மகாபாரதம்-அறத்தின் குரல்/8. அவையில் நிகழ்ந்தவை

விக்கிமூலம் இலிருந்து

8. அவையில் நிகழ்ந்தவை

ஈரமில்லாத வன்மனம் படைத்த துரியோதனனின் அனவக்குள்ளே கூந்தலைப் பற்றி இழுத்தது. அதே நிலையில் திரெளபதியைக் கூட்டிக் கொண்டு வந்தான் துச்சாதனன். பூனையின் கையில கப்பட்ட உயிருள்ள பசுங்கிளி போல அழுது புலம்பித் துடித்தவளாய் உள்ளே வந்தாள் திரெளபதி. அவளை அந்த நிலையில் காணச் சகியாது தலைகுனிந்து கண்களை மூடிக் கொண்டனர் அவையிலிருந்த அரசர்கள். எத்தகைய அரக்க மனம் படைத்தவர்களையும் இளகச் செய்து விடுமியல்பு வாய்ந்த இந்தக் காட்சியினைக் கண்டு கர்ணன், துச்சாதனன், சகுனி, அரியணையில் வீற்றிருந்த துரியோதனன், ஆகியவர்கள் மட்டும் மனமிரங்காமல் இருந்தனர். ஒருபாவமுமறியாத பெண் ஒருத்திக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதி உலகத்திலேயே ஒரு பெரிய குழப்பமாகி விட்டது. திக்குத் திகந்தங்களெல்லாம் தடுமாறி நிலை குலைந்து தவிடுபொடியாவன போல் தோன்றியது. விண்மீன்களும் வானவெளியும் இரத்தக் குழம்பிலே தோய்த்தெடுத்தாற் போலச் செந்நிறமடைந்தன. கடல்தன் எல்லையைக் கடந்து ‘அக்கிரமங்கள் மலிந்து போன இந்த உலகத்தை விழுங்கி விடப் போகிறேன்’ என்று குமுறிக் கொந்தளித்தும் பொங்கி எழுவது போலத் தோன்றியது. அண்ட சராசரங்களும் தட்டுக்கெட்டுக் கொத்துக் கொத்தாகப் பிதிர்ந்து விழுவது போல ஒரு மயக்கம் நிறைந்த குழப்பம் எங்கும் இலயித்துப் போயிருந்தது.

விழிகளில் அனற்கதிர் வீச அந்த அவையில் திரெளபதி நிறுத்தப்பட்டிருந்த அலங்கோல நிலையைப் பார்த்தான் வீமன். ஆத்திரத்தால் துடித்த அவன் கைகள் கதாயுதத்தை இறுக்கிப் பிடித்தன. அர்ச்சுனனுடைய கரங்களோ வில்லை எடுக்கத் துறுதுறுத்தன. அப்போதிருந்த கோபவெறியில் அவன் கையில் மட்டும் நாணேற்றிய வில் இருந்திருக்குமானால் கெளரவர்களின் வம்சத்தைப் பூண்டு அற்றுப் போகும்படி துவம்சம் செய்திருப்பான். உணர்ச்சிகளுக்கு விரைவில் ஆட்படாத நகுல சகாதேவர்களும் கூட அளவு கடந்த ஆத்திரமடைந்திருந்தார்கள். வீமனுடைய கதாயுதமும், விசயனுடைய வில்லும், நகுல சகாதேவர்களின் ஆத்திரமும், ஒரே ஒரு பொறுமைசாலியின் கட்டளைக்காகத் தயங்கி நின்றன. யார் அந்த பொறுமைசாலி? தருமன் தான். அவனுடைய சாந்த குணமும் பொறுத்துப் போகின்ற இயல்பும் தான் அப்போது அவர்களுக்குத் தடையாக நின்றன.

