பரவசத்தோடு எழுந்திருந்து வலம் வந்து வணங்கி அவர்களை வழிபட்டான். ‘தன் தவம் வெற்றியடைந்து விட்டது’ -என்ற எண்ணம் அவனுக்குக் களிப்பைக் கொடுத்தது. சிவபெருமானையும் உமாதேவி யாரையும் நோக்கி மெய் புளகாங்கிதம் அடைய விழிகள் ஆனந்தக் கண்ணீர் சொரிய, நோக்கிய கண் இமையாமல், கூப்பியகை தளராமல் அவன் நின்றுக் கொண்டே இருந்தான். சிவபெருமான் மலர்ந்த முகத்தோடு அவனருகில் வந்தார். மகனை அன்போடு தழுவிக் கொள்ளும் தந்தையைப் போல அவனைத் தழுவிக் கொண்டார்.

“அன்பனே! துரியோதனாதியர்கள் உன்னைக் கொல்வதற்காக ஏவிவிட்ட ‘முகன்’ -என்ற பன்றியை அழித்து உன்னைக் காப்பாற்றி, நீ வேண்டும் வரத்தை அளிப்பதற்காகவே வேடனாக மாறி வந்தேன். நீயும் நானும் விற்போரும் மற்போரும் செய்து திறமையைப் பரிசோதித்துக் கொண்டோம். அஞ்சாமை நிறைந்த உனது வீரத்தையும் தவ வலிமையையும் பாராட்டுகிறேன். உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்."

“அடியேன் விருப்பம் தேவரீருக்குத் தெரியாதது அல்ல. ‘பாசுபதாஸ்திரம்’ பெறுவதற்காகவே இவ்வரிய தவ முயற்சியை மேற் கொண்டேன்.”

சிவபெருமான் பாசுபதாஸ்திரத்தையும் அதனைப் பிரயோகிப்பதற்குரிய முறை நூல்களையும் அர்ச்சுனனுக்குக் கொடுத்தார். அர்ச்சுனன் சர்வாங்கமும் பூமியில் படுமாறு கீழே விழுந்து வணங்கினான். சிவபெருமான் அவனுக்கு எல்லா நலன்களும் உண்டாகுமாறு ஆசி கூறி மறைந்தார்.

அர்ச்சுனனுக்கு சிவபெருமான் காட்சியளிக்கும்போது தானும் தன் பரிவாரங்களோடு அங்கே வந்திருந்தான் இந்திரன். சிவபெருமான் வரங்கொடுத்து விட்டுச் சென்றதும் தேவர்கோனாகிய இந்திரன் அர்ச்சுனனை அணுகி, “மகனே! சோதனைகளெல்லாம் கடந்து உன் தவத்தில் வெற்றி பெற்று விட்டாய். அது கண்டு மிகவும் மகிழ்கிறேன். நீ சில நாட்கள் எங்களுடனே வந்து விருந்தினனாகத் தங்கியிருத்தல் வேண்டும். என் வேண்டுகோளை மறுக்கக்கூடாது” என்றான். அர்ச்சுனன் சம்மதித்து அவனோடு வானுலகுக்குப் புறப்பட்டான். தேவருலகில் அர்ச்சுனனின் விதி அவனுக்காக ஊர்வசி உருவத்தில் காத்திருந்தது போலும். இந்திரன் அர்ச்சுனனுடைய வரவைக் கொண்டாடுவதற்காகத் தன் உரிமை காதல் மகளிருள் ஒருத்தியாகிய ஊர்வசியின் நாட்டியத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான். ஊர்வசியின் நாட்டியத்தைக் காண்பதற்காக வந்து வீற்றிருந்த அர்ச்சுனனின் மோகனத்தோற்றத்தைக் கண்டு அந்த நடனராணியே அளவற்ற மையல் கொண்டு விட்டாள். நாட்டியம் முடிந்ததும் தான் தனியாகத் தங்கியிருக்கும் மாளிகைக்குச் சென்று விட்டான் அர்ச்சுனன். அவன்மேற் கொண்ட மையலை அடக்க முடியாத ஊர்வசி தனியாக அவனைச் சந்தித்து, தன் மோகத்தை வெட்கமின்றி வெளியிட்டாள். இச்சையை நிறைவேற்றும்படி கேட்டாள். அர்ச்சுனன் திடுக்கிட்டான்.

“அம்மணி! நீ எனக்கு தந்தை முறையுடைய இந்திரனின் காதல் கிழத்தி. உன்னை நான் என் தாயாக எண்ணுகிறேன்” என்று கூறி ஊர்வசியின் விருப்பத்தை மறுத்து விட்டான். இச்சையும் மோகமும் புறக்கணிக்கப்பட்டு ஏமாற்றமடைந்த ஊர்வசிக்குக் கடுமையான சினம் மூண்டது. தனக்குள்ள சாபம் கொடுக்கும் ஆற்றலைப் பயன்படுத்தி அர்ச்சுனனை ஆண் தன்மை இழந்து பேடியாகுமாறு செய்துவிட்டாள். அர்ச்சுனன் பேடியானான். ஊர்வசியின் சாபத்தால் விளைந்த இந்தக் கோர விளைவை எண்ணி மாளிகையை விட்டு வெளியேறாமலிருந்தான் அர்ச்சுனன். இந்திரன் முதலிய தேவருலகப் பெருமக்கள் வந்து பார்த்து உண்மையைத் தெரிந்து கொண்டனர். ஊர்வசியின் அடாத செயலைக் கண்டிப்பதற்காக இந்திரனும் தேவர்களும் அவளிருப்பிடம் சென்றனர்.

ஊர்வசி, தேவர்களும், இந்திரனும் கூட்டமாக வருவதைக் கண்டு அஞ்சி, “அர்ச்சுனன் தான் விரும்பினால் பேடிவடிவத்தை அடையட்டும், இல்லையெனில் சுய உருவோடிருக்கட்டும்” என்று சாபத்தை மாற்றி விட்டாள். உடனே அர்ச்சுனனுக்குப் பழைய ஆண்மை வடிவம் வந்தது. அவன் கவலை நீங்கி வானவர் கோமான் மனமகிழ இன்னும் சில நாட்கள் விருந்தினனாக அங்கே தங்கியிருந்தான்.

4. இந்திரன் கட்டளை

வானுலகில் விருந்தினனாகத் தங்கியிருந்த நாட்களில் இந்திரன் அர்ச்சுனனைத் தனக்குச் சரிசமமான உபசாரங்களையும் போற்றுதல்களையும் செய்து பேணினான். அர்ச்சுனனின் பெருமையை வாய் சலிக்காமல் தேவர்களுக்கு எடுத்துரைத்தான். இந்திரனுடைய அரசவையிலே அவனுக்கு மிக அருகில் இணையாசனத்தில் வீற்றிருந்தான் அர்ச்சுனன். “வானுலகத்துப் பெருமக்களே! இதோ என்னருகில்