“ஆத்திரம் வேண்டாம். பொறுத்திருங்கள். அறம் வீண் போகாது. இந்த மூன்று வாக்கியங்களும் மதிப்பிற்குரிய அவர்கள் தமையன் வாயிலிருந்து வெளிப்பட்டு அவர்களின் சகலவிதமான ஆத்திர உணர்ச்சிகளையும் அடக்கிக் கட்டுப்படுத்தியிருந்தன. நெருப்பின் மேல் விழுந்து துடிதுடிக்கும் ஜீவனுள்ள புழுப்போலத் திரெளபதி கதறியழுது கொண்டிருந்தாள். வெந்த புண்ணில் வேல் நுழைவது போல் துச்சாதனன் குறுக்கிட்டுப் பேசினான்.

“இங்கிருப்பவர்கள் எல்லோரும் கொலைகாரர்கள் என்று நினைத்துக் கொண்டாயா நீ? ஏன் இப்படி ஓயாமல் அழுது தொலைக்கிறாய்?. இந்த மாதிரி நீலித்தனங்கள் எல்லாம் பரத்தையர்க்கு உரியவைகள் அல்லவா? நீயும் ஐவருக்கு மனைவிதானே? அதனால் உனக்கும் அந்தப் பரத்தமைக் குணம் உண்டோ என்னவோ?” இது வரை அழுது கொண்டிருந்த திரெளபதி தன் அழுகையை நிறுத்தினாள். அவளுடைய கணவன்மார்களைப் பார்த்தாள். அவர்கள் சொல்லிழந்து செயலிழந்து மூங்கையர்களாய்ச் சிலை போல் வீற்றிருந்தனர். அவள் உள்ளத்தில் தனக்குத்தானாகவே ஒரு துணிவு தோன்றியது. ‘எனக்குத் தேவையானது. நீதி, அதை நானே வாய்திறந்து கேட்கிறேனே?’ என்று தைரியம் அடைந்தாள். அவையிலிருந்த நல்லவர்களை நோக்கித் தன் குறைகளை முறையிடத் தொடங்கினாள்;

“நல்ல உள்ளம் கொண்டவர்களே! சான்றோர்களே! நேர்மை நெறியறிந்த மன்னர்களே ! சூதாட்டத்தில் என் கணவர் என்னைத் தோற்றுவிட்டதாகச் சொல்லி இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். தோற்றிருக்கலாம், ஆனால் தோற்பதற்கும் ஒரு முறை வேண்டாமா? ஒரு நீதி வேண்டாமா? தம்மைத் தோற்குமன் என்னைத் தோற்றி ருந்தால் அது முறையான தோல்விதான். ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தம்மைத் தோற்றப் பின் என்னை அவர் தோற்றிருந்தால் அது முறையான தோல்வியாகுமா? ஒருவர் தம்மையே தோற்றுவிட்ட பிறகு அப்பால் தமது மனைவியை வைத்து ஆடித் தோற்க அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? நான் கூறுகின்ற இந்த வழக்கு அவையிலுள்ள சான்றோர்களுக்குத் தெளிவாகவே விளங்குமென்று எண்ணுகிறேன். எனக்கு நியாயம் வழங்குமாறு வேண்டுகிறேன்.” திரெளபதியின் உருக்கமான, ஆனால் உறுதி நிறைந்த இந்த வேண்டுகோள் அங்குள்ளோரின் மனங்களை இளகச் செய்தது.

ஆனால் செய்வது என்ன என்பது தான் அவர்களுக்கு விளங்கவில்லை. எழுதிவைத்த சித்திரங்களைப் போல அவையிலிருந்த யாவரும் செய்வதறியாமல் திகைத்திருந்த இந்த நிலையில் ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது! கெளரவ சகோதரர்களுக்குள் இளம் பருவத்தின்னாகிய ஒருவன் அவையில் துணிந்து பேசுவதற்கு எழுந்தான். அவன் பெயர் விகர்ணன். திரெளபதியின் வழக்கிலே நியாயமும் நேர்மையும் இருப்பதை அவன் உணர முடிந்தது. உணர்ந்த உள்ளத்தில் துணிவு பிறந்தது. துணிவோடு பேசத் தொடங்கி விட்டான்;

“அவையிலுள்ள பெரியோர்களே! மன்னர்களே! திரெளபதியின் கேள்விக்கு மறுமொழி கூறாமல் ஊமையர்களைப் போல ஏன் மெளனமாக வீற்றிருக்கின்றீர்கள்? அவளுடைய வாதம் நியாயமானது தானே? எப்போது ஒரு மனிதன் தன்னைத் தானே தோற்று மற்றோர் மனிதனுக்கு அடிமையாகி விட்டானோ அப்போதே அவன் யாவற்றையும் இழந்து விட்டான் என்பது தானே முறை? அதன் பின்பு மனைவியைப் பந்தயமாக வைத்துச் சூதாடுவதற்கு அவனுக்கு என்ன உரிமை இருக்கின்றது? அப்படியே அவன் ஆடியிருந்தாலும் அந்த ஆட்டம் செல்லுபடியாகுமா? ஏன் பேசாமலிருக்கிறீர்கள்? உங்களுக்கு கெல்லாம் இந்த வழக்குத் தெரியாமல் போய்விட்டதா? அல்லது தெரிந்திருந்தும் சொல்லுவதற்குப் பயந்து கொண்டு பேசாமல் இருக்கிறீர்களா? உண்மையைக் கூறுவதற்குக் கூட நீங்கள் பயப்பட வேண்டுமா?’ விகர்ணன் இவ்வாறு பேசவும் அவையில் மிக வேகமாக ஒரு கிளர்ச்சி உண்டாகியது. அவனுடைய பேச்சின் கருத்தையும் துணிவையும் அவையிலிருந்தவர்களில் பெரும்பாலோர் வரவேற்றனர். சிலர் அவனைப் போலவே எழுந்து பேசுவதற்கும் துணிந்து விட்டனர்.

நிலைமையை வளரவிட்டு விட்டால் தங்களுடைய சூழ்ச்சியே அழிய நேரிட்டு விடும் என்றஞ்சிய கர்ணன் விகர்ணனைக் கண்டிக்கத் தொடங்கினான். இந்த சிறுவனால்தானே இவ்வளவு கிளர்ச்சிகள் மூண்டுவிட்டன என்று ஆத்திரங்கொண்டிருந்தான் அவன்.

“விகர்ணா! அறவிற் சிறந்த பெரியவர்கள் அடங்கிய இந்த அவையில் வயதிலும் அறிவிலும் இளைஞனாசிய உன் போன்றவர்கள் ஆத்திரம் கொண்டு பேசுவது சிறிதும் பொருத்தமாகாது. நியாயத்தைக் கூறுவதற்கு நீ யார்? உனக்கென்ன தகுதி இருக்கிறது. எங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் நீயாகவே எழுந்து வாதாட உனக்கு அவ்வளவு தைரியம் இருக்கின்றதா என்ன? தருமன் மனைவியைப் பந்தயமாக வைத்து ஆட உரிமையற்றவன் என்றாலும் அவன் தன்னை எங்களுக்குத் தோற்ற போதே தன் மனைவியையும் தோற்றவனாகிறான். ஆகவே அவள் எங்களுக்கு உரியவள் தான். நான் கூறுகிற இந்த உண்மையை அவையோர்கள் சிந்திக்குமாறு வேண்டுகிறேன்.” கர்ணனுடைய வார்த்தைகள் இளைஞனாகிய விகர்ணனை அடக்கி உட்கார்த்தி விட்டன.

சமயமறிந்து கர்ணன் விகர்ணனை அடக்கியது துரியோதனனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அந்த மகிழ்ச்சியின் விளைவாக மற்றொரு தீய செயலுக்கு உறுதி கொண்டது அவன் மனம். அவன் துச்சாதனனை அருகில் அழைத்துக் கட்டளையிட்டான்.

“தம்பீ! உனக்கொரு உற்சாகம் நிறைந்த வேலை தருகிறேன், செய்வாயா?”

“செய்கிறேன் அண்ணா !”

“கேள்! இந்த அவையிலுள்ள யாவரும் காணும் படியாகப் பாண்டவர்களையும் அவர்களுடைய மனைவியான இந்தத் திரெளபதியையும் அவமானப்படுத்த வேண்டும் அல்லவா?”

“கட்டாயம் அப்படியே செய்ய வேண்டும் அண்ணா !”

“அப்படியானால் அவர்கள் ஆறு பேர்களுடைய ஆடைகளையும் களைந்து விடு தம்பீ!” துரியோதனன் உற்சாகத்தோடு பாண்டவர்களை நோக்கிச் சொன்னான். தன்மானம் மிக்க பாண்டவர்களை அந்த அயோக்கியனின் கரங்கள் தீண்டி ஆடைகளைப் பறிப்பதை விரும்பவில்லை, மேலாடைகளையும் பிற ஆபரணங்களையும் ஐந்து பேரும் தாமாகவே கழற்றி அவன் முன் வீசி எறிந்து விட்டார்கள். சின்னஞ்சிறிய அரை ஆடைகளுடனே காணக் கவர்ச்சியில்லாத தோற்றத்தோடு பாண்டவர் நின்ற நிலையைக் காணச் சகிக்காமல் அவையோர் தலைகுனிந்தனர்.

கொடிய உள்ளமும் வலிய எண்ணமும் தவிர ஈரமும் கருணையும் இன்னவென்றறியாத துச்சாதனன், திரெளபதி யை மானபங்கம் செய்வதற்காக அவளை அணுகினான். அங்கே கூடியிருந்த ஆண்மையாளர்கள் அத்தனை பேருக்கும் மனத்தைக் கொதிக்க வைக்கும் காரியத்தைச் செய்ய இருந்தான் அவன். ஆனால் கொதிக்க வேண்டிய மனங்கள் எல்லாம் உணர்வொழிந்து கிடந்தன. எல்லா ஆண்மக்களும், பாண்டவர்களுட்படக் கல்லாலடித்த சிலைகளாக இருந்து விட்டனர்.

திரெளபதியின் விழி மலர்களிரண்டும் ஆறாகக் கண்ணீர் சொரிந்தன. அவிழ்ந்து பிரிந்து கிடந்த கூந்தல் முதுகை மறைத்தது. ஒரு கையினால் தன் அரையாடையை இறுகப் பற்றிக் கொண்டாள். மற்றோர் கை மார்புத் துகிலைக் காத்துக் கொண்டிருந்தது. உடல் சோர்ந்து துவண்டது. பயம் சோர்வை உண்டாக்கியது. இந்த அநியாயம் நடப்பதற்குள் மண் பிளந்து என்னை விழுங்கி விடக் கூடாதா? என்றெண்ணித் துன்பம் துடைக்கும் இன்பப் பொருளாகிய கண்ணபிரானிடம் தன் மனத்தைச் செலுத்தினாள். மனம், ‘கண்ணா! உன் அடைக்கலம். நீ காப்பாற்றினால் மானம் பிழைக்கும், கைவிட்டால் மானம் அழிந்து விடும். கருணை வள்ளலை காப்பாற்று’ என்ற தியானத்திலேயே மூழ்கியிருந்தது. வாயோ அவன் திருநாமமாகிய ‘கோவிந்தா!’ ‘கோவிந்தா!’ என்பதையன்றி வேறொன்றும் கூறியறியாது. தன்னைத்தானே காத்துக் கொள்ள முடியும் என்ற அகங்காரம் அவளை விட்டு அகன்றது. ‘உடல், பொருள், ஆவி மூன்றும் இறைவனுக்குச் சொந்தம். அவன் விரும்பினால் காக்கட்டும், விரும்பாவிட்டால் விரும்பியபடியே செய்யட்டும்’ என்று தன்னைக் கண்ணபிரானிடம் ஒப்படைத்தாள்.

இறைவனை நோக்கிச் செய்த இந்த ஆத்ம சமர்ப்பணம் வரப்பிரசாத சக்தி வாய்ந்ததாக இருந்தது. திரெளபதியின் மானத்தை அன்று காப்பாற்றிக் கொடுத்தது இந்த ஆத்ம சமர்ப்பணம் ஒன்றுதான். துச்சாதனனுடைய முரட்டுக் கரங்கள் அவளுடைய ஆடையின் தலைப்பைப் பற்றிப் பரபரவென்று இழுத்தன. ஆடை சுற்றுச் சுற்றாகப் பெயர்ந்து விழுந்தது, துச்சாதனன் பேய்ச் சிரிப்புச் சிரித்தான். மேலும் மேலும் தலைப்பைப் பற்றி இழுத்துக் கொண்டேயிருந்தான். அவையில் குனிந்த தலைகளுடன் வீற்றிருந்த பெருமக்கள் இரக்கம் நிறைந்த சிறு சிறு குரல்களை எழுப்பினர். திரௌபதியின் மானம் இன்னும் ஓரிரு கணங்களில் பாழ் போய் விடப் போகிறதே என்று பதறினர்.

ஆனால் என்ன விந்தை? என்ன பேராச்சரியம்? களிப்போடு பார்த்துக் கொண்டிருந்த துரியோதனன் கண்களில் பயச்சாயை படிந்தது. துச்சாதனன் கைகள் சோர்கின்றன. திரெளபதியின் மெய்யில் ஆடை பெருகி வளர்ந்து கொண்டே போகிறது. வேதங்களாலும் காணமுடியாத பரம் பொருளின் சொரூபத்தைப் போலத் திரௌபதியின் துகில் மறைத்த சரீரம் காணாப் பொருளாய் நின்றது. துச்சாதனனைச் சுற்றிலும் துகில்கள் மலை மலையாகக் குவிந்துவிட்டன. என்ன மாயமோ? என்ன மந்திரமோ? உரிய உரியத் துகில்கள் வளர்ந்து கொண்டிருந்தன. துச்சாதனன் மலைத்தான். அவன் உள்ளத்தில் பீதியும் திகைப்பும் தோன்றின. கைகளும் உடலும் களைத்து ஓய்ந்து ஒடுங்கிவிட்டன. ஆற்றாமை உடலைத் தள்ளாடச் செய்தது. அவை எங்கும் குவிந்து கிடந்த சேலைக் குவியல்களைச் சேவகர்கள் அப்புறப்படுத்திக் கொண்டி ருந்தனர். தள்ளாடியவாறே அந்தச் சேலைக் குவியலின் மீது பொத்தென்று விழுந்தான் துச்சாதனன். கூப்பிய கரங்களுடன் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தவாறு நின்று கொண்டிருந்தாள் திரெளபதி. பக்தி பரவசத்தினால் மனம் பூரிக்க முகமலர்ச்சியோடு நின்று கொண்டிருந்த அவள், தோன்றாத் துணையாயிருந்து தன்னைக் காத்த பரம் பொருளுக்கு நன்றி செலுத்திக் கொண்டிருந்தாள்.

வீட்டுமர், துரோணர் முதலிய முதுமக்கள் “ஆகா இந்தப் பெண்ணினுடைய கற்பை இறைவனே துணையாகிக் காக்கிறானே. இவள் வணங்கத் தக்க தூய்மையுடையவள்” என்று கூறிப் பாராட்டினர். கதாயுதத்தைப் பற்றியிருந்த வீமனின் கரங்கள் ஆயுதத்தின் தண்டை முன்னிலும் அதிக ஆத்திரத்தோடு இறுக்கிப் பிடித்தன. குகையிலிருந்து புறப்படுகின்ற ஆண் சிங்கம் போலத் தன் இடத்திலிருந்து எழுந்தான் அவன். “திமிர் பிடித்த கெளரவர்களே! கேளுங்கள். எங்கள் தமையனுடைய சாந்த குணத்துக்குக் கட்டுப் பட்டுத்தான் இது வரை வாளாவிருந்தோம். உங்களுக்கு அஞ்சி நாங்கள் கட்டுண்டு கிடப்பதாக நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களை ஆண்மையுள்ள மனிதர்களாகவோ, வீரர்களாகவோ நான் எண்ணவேயில்லை. நீங்கள் பேடிகள், பெண்களின் முந்தானையோடு மட்டும் போராடத் தெரிந்தவர்கள்! எங்கே பார்க்கலாம்? உங்களுக்கும் ஆண்மை இருக்குமானால் இப்போது என் ஒருவனோடு நூறு பேரும் போருக்கு வாருங்கள் பார்க்கலாம்.” வீமனுடைய முழக்கம் அவையையே கிடுகிடுக்கச் செய்தது